Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Post மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

    அன்பு நண்பர்களே,

    தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை குறித்த செய்தி எனக்கு சில தினங்களுக்கு முன்னரே கிடைத்தது. முன்பு மக்கள் தொலைக்காட்சியில் அவரது நேர்காணலை வாய்ப்பு அமையும் போதெல்லாம் பார்த்த எனக்கு, மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைபட்ட போது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இப்போது அவரது கட்டுரைகள் வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. அக்கட்டுரைகளை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.


    மொழிப்பயிற்சி - 1:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்

    கவிக்கோ ஞானச்செல்வன்


    ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...


    அச்சுறுத்த வேண்டா:-
    "தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.

    தமிழில்,

    "எழுத்தெனப் படுவ

    அகரமுதல் னகர இறுவாய்

    முப்பஃது என்ப...''*

    என்றார் தொல்காப்பியர்.

    ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.
    கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?

    ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.

    அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.
    என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

    தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.

    தமிழ் இயற்கை மொழி:-
    மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.

    எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?'' என்போமன்றோ? வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ". சற்று அதிகம் திறந்தால் "ஆ" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

    ஒலிப்பு - உச்சரிப்பு:-
    இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.
    நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.
    தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.

    தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.

    தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.
    தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.

    "தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

    "என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.

    நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.

    இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

    நுண்ணொலி வேறுபாடுகள்:-
    தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.

    அதனால், "சார் இங்கே என்ன "ல"னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.

    பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.

    மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல"கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள"கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ"கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

    இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

    எடுத்துக்காட்டுகள்:-

    தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);

    தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);

    வால் - தூய்மை (வெண்மை)

    வாலறிவன், வாலெயிறு;

    வாள் - வெட்டும் கருவி,

    வாழ் - வாழ்வாயாக

    இப்படிப்பல காட்டலாம்.


    தமிழ் வளரும்.....


    நன்றி : தினமணிக்கதிர்
    Last edited by பாரதி; 23-02-2012 at 09:00 AM. Reason: தலைப்பு எண்ணை மாற்ற...

  2. Likes kulakkottan liked this post
  3. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி பாரதி...

    மன்றச் சீத்தலைச் சாத்தனார் நீ..

    இப்பதிவைக் பகிரப் பொருத்தமானவனும் நீ..

    பிழையின்றி தமிழ் எழுதப், பேசத்தெரிவதில் பெருமிதம் உண்டெனக்கு..
    அதையொட்டி நான் கிறுக்கிய கவிதை - என்ன தெரியும் எனக்கு?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி கூறுதல் அவசியமா அண்ணா...?
    --------------------------------------------------------------------------------------
    மொழிப் பயிற்சி- 2:- பிழையின்றித் தமிழ் - பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    இடையின ரகரம், வல்லின றகரம்:-

    இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

    ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
    க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
    தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.

    சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள்.

    சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)

    கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

    "ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-


    மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம்.

    தமிழ் எழுத்துகளின் வரிசையில்
    "ட" பின் வருவது டண்ணகரம்;
    "த"பின் வருவது தந்நகரம்;
    "ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.

    இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகி விடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

    பனி - குளிர்ச்சியானது
    பணி - பணிந்து போ, தொண்டு
    பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை
    அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.

    எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

    சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-

    1. கோர்வை, கோர்த்து:-
    அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.
    சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).

    2. முகர்ந்து:-
    மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது.

    முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.

    3. முயற்சிக்கிறேன்:-
    "உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
    உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.

    ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

    4. அருகாமையில்:-
    என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
    இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

    5. முன்னூறு:-
    "நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும்.
    முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும்.
    மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும்.

    இலக்கியச்சான்று:- "பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே".

    (தமிழ் வளரும்)

    நன்றி : தினமணிக்கதிர்

  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தனிப்பட்ட அன்புக்கு நன்றி தேவையில்லை..
    தமிழ்ப்பணிக்கு சொல்லலாம்... பாரதி..

    ----------------------------

    சுவற்றில், அருகாமை, முகர்ந்து --- சரிபோல உலவும் பிழைகள்..

    தகர்+ஆறு = அழிவு வழி... பொருள் கற்றேன்..


    நற்பணி தொடர்க!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்

    அண்ணா, கவிக்கோ அவர்களின் உரையைக்கேட்கும் போது அருமையாக இருக்கும். இப்போதைக்கு கட்டுரையாவது கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைய வேண்டியதிருக்கிறது. நான் தேடியதில் பகுதி - 3 இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கும் போது அதை இங்கு இணைப்பேன்.

    இப்போது பகுதி - 3 ஐ இங்கு பதிக்கிறேன். அருமை நண்பர்
    திரு.இராஜேஸ்வரன் அவர்கள் கவிக்கோவின் புத்தகத்தை வாங்கி பகுதி-3ஐ எனக்கு தட்டச்சி அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நன்றி. அவருடைய தமிழ்த்தொண்டிற்கு தலை வணங்குகிறேன்.(14.05.2013)
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    மொழிப்பயிற்சி - 3:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    6. சில்லரை :-

    ஒரு ரூபாயில் சிறிய பகுதிகளோ, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனும் எந்தத் தொகையிலும் வரும் சிறிய பகுதிகளே அவை. சிலவாக அறுக்கப்பட்டவை (பிரிக்கப் பட்டவை) ஆதலின் சில்லறை என்றே எழுதுதல் வேண்டும். சில அரை எனில் அரை அரையாகத்தான் அளவிடல் முடியுமன்றி கால், அரைக்கால் என்னும் சிறியவற்றை அது குறிப்பிடல் இயலாது. 10 காசு 50 காசு முதலியவை ஒரு ரூபாயில் சில்லறை; 50 ரூபா 100 ரூபா ஆயிரத்துள் சில்லறை. இப்படியே அடுக்கிஸ் செல்லலாம். ஆதலின் சில்லறையே சரியான பொருள் கொண்ட சொல்.

    7. கருப்பு :-

    கருப்பினத்தலைவர், கருப்புப்பணம் என்றெல்லாம் செய்தித் தாள்களில் பார்க்கிறோம். கறுப்பினத்தலைவர், கறுப்புப்பணம் என்று வல்லினம் இட்டு எழுத வேண்டும். கருப்பு என் இடையினம் போட்டால், பஞ்சம் என்று பொருள். கரிய, கருமை என்னும் போது இடையின 'ர' வரினும் கறுப்பு என்று எழுதும் போது மட்டும் வல்லின 'று' தான் போட வேண்டும்.

    தமிழ்ப் பேரகராதி, சிற்றகராதி எதிலும் சரிபார்த்துக் கொள்க. கருப்புப் பட்டியல் எனில், பஞ்சப்பட்டியல் என்றே பொருளாம்.

    8. மேனாள் :-

    இப்போதெல்லாம் முன்னாள் அமைச்சர், முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டு வந்த இடங்களில், மேனாள் அமைச்சர், மேனாள் தலைவர் என்று எழுதுகிறார்கள். புற நானூற்றில் வந்துள்ள மேனாள் என்னும் சொல்லுக்கு நேற்றைக்கு முந்திய நாள் (மேல்+நாள்) எனும் பொருளே காண்கிறோம். 'நெருநல் உற்ற செருவிற்கு.....' என்ற வரியின் முன் 'மேனாள் உற்ற செருவிற்கு.....' எனும் வரி இடம் பெற்றுள்ளது.

    முன்னாள் எனில் அது நேற்றாகவும், பல நாள் முன்னாகவும், பல திங்கள், பல ஆண்டு முன்னதாகவும் பொதுத் தன்மை கொண்டுள்ளது. இந்தப் பொருள் மேனாளில் இல்லை. இதனை எழுதத் தெரியாதவர் மேநாள் என்று எழுதிவிட்டால், அது மே தினத்தைக் (மே-1) குறிக்கும். பழைய நாளில் பதவியில் இருந்தோரை முன்னாள் என்றே குறிப்போமாக.

    9. இயக்குனர் :-

    இயக்குநர், நடத்துநர், ஓட்டுநர் போன்ற சொற்களை இப்போதும் இயக்குனர், நடத்துனர், ஓட்டுனர் என்று பிழையாக எழுதுகிறார்கள். இச்சொற்களைப் பிரித்து (இயக்கு + அன் + அர்) பின் சேர்த்தால் இயக்கனர், நடத்தனர் என்றுதான் வரும் ('கு' வில் உள்ள உகரம் கெட்டு 'க' ஆகிவிடும்). மாறாக இயக்கு, நடத்து, ஓட்டு எனும் சொற்களோடு 'நர்' எனும் சிறப்பு விகுதியைச் சேர்த்தால், எந்த மாற்றமும் வராது. 'கேட்குந போலவும், கிளத்துந போலவும்' என்று தொல்காப்பியம் தொடங்கி, உப்புவிலை பகருநர், மீன்விலை பகருநர், நெடுந்தேர் ஊருநர், செம்பு செய்நர், மணி குயிற்றுநர் என்று சிலப்பதிகாரத்திலும் கண்டு கொள்க.

    10. உளமாற :-

    நீடுழிவாழ உளமாற வாழ்த்துகிறேன் என்று சிலர் எழுதுகிறார்கள். உள்ளம் மாறிவிட வாழ்த்துகிறேன் என்பது இதன் பொருளாகும். (உளம் + மாற) ஆனால், நினைத்த பொருள் இதுவா? மனம் நிரம்ப வாழ்த்துகிறேன் என்பதுதானே நம் கருத்து. ஆதலின் மனம் + ஆர (ஆர = நிரம்ப, பொருந்த) எனும் பொருளில் 'மனமார வாழ்த்துகிறேன்' என் எழுதுதல் வேண்டும்.

    11. அளப்பறியன :-

    அவர் ஆற்றிய பணிகள் அளப்பறியனவாகும் என்றும் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஆற்றிய பணிகள் அளப்பதற்கு முடியாத (நிறைந்த) பணிகள் என்பதுதானே நாம் கருதும் பொருள். அப்படியாயின் அளப்பரியன என்றுதானே எழுதிட வேண்டும். இதை விட்டு அளப்பறியன என்றால் ஒரு பொருளும் இன்றிக் குழப்பம் தோன்றும். எதை அறிய.....? எதை அளக்க....?

    அளப்ப + அரிய = அளப்பரிய என்பதுதான் சரியான சொல்.

    12. அன்னாளைய தலைவர் :-

    முன் ஒரு சமயம் தலைவராய் இருந்தவரைக் குறிக்க ஒரு சிலர் அன்னாளைய தலைவர் என்று ஏடுகளில் எழுதி வருகிறார்கள். அ+நாள்=அந்நாள் என்பது சரியான சொல். அந்தநாள் தலைவர் என்னும் பொருளை மனதில் எண்ணி, அன்னாள் என்று எழுதுவது பிழையன்றோ? இது ஏதோ ஒரு பெண்ணின் பெயரைப் போல் தோன்றுகிறதே! இவ்வாறே இப்போது தலைவராய் இருப்பவர் இந்நாள் தலைவர் ஆவார். இவரை இன்னாள் ஆக்கிவிட்டால், இல்லாதநாள் தலைவர் ஆகிவிடுவார். கவனம் வேண்டும்.


    ======================================================

    மொழிப்பயிற்சி - 4:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    13.பண்டகசாலை:-
    பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம்.

    பின் ஏன் சாலை என்று ஒரு சொல்? உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

    14.பதட்டம்:-
    நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

    15.கண்றாவி:-

    இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

    ஊர்ப் பெயர்த் திரிபுகள்:-

    பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

    அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம்.
    அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?

    செய்ய நீர் (சிவந்தநீர் - புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

    தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை" என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது? ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன.

    காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

    வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன.

    (பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்" போடாமல் எழுத வேண்டும். (கோடுதல் - வளைதல்; கோட்டம் - வளைவு) ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை.

    "ட" எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.

    தமிழ் வளரும் ...

    நன்றி:- தினமணி கதிர்
    Last edited by பாரதி; 14-05-2013 at 01:41 PM.

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்தேனும் இருக்க வேண்டியது.

    படிக்காமல் பதிலிடும் முறை இல்லை என்னிடம்.

    ஆனால் படிப்புக்குப் பாராட்டும் உற்சாகமும் கொடுக்க முறை தவறுகிறேன் இப்போது..

    நன்றியும் பாராட்டும் பாரதிண்ணா!

    தொடருங்க\ள்.

  8. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அமரன். உங்கள் பாராட்டு கவிக்கோ அவர்களையே சாரும்.
    =====================================================

    மொழிப்பயிற்சி - 5:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ? அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம் - குடம்). அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர். "திரு" எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம். (அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர். இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று? திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
    - அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி)
    - எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்)
    விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம் - மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா?
    சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.

    சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா - சோலை) "திரு" என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று. இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள். இது சரிதானா? திருத்தப்பட வேண்டாவா?

    நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது. மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது. இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம் - மயில்). இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள். மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?

    ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள். பரம்பொருள், ஒப்பு - நிகர் அற்றது அன்றோ? இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா? உப்பிலியப்பன்கோவில்.

    ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி - உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள். கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா? தமிழை அறியாத கொடுமையல்லவா இது?

    ஒற்று மிகுதலும் மிகாமையும்,ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர்.

    வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும்.
    ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப - என்பவை மிகும்.
    சில இடங்களில் மிகா.
    சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.

    எதற்கையா இந்த வம்பு?
    க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள். வாழை பழம், கீரை கறி - படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா? வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம். இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும். பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

    மருந்து கடை - மருந்தைக் கடை
    மருந்துக்கடை - மருந்து விற்கும் கடை

    ஏழை சொல் - ஏழையின் வார்த்தை
    ஏழைச்சொல் - ஏழு எண்ணிக்கையைச் சொல்

    வேலை தேடு - ஒரு வேலையைத் தேடிக் கொள்
    வேலைத் தேடு - வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு

    நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது
    நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)

    சாகாடு - வண்டி
    சாக்காடு - சாவு, மரணம்

    கைமாறு - ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது
    கைம்மாறு - நன்றிக்கடன்

    பொய் சொல் - பொய் சொல்வாயாக
    பொய்ச்சொல் - பொய்யான சொல்

    தமிழ் வளரும்...

    நன்றி:- தினமணி கதிர்

  9. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பல ஊரின் பெயர்கள் இதுபோல மாற்றம் பெற்றுள்ளன."மாமல்லபுரம்" "மஹாபலிபுரம்" ஆயிற்று."திருமுதுகுன்றம்" "விருத்தாசலம்"ஆயிற்று."திருமறைக்காடு","வேதாரண்யம்" ஆயிற்று."பூவிருந்தவல்லி","பூந்தமல்லி" ஆயிற்று."திருவல்லிக்கேணி","ட்ரிப்லிகேண்" ஆயிற்று."மயிலாடுதுறை","மாயவரம்" ஆயிற்று.மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" " "அம்பட்டன் வாராவதி" என்று மாறி பிறகு ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கூடுதல் விளக்கத்திற்கு நன்றி ஐயா.
    மைலாப்பூர், பூவிருந்தவல்லி ஆகிய ஊர்களை அவ்விதம் அழைப்பது பிழை எனவும் அவற்றை முறையே மயிலாப்பூர், பூந்தண்மலி என்றழைப்பதே சரி என அவர் விளக்கி இருக்கிறார். பின்னர் வரும் பகுதிகளில் அவை வரும்.

  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    மிகவும் பயனுள்ள தகவல்

    நாம் தமிழில் ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக தமிழ் வார்த்தைகளை கொணர்வது பற்றி யோசிக்கிறோம் ஆனால் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகளில் எத்தனைப் பிழைகள் அவற்றை முதலில் அறிந்து, நீக்கி செம்மை செய்ய வேண்டும்

    இத்தனைப் பதிப்புவரை
    இதை அறியாமல் தவறிழைத்தேன்

    தொடருங்கள் பாரதி அவர்களே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அரிய பணிக்குப் பாராட்டு பாரதி...

    சிந்துபூந்துறை -- பூந்துறையாகி, பூத்துறையாகி, பூத்ரை ஆன கதை எல்லாம் உண்டு..

    மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வகைக் கட்டுரைகள் முதல் படி..

    தொடர்க...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  13. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    வல்லெழுத்து மிகும் இடங்கள்

    ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு நன்றி நிவாஸ், அண்ணா.
    ====================================================

    மொழிப்பயிற்சி - 6:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.

    அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்:- சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
    சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.

    சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.

    தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
    பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?

    கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?

    கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும் சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.

    வல்லெழுத்து மிகும் இடங்கள்:

    1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
    (எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
    அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

    2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
    (எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

    3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
    (எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

    4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
    (எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

    5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
    (எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

    6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
    (எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

    7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
    (எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

    8.பண்புத் தொகையில் மிகும்.
    (எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

    9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
    (எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

    10. உவமைத் தொகையில் மிகும்.
    (எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.

    தமிழ் வளரும்....

    நன்றி:- தினமணி கதிர்

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •