Page 7 of 15 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 ... LastLast
Results 73 to 84 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #73
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 28:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா?
    (அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.

    வெகுளிப் பெண்
    கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம்.
    பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது" என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது, கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.

    "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது"
    ஆகக் "கோபக்காரியை" "அப்பாவி" ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!

    குண்டுமணி:-
    காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம்.
    பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது.
    "ஒரு குண்டுமணி" தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
    பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு.
    குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு.
    முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா?
    இல்லை. அதன் பெயர் குன்றிமணி.

    திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது.
    "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
    மூக்கிற் கரியா ருடைத்து"
    என்பது ஒரு குறள்.

    குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.

    "கேவரு" தெரியுமா உங்களுக்கு?
    அதுதான் கேவரகு.
    இச்சொல்லி இடைக்குறையுள்ளது.
    அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்" எனும் எழுத்துக் குறைந்துவிட்டது.
    சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது.
    உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.
    என்ன தமிழோ இது?

    "வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது" என்று செய்தி படித்தார்கள்.
    தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும்.
    தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.
    ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம்.
    தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.

    கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள் - இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை.
    ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.
    கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள்.
    கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள்.
    கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல்
    சரியாம்..
    உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை.
    கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.
    கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம்.
    இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது.
    பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.
    இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும், கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும்.
    ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம்.
    எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

    பிறமொழிக் கலப்பு:-
    தமிழர் தம் எழுத்திலும், பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.
    முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே.
    அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம்.
    வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

    தமிழ் வளரும்.......


    நன்றி:- தினமணி கதிர்

  2. #74
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மொழிக்கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பேச்சு வழக்கில் நாம் செய்யும் தவறுகளை அறிந்துகொள்ள நேரிட்டது. தொடரட்டும் தங்களின் நன் முயற்சி.

  3. #75
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெகுளியின் பொருள் அறிந்து வியந்தேன். பல இடங்களிலும் அப்பாவித்தனம் என்பதற்கு வெகுளி என்ற வார்த்தை இயல்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிரடித் தாக்குதல் என்று பொருள்படும் ஆங்கிலவார்த்தையான assault என்பதற்கு அலட்சியமாக இருந்தான் என்று தவறான பொருள் கொள்வது போலத்தான் இதுவும் போலும்.

    அசட்டையாக இருந்தான் என்பதைத்தான் அசால்ட்டாக இருந்தான் என்று மாற்றிவிட்டனரோ?

    பல தவறுகளை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

  4. #76
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்களுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா, கீதம்.
    -----------------------------------------------------------
    மொழிப் பயிற்சி - 29:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    சமக்கிருதம் அல்லாது பல்வேறு மொழிகள் காலந்தோறும் தமிழில் வந்து கலந்தன. அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்களும், போர்ச்சுக்கீசியச் சொற்களும், உருது, தெலுங்கு, கன்னடச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன. ஆங்கில மொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழில் கலந்து இந்நாளில் ஆதிக்கம் (மேலாண்மை) செய்கின்றன.

    இப்போதெல்லாம், நமஸ்காரம், ஸந்தோஷம், சுபமுகூர்த்தப் பத்திரிகை, வந்தனோபசாரம், ஷேமம், அக்கிராசனர், காரியதரிசி, பொக்கிஷதாரர், பாஷை போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவாகவே உள்ளனர்.

    இவற்றை நல்ல தமிழில் வணக்கம், மகிழ்ச்சி, திருமண அழைப்பு, நன்றி நவிலல், நலம், தலைவர், செயலாளர், பொருளாளர், மொழி என்று சொல்லுதல் பெருகியுள்ளது. மிகச் சிலரே நமஸ்காரம், ஸந்தோஷம் என்பனவற்றை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர்.
    ஆனால், இதற்கு இணையாக - இன்னும் மேலாக ஆங்கிலச் சொற்கலப்பு அன்றாடம் தமிழர் வாழ்வில் நிகழ்கிறது.

    காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், தாங்ஸ், சாரி, வெரி நைஸ், சூப்பர், ஓகே ஓகே, மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, ஷோ, நியூஸ்,ரைஸ், ஃபிரை, மட்டன், ஃபிஷ் இப்படி எத்தனை எத்தனையோ!

    யாரும் முழுமையாகத் தமிழில் பேசுவதில்லை.
    ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார்.
    "சார் நம்ப சிஸ்டர் மேரேஜ் தஞ்சாவூர்ல கம்மிங் ஃபிரைடே நடக்குது சார், நீங்க ஷியூரா வந்துடணும்''!
    இப்படிச் சொல்லி அழைக்கிறார்.

    இன்னொருவர் பேசுகிறார்:-
    "டியர் ஃபிரண்ட்ஸ், உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ். எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கெல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க"!
    இப்படித்தான் நம் தமிழர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு வகைப் பேச்சும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. அது ஒருவகையான தமிழ். பண்ணித் தமிழ்! சினவாதீர்! சிரிக்காதீர்! இதோ கேளுங்கள்:
    "நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப்பத்தி திங் பண்ணி அவனுக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே போய் ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆஃப் பண்ணி, ஃபேனை ஆன் பண்ணி... ''
    இப்படி எத்தனை பண்ணிகளை இணைத்து நாம் தமிழ் பேசுகிறோம்... எண்ணிப் பார்த்ததுண்டா?

    நமது தொலைக்காட்சிகளில் பல நேரங்களில் கீழ்வருமாறு வருணனையாளர் பேசுவதைக் கேட்கிறோமே.
    "ஹலோ வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா? எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ ஃபோர் சிக்ஸ் எய்ட்.'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

    நம்மில் பலரும் தமிழ்ச் சொல் என்று கருதுகின்ற பிறமொழிச் சொற்கள் பலவுண்டு. அவை ஏராளமாகத் தமிழில் கலந்துள்ளன. ஈண்டு ஏராளமாக என்ற சொல் உள்ளதே அது தெலுங்குச் சொல். அதற்குத் தமிழ் ”மிகுதியாக” என்பதே.

    எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டன என்று சொல்லுகிறோம். "கச்சிதம்" தெலுங்குச் சொல். இதற்கு ஒழுங்கு என்பதே பொருள்.
    கெட்டியாகப் பிடித்துக் கொள் என்பதில் "கெட்டி"யாக எனும் சொல் தமிழில்லை என்று யாராவது நினைப்பார்களா?
    அதுவும் தெலுங்கே. அதன் பொருள் " உறுதி"யாக.

    "அக்கடா" என்று கிட என்று சொல்லுகிறோமே. இந்த அக்கடா என்பது கன்னடச் சொல். இதற்கு "வாளா இருத்தல்" என்பதே தமிழ்.

    "தராசு" என்பதற்கு துலாக்கோல் என்போம். தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது.

    "தயார்" என்பதைத் தமிழில் ஆயத்தம் எனலாம். தயார் என்பதும் பாரசீகச் சொல்லே.

    "மைதானம்" என்பது அரபிச் சொல். திடல் என்பது தமிழ்.
    விலை ரொம்ப "ஜாஸ்தி" என்பதும் அரபிச் சொல்லே. மிகுதி என்பது தமிழ்.

    அறைகூவல் எனும் பொருளுடைய "சவால்" என்பதும் அராபியே.
    "பஜார்" என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி.
    "மிட்டா மிராசு" (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே.
    "முலாம்" (மேற்பூச்சு) அராபியச் சொல்.
    "மாமூல்" என்பதும் அராபி. பழைய வழக்கப்படி என்று தமிழில் சொல்லலாம்.
    இப்போதெல்லாம் தயிர்ச்சோற்றைக் கூடத் தமிழில் நாம் சொல்லுவதில்லை. பகாளாபாத் என்கிறோம். "பாத்" எனில் சோறு.
    பகாளபாத் - இந்துஸ்தானிச் சொல். (இந்தி வேறு, இந்துஸ்தானி வேறு)
    - அலமாரி (பேழை)
    - சாவி (திறவுகோல்)
    - ஜன்னல் (காலதர்- காற்று வழி)
    - பாதிரி (கிறித்துவத் தொண்டர்)
    இவை போர்த்துக்கீசியச் சொற்கள்.

    - நிம்மதி (கவலையின்மை)
    - சரக்கு (வணிகப் பொருள்)
    - தொந்தரவு(தொல்லை)
    - வாடகை (குடிக்கூலி)
    - எச்சரிக்கை (விழிப்பாயிரு)
    எல்லாம் தெலுங்குச் சொற்கள்.

    தமிழ் வளரும்.......

    நன்றி:- தினமணி கதிர்

  5. #77
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 30:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    நாம் மறந்துவிட்ட தமிழை, மறக்காத தமிழர்கள்!
    தாய்த் தமிழ்நாட்டு மக்களைவிட, ஈழத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
    அவர்களின் உரையாடல்களில் ஆங்கிலக் கலப்பு நம்மைவிடக் குறைவாகவே உள்ளது.

    புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளார்கள். அவர்களின் தமிழ் ஒலிப்பு முறை சற்றே வேறுபட்டிருக்கும். அதனால் நமக்குச் சில சொற்கள் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கலாம். ஆயினும் கூடிய வரை அவர்கள் தமிழில் "கதை"க்கிறார்கள்.

    இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மலை நாட்டிற்கு (மலாயா) வேலை தேடிச் சென்றவர்களின் வழித் தோன்றல்கள் - மூன்றாம், நான்காம் தலைமுறையினர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். தோட்டம், தொழில், வணிகம், அலுவல் சார்ந்த அனைத்து நிலைகளிலும் நல்ல வண்ணம் இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டுத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழை மறக்காமல் இருக்கும் அம்மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.
    மொழியை மட்டுமன்று, நமது விருந்தோம்பல், ஒப்புரவு, இனிய பேச்சு, கடவுள் வழிபாடு முதலிய பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிக் காத்து வருகிறார்கள்.
    "ஐயா பசியாறிட்டீங்களா?'' என்று உசாவும் குரல் மலையகத் தமிழர் குரலாகத்தான் இருக்கும். (தமிழ்நாட்டு முசுலிம் மக்களிடமும் இத்தொடர் வழக்கில் உள்ளது) நாம் என்றால், "என்ன சார் டிபன் ஆயிடிச்சா?" என்போம்.

    சோறு என்று சொல்லுவதற்கே வெட்கப்படுபவர் நம் மக்கள்!
    சோற்றைச் சாதம் என்போம். அதுவும் போய் இப்போது எங்கும் "ரைஸ்" வந்துவிட்டது. உணவு விடுதியில் நாம் ரைஸ் கொண்டு வா என்று சொல்ல, அரைகுறை ஆங்கிலம் அறிந்த ஆள் அரிசியைக் கொண்டு வந்து கொட்டினால் நாம் சினம் கொள்ள முடியாது.
    மலேசியத் தமிழர்கள் இப்போதும் சோறு என்றுதான் சொல்லுகிறார்கள்.

    தேநீர், காப்பி, குளிர்பானம் எல்லாம் அங்கே தண்ணீர்தான். முதலில் "தண்ணி என்ன வேண்டும்?" என்றுதான் வினவுகிறார்கள்.
    நம்மூரில் உணவு பரிமாறுபவரை "ஹலோ" என்று கூவி அழைப்போம். அல்லது "மிஸ்டர்" என்போம். வேறு சிலர், "வெயிட்டர்" இங்கே வாப்பா என்பார்கள். ஆனால் மலேசிய மக்கள் உணவு விடுதிகளில் பணி செய்பவர்களை அண்ணன் என்றோ அக்கா என்றோ அழைக்கிறார்கள். (மேசை துடைத்தல் போன்ற பணிகளை மகளிர் செய்கிறார்கள்) "வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?" என்று ஒருவரையொருவர் நலம் கேட்பதும், தொலைபேசியில் அழைத்தால் ”வணக்கம், ஐயா வெளியில் சென்றுள்ளார்கள். இரவுதான் வருவார்கள், நாளை காலையில் பேச இயலுமா?" என்று வீட்டில் உள்ளவர்கள் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

    "சாரு எங்கியோ மீட்டிங்னு போயிருக்கார், நைட்டுதான் வருவார், காலையிலே கூப்புடுங்க" இப்படித்தான் நம்மூர்ப் பேச்சு இருக்கும். நாம் சந்திக்கும் உரையாடும் வட்டம் தமிழ் வட்டமாக இருப்பதால், தமிழ் ஆர்வலர்கள் இப்படி இருக்கலாம். பொதுமக்கள் எல்லாரும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று கருதக்கூடும். ஆனால் உண்மையில் எல்லா இடங்களிலும் மிகுதியாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

    சில மலாய் மொழிச் சொற்கள் மிகக் குறைவான அளவில் அவர்கள் பேச்சில் கலந்து வருகின்றன. நம் செவிக்கு எட்டியவரை, நகரம், சிற்றூர், ஆலயம், வணிக வளாகம் எவ்விடத்தும் மக்கள் ஆங்கிலச் சொற்கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

    மலாய் மொழிக்கென்று தனி எழுத்துவடிவம் இல்லை. வெறும் பேச்சுமொழிதான். மலாய் மொழிச் சொற்களை ஆங்கில எழுத்துகளில்தான் எழுதி வைத்துள்ளார்கள். எழுத்து வடிவம் இல்லாத அம்மொழி அந்நாட்டின் ஆட்சி மொழி. மலேசிய மக்களில் மலாய் இனத்தவரையடுத்துச் சீனர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அதனை அடுத்த நிலையில் இந்தியர். அவருள் பெரும்பான்மையர் தமிழர்.

    சீனர்கள் ஒருவரோடு ஒருவர் சீனமொழியில்தான் பேசுகிறார்கள்.
    இந்தியருள் தமிழர்களை அடுத்துச் சீக்கியர் (பஞ்சாபியர்), தெலுங்கர் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் ஒற்றுமை நம் தமிழரிடையே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
    அங்கும் நம் தமிழர்கள் புத்துணர்வு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

    தமிழ் வளரும்.......


    நன்றி:- தினமணி கதிர்

  6. #78
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"

    இங்கு, " ஓர் பாலம் " என்று பாரதி பாடியுள்ளார். இது இலக்கண விதிப்படி சரியா?
    பாடல்களில் (செய்யுளில்) அப்படி வரலாம் என்று இலக்கணம் இசைவளிக்கிறது.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  7. #79
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 31:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    ஆறாம் வகுப்பு முடிய மலேசியாவில் தொடக்கக் கல்விக்கான பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன.
    தமிழ்ப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், மலாய்ப் பள்ளிகள் என அவை பிரிந்து இயங்குகின்றன.
    அவரவர் தாய்மொழியைக் கற்க, தாய்மொழியில் படிக்க அங்கே வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
    நம்மூரில் அனைத்து வசதிகளும் கொண்ட உயர்தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை விடச் சிறந்த வசதிகளோடு தொடக்கப் பள்ளிகள் இயங்குவதை நம் நாட்டில் காண்பது எப்போது என்ற ஏக்கமே தோன்றுகிறது.

    சிறுவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வமும், ஊக்கமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் நம் காதுகளை எட்டவில்லை. ஆலய வழிபாடுகள் முறையாகச் செய்யப்படுகின்றன. நம் கலாசாரம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
    ஆலயங்கள் அழகாகவும், தூய்மையாகவும், வசதிகளோடும் விளங்குகின்றன. தேவாரம், திருவாசகம் மகளிர் குரல் வழியாக நம் செவிகளில் நிறைகின்றன. செய்தி ஏடுகளில் (நாளிதழ்களில்) ஆடவர் நால்வர் சிறை செய்யப்பட்டனர். மகளிர் இருவர் தப்பிச் சென்றனர் என்றும் பதின்ம வயதினர் (டீன் ஏஜ்காரர்) என்றும், அகப்பக்கம் (இணையத்தில்) என்றும் அருந்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை வியப்பைத் தருகிறது.

    தமிழில் வடசொற் கலப்பு:-
    தமிழில் கலந்துள்ள பல்வேறு மொழிகளுள் மிகப் பழைமை வாய்ந்த மொழி வடமொழி எனத் தக்க சமற்கிருதம்.
    தமிழில் கலந்த சமற்கிருதச் சொற்களைத் தாம் வடமொழி, வடசொல் என இலக்கண நூலார் இயம்பினர்.
    சங்க இலக்கியங்களிலேயே செந்தமிழோடு, வடசொற்களும் விரவியுள்ளன. "தமிழ்மொழி வரலாறு" எனும் நூல் எழுதிய சூரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டார். அவர், அந்நூலுள் பலவிடங்களில் "தமிழ் பாஷை" என்றே குறிப்பிடுகிறார். அந்த நாளில் தமிழ்மொழி என்பதனினும் தமிழ் பாஷை என்பதே வலுப்பெற்று இருந்துள்ளது.
    பரிதிமாற் கலைஞருக்குப் பின், சுவாமி வேதாசலம் எனும் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர் பற்றி நாமறிவோம்.
    இவ்விருவர்க்கும் முன்பே, எங்கோ இத்தாலியில் பிறந்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் சமயப் பரப்புரை செய்ய வந்த கான்ஸ்டான்டைன்டின் ஜோசப் பெஸ்கி எனும் கிறித்துவப் பாதிரியார் தம்பெயரை முதலில் தைரியநாதசாமி என்று வைத்துப் பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்ட வரலாறும் ஈண்டு நினைக்கத்தக்கது.

    தமிழில் காலம் காலமாகக் கலந்துள்ள எண்ணற்ற வடசொற்களுள் சில பலவற்றுக்குக் கீழ் வரும் பட்டியலில் தமிழ்ச் சொற்கள் தந்துள்ளோம். இவற்றுள் பல சொற்கள் இப்போது எழுத்திலும், பேச்சிலும் ஆளப்பட்டு வருகின்றன. ஆயினும் அவற்றை நினைவுகூர்தல் அல்லது சில சொற்கள் அறிமுகப்படுத்தல் எனும் வகையால் கொள்க.

    தமிழ் வளரும்.......


    நன்றி:- தினமணி கதிர்

  8. #80
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பட்டியலை பதிப்பிடுங்கள் அண்ணா

    முடிந்தவரை தூய தமிழ் வாரத்தைகளை பயன்படுத்த முயற்ச்சிக்கலாம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #81
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துகளுக்கும் விளக்கத்திற்கும் நன்றி குணமதி, நிவாஸ்.
    ----------------------------------------------------------------------

    மொழிப் பயிற்சி - 32:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    வடசொல் தமிழ்ச் சொல்
    கிரமம் ஒழுங்கு
    கிராமம் சிற்றூர்
    சக்தி ஆற்றல்
    சகோதரன் உடன்பிறந்தான்
    சந்நிதி திருமுன்(பு)
    சபதம் சூளுரை
    சந்தோஷம் மகிழ்ச்சி
    ஜலதோஷம் நீர்க்கோவை
    சாபம் கெடுமொழி
    சிநேகம் நட்பு
    சுத்தம் தூய்மை
    சுபாவம் இயல்பு
    சேவை தொண்டு
    தாகம் வேட்கை
    நிபுணர் வல்லுநர்
    பகிரங்கம் வெளிப்படை
    பரிகாசம் நகையாடல்
    பந்தபாசம் பிறவித்தளை
    பிரசாரம் பரப்புரை
    மந்திரம் மறைமொழி
    மிருகம் விலங்கு
    முகூர்த்தம் நல்வேளை
    யுத்தம் போர்
    இரகசியம் மறைபொருள்
    வயது அகவை
    வாகனம் ஊர்தி
    வாதம் சொற்போர்
    விகிதம் விழுக்காடு
    விக்கிரகம் திருமேனி அல்லது செப்புச் சிலை
    வேதம் மறை
    வேகம் விரைவு
    ஜாதகம் பிறப்புக் கணக்கு
    ஜெபம் தொழுகை
    ஜென்மம் பிறவி
    ஜோதிடன் கணியன்
    ஸ்தாபனம் நிறுவனம்
    ஷேத்ரம் திருத்தலம்
    யாகம் வேள்வி
    போகம் நுகர்வு
    மோகம் விருப்பு

    கவிக்கோ ஞானச்செல்வன் வழக்கில் வழுக்கியவை:-
    மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
    "முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்" என்று பேசுகிறார்கள்.
    "ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?" என்று வினவுகிறார்கள்.
    இந்த முழியும், முளியும் சரியானவையா?
    அல்ல.
    விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
    "ஒரே நாத்தமடிக்குது, சகிக்க முடியலே"
    இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல்.
    அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்) - பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல்.
    இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
    வழு திருத்தம்
    அடமழை அடைமழை
    அடமானம் அடைமானம்
    உடமை உடைமை
    உத்திரவு உத்தரவு (ஆணை)
    ஊரணி ஊருணி
    எகனைமுகனை எதுகை மோனை
    ஏமாந்தான் ஏமாறினான்
    ஒருவள் ஒருத்தி
    ஒருத்தன் ஒருவன்
    கத்திரிக்கோல் கத்தரிக்கோல்
    காத்தாலே காலை
    கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)
    கிராணம் கிரகணம்
    குத்துதல் (நெல்) குற்றுதல்
    கேழ்க்கிறார் கேட்கிறார்
    கோடாலி கோடரி
    சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)
    சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி

    தமிழ் வளரும்.......

