யானை வரைவதென்றால்
மிகவும் பிடிக்கும் அவனுக்கு.
பெரிய காதுகள் கொண்டு
திரும்பி நிற்கும் யானைகளையே
அவன் வரைய பழகியிருந்தான்.
அதன் வால்பகுதியை
மிகுந்த கவனம் கொண்டு வரைவான்.
எத்தனை முறை கேட்டும்
யானையின் முகத்தை அவன்
வரைந்ததே இல்லை.
அவன் கையெழுத்திடும் பொழுதும் கூட
திரும்பி நிற்கும் யானை ஒன்றையே
மிக சிறியதாய் வரைந்து கையெழுத்திட்டான்.
நானும் அவனும் மட்டுமிருந்த ஓர் நாளில்
மிக நீண்ட வற்புறுத்தலுக்கு பின்
யானையின் முகம் தெரியும்படி
அவன் வரைந்த ஓவியம்
யானை போலவே இல்லை.
Bookmarks