போகவேண்டிய ஊருக்கான
பயணப்பாதையைத் திட்டமிட்டு
வரைபடமாய் மனதில் பூட்டிதான்
வண்டிமாடுகளைப் பூட்டுகிறேன்.
சென்றமுறைகளில் நிகழ்ந்ததுபோல்
திசைமாறிவிடக்கூடாது என்பதில்
திடமாய் இருப்பதோடு
கண்ணயர்ந்துவிடக்கூடாது என்பதிலும்
கவனமாய் இருக்கிறேன்.
சாட்டை சுழற்றிச் சுழற்றி
சரியான பாதையை உறுதிசெய்து
காளைகளை விரட்டுகிறேன்.
கொம்புச்சலங்கைகள் குலுங்கி இசைக்க...
நுகத்தடிக்குள் நுழைக்கப்பட்டத் தலைகள்
நுண்ணிய தாளலயத்துடன் இடவலமாட....
எட்டுக்கால்கள் எட்டுவைத்துப் புழுதி கிளப்பியோட...
உற்சாகக் கொப்பளிப்போடு
வாலினை முறுக்கி,
விரசாய் முடுக்கி,
தார்க்குச்சியினையும் பதிக்க….
தறிகெட்டோடுகின்றன காளைகள்!
மனமெழுதிய பாதைகள்
வகையாய் கண்வயப்பட...
நிதானம் வெல்லும் மமதை
மெல்லக்கிளர்ந்தெழுந்து பார்வை மறைக்க...
தடுமாறிய கால்கள்
தடம் மாறிய உணர்வற்று
முன்னேறிய பயணத்தின்
துணுக்குற்ற கணமொன்றில் துடித்துப்பதறி....
பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
பின்னிழுக்க இயலாது
பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.
முடிவில் நின்றிருக்கிறேன்,
முந்தையப் பயணங்களைப் போலவே,
பார்த்தறியா ஊரின் மத்தியில்……
நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
காளைகளைச் சபித்தபடியே!
Bookmarks