    நன்றி:- தினமணி கதிர்

  10. #82
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி-33: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

    கவிக்கோ. ஞானச்செல்வன்

    ஞானச்செருக்கு

    "திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையே' என்றான் மகாகவி பாரதி. ஆழ்ந்தகன்ற அறிவினால் வரும் பெருமிதத்தையே பாரதி ஞானச் செருக்கென்றான். மெய்யறிவுத் திறமுடையார் செருக்குடன் இருப்பது இயற்கையே. நம் தமிழறிவு பெருகினால் பிழைகள் நீங்கும்; பிழைகள் நீங்கிடில் தமிழ்மொழி சிதையாமல் செழிக்கும். மொழி செழிப்புற்றால் தமிழர் வாழ்வு வளம் பெறும். "நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வே' என்றார் பாவேந்தர். "நன்னிலை உனக்கென்றால் எனக்கும்தானே' என்றும் அவர் தமிழோடு பேசுகிறார். இந்த அடிப்படை நினைவை உணர்வை நாம் எப்போதும் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

    இலக்கணச் செய்தியொன்று பார்ப்போமா?
    நேற்று வந்தவன் இன்றும் வந்தான்.
    இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர். ஒன்றும் புரியவில்லையா? உயர்நிலைப் பள்ளிப் பருவநினைவுகளை மனத்திரையில் ஓடவிடுங்கள். தமிழாசிரியர் இவற்றைப் பற்றி விளக்கியிருப்பாரே!

    பெயர்ச்சொல் என்னவென்று உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயர்ச்சொல்லில் ஆறுவகை தெரியுமோ? எடுத்துக்காட்டுகளை நோக்குக.
    ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
    சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
    காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
    இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
    செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
    ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர்
    ஆகப் பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும். இவற்றுள் தொழிற் பெயர் என்று ஒரு பெயர் வருகிறது. அஃது என்ன?

    வந்தான் - வினைச்சொல் (வினை முற்று) இவன் வருதல் ஆகிய வினையைச் செய்தவன். இப்படிக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர். அவன் என்ன செய்தான்? வந்தான் என்னும் போது வினைச் சொல். வருதல் அவன் செய்த தொழிலுக்கு (வினைக்கு)ப் பெயர். ஆதலின் அது தொழிற்பெயர். ஆக வினைச் சொல் வேறு, தொழில் பெயர் வேறு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.

    மீண்டும் எடுத்துக்காட்டுகள் காண்போம்.
    பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்.
    ஒரு தொழிலுக்கு (செயலுக்கு)ப் பெயராக வருவது தொழிற்பெயர். அத்தொழிலைச் செய்தவர்க்குப் பெயராக வருவது வினையாலணையும் பெயர். தொழிற் பெயர் காலம் காட்டாது. வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.

    தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.
    நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.
    வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும் பெயர்.
    தேடுதல்- தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, ஆண், பெண், பலர் எனும் பாகுபாடு காண முடியாது.


    வழு - திருத்தம்
    சுவற்றில் - சுவரில்
    சோத்துப்பானை - சோற்றுப்பானை
    திரேகம் - தேகம் (உடல்)
    தொந்திரவு - தொந்தரவு(தொல்லை)
    துகை - தொகை
    தேவனாதன் - தேவநாதன்
    நிலயம் - நிலையம்
    (அகல) நிகளம் - நீளம்
    புத்து - புற்று
    புண்ணாக்கு - பிண்ணாக்கு
    புழுக்கை- பிழுக்கை
    முழுங்கி - விழுங்கி
    வயறு - வயிறு
    வரவு சிலவு - வரவு செலவு
    வலது, இடது - வலம், இடம்(வலப்பக்கம்,இடப்பக்கம்)
    வெய்யில் - வெயில்
    வெண்ணை - வெண்ணெய்
    வைக்கல் - வைக்கோல்
    கண்ணாலம் - கலியாணம் (திருமணம்)
    கயட்டி, களட்டி - கழற்றி
    குசும்பு - குறும்பு
    சொலவடை - சொல் வழக்கு
    சொரண்டு - சுரண்டு
    சுளட்டி - சுழற்றி

    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்
    Last edited by பாரதி; 23-05-2011 at 01:36 AM.

  11. #83
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நாம் இதுவரை புழங்கிக்கொண்டிருக்கும் பல பிழைகளை இக்கட்டுரை மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

    குசும்பும் குறும்பும் வெவ்வேறு என்றல்லவா நினைத்திருந்தேன்! குறும்பு என்பது செய்கை அடிப்படையிலும், குசும்பு என்பது பேசுவதன் அடிப்படையிலும் செய்யப்படும் வம்புவிளையாட்டு என்று பொருள் கொண்டிருந்தேன்.

    பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

    கடைசிப் பதிவில் ஆசிரியரின் பெயர் மாற்றிப் பதியப்பட்டுள்ளது. கவனிக்கவும்.

  12. #84
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்கு நன்றி கீதம்.
    பிழையை சுட்டியமைக்கு நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்.

Page 7 of 15 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •