Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஊக்கத்திற்கு நன்றி செல்வா.

    சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் அண்ணா!
    பாடல் அடிக்கடி கேட்டதைப் போன்று தோன்றுகிறது. தேடிப்பார்க்கிறேன் அண்ணா.

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 14:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்
    மரபுவழிப்பட்ட செவிகளில் உறுத்தலாக ஏதாவது ஒலி கேட்டால் மனம் வருந்துகிறது. கூடியிருந்தனர் என்பதில் "அர்" ஒலியை முழுமையாக ஒலிக்காமல் "ன" உடன் முடிப்பவர் பற்றி முன்னர் எழுதியுள்ளோம். வேறு சிலர் அரை மாத்திரையில் ஒலிக்க வேண்டிய குற்றியலுகர ஒலியை முழு மாத்திரையளவு ஒலித்து குற்றியலுகரம் எனும் இலக்கணத்திற்குப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
    தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் (த் + உ) உகரம் முழுமையாக ஒலிக்காது. ஆனால் சிலர் இந்த உகரத்தை அழுத்தி தூஉ என அளபெடையிட்டு ஒலிக்கிறார்களே (செய்திகளைப் படிப்பவர்கள் சிந்திப்பார்களா?)

    பேச்சாளர் சிலர் அறிஞ்சர், கலைஞ்சர் என்றோ, அறிநர், கலைநர் என்றோ உச்சரித்துப் பேசுகிறார்கள். காதில் வந்து தேள் கொட்டுவதுபோல் இருக்கும் அந்த நேரங்களில். சற்றே முயற்சி செய்தால் சரியாக உச்சரிக்க முடியும்.
    முயற்சி செய்வார்களா?

    - (P) பம்பரத்தை (B) பம்பரம் என்றும்
    - (k) குடிசையை (g) குடிசை என்றும்
    - (k) கும்பல் (g) கும்பல் என்றும்
    - (Poo) பூம்புகாரை (boo) பூம்புகார் என்றும்
    மிகப்பலர் குறிப்பாகச் சென்னையில் வாழ்வோர் ஒலிக்கிறார்கள்.

    போல இருக்கும் (po) போலியை (bo) போலி என்றும், வேறொன்றும் இல்லாது காற்று (கால்) உள்ள இடத்தைக் காலி (ka) என்று சொல்லாமல் காலி (ga) என்பதும் கேட்கப் பொறுக்கவில்லை. உன்னால் (ba) பயனில்லை என்று பேசுவதைக் கேட்கும்போது நாம் என்ன எழுதி என்ன (pa) பயன் என்று எண்ணத் தோன்றுகிறது.

    மரியாதை அடைமொழிகள்:-
    மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபாதேவி பாட்டீல், மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி - இவ்வெடுத்துக்காட்டுகள் மூன்றும் பிழையற்ற வாக்கிய அமைப்பை உடையவை.


    இவ்வமைப்பைச் சற்றே மாற்றி இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு பிரதிபாதேவி பாட்டீல், தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி என்றெழுதினால் இவை பொருட்பிழை கொண்ட வாக்கியங்களாகும்.
    - மேதகு எனில் "மேன்மை தங்கிய" என்று பொருள்.
    - மாண்புமிகு எனில் மாட்சிமை மிகுந்த என்பது பொருள்.

    ஆங்கில மொழியின் தாக்கத்தால் தமிழில் உருவாக்கப்பட்ட நல்ல தமிழ்ச் சொற்கள் இவை. கனம், மகாகனம் போன்ற சொற்கள் நாம் பயன்படுத்திய வட சொற்கள். இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அவற்றைத் தாங்குகின்ற பதவிப்பொறுப்புகளுக்கேயன்றி, பொறுப்புகளை ஏற்றுள்ள ஆள் (நபர்)களுக்கு அல்ல. பதவிப் பொறுப்புகள் பறிபோகுமானால் அடைமொழிகளும் போய்விடும்.
    ஆதலின் மாண்புமிகு, மேதகு போன்ற ஆட்சிசார்ந்த அடைமொழிகளை ஒருவர் பெயரோடு சேர்த்து எழுதுகின்ற, பேசுகின்ற முறையை விட்டுவிடுக.கீர்த்தி எனில் புகழ். கீர்த்தி எனும் வடசொல்லுக்கு நிகரான தூய தமிழ்ச் சொல் சீர்த்தி. உயர்ந்த பெருமைகளுக்கு உரியவரைப் பாராட்ட சீர்த்திமிகு எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம்.

    மிக்க புகழும், பெருமையும் உடைவர்களைப் பாராட்ட உயர்சீர்த்தி எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம். இச்சொல் சங்க இலக்கியத்துள் காணப்படும் பழந்தமிழ்ச் சொல்.துறவுநிலையில் மேன்மையுற்ற ஆதினங்கள், திருமடங்களின் தலைவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ-ல-ஸ்ரீ என்று முன்னர் எழுதி வந்தோம். இப்போது நல்ல தமிழில் தவத்திரு என்றோ சீர்வளர் சீர் என்றோ சொல்லி வருகிறோம். தவத்திரு என்பதில் தவம் - தவநிலையைக் குறிப்பதோடு "தவ" என்னும் உரிச்சொல்லாக நின்று மிகுந்த எனும் பொருளையும் காண்க.

    கிறித்துவப் பாதிரியார்கள் பெயர்களின் முன்னே அருள்திரு என்றோ அருள்தந்தை என்றோ அடைமொழி சேர்க்கப்பட்டு வருகிறது. சிலர் இவற்றை எழுதும்போது அருட்திரு என்றும், அருட்தந்தை என்றும் எழுதுகிறார்கள். நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.

    (எ-டு)
    - பல் +பொடி= பற்பொடி
    - முள் + செடி= முட்செடி


    ஆனால் வருமொழி முதலில் தகரம் (த)வரின் அதுவும் றகர, டகரமாக மாறும் என்பது நுணுக்கமான ஒன்று.
    (எ-டு)
    - புல் + தரை = புற்றரை
    - வாள் +தடங்கண் = வாட்டடங்கண்

    மிகவும் கடினமாகப் போவதுபோல் தோன்றுகிறதா? சற்றே மனம் செலுத்துங்கள். எளிதில் புரியும்.

    என்ன சொல்கிறோம் என்றால் அருட்தந்தை, அருட்திரு என எழுதுதல் பிழையாம். பின்? அருட்டந்தை, அருட்டிரு என எழுதுதல் பிழையற்றதாம்.

    எதற்கு வம்பு என்று எண்ணினால் இயல்பாக அருள்தந்தை, அருள்திரு என்று எழுதிவிடுங்கள். இதில் பிழையில்லை.

    தமிழ் வளரும்......


    நன்றி:- தினமணி கதிர்


  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அbbaளம் என்பார் சிலர்..
    அழுத்திச் சொன்னால்
    அது நொறுங்கக்கூடும் என்பதாலா?????

    -----------------------------------------------------

    மாண்புமிகு என்பது மேல்துண்டு..
    .................... என்பது வேட்டி..

    -------------------------------------------



    தமிழை 'அரம் அறுக்கும்'
    கரகர ஒலிமொழி எனச் சொல்லும்
    ஆந்திரக் காதலியிடம்
    புற்றரையில் அமர்க
    வாட்டடங்கண் ஆரணங்கே என்றால்
    காதல் காததூரம் ஓடிவிடலாம்..

    புல்தரை மட்டுமே மிஞ்சும்..

    --------------------------------------------------


    இப்பாகத்தை வாசித்து எழுந்த எண்ணங்கள்...

    தொடர்க பாரதி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    புள்ளிகளும்.... புரிய வைக்குமோ அண்ணா!

    ஆந்திரா புரியலையே அண்ணா...

    கவிக்கோவின் பார்வையின்படி பார்த்தாலும் புற்றரை என்பதை பிரித்து பொருள் கொள்ள நேரும் போது புற்று+அரை என்றும் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது..ஹும்...

  5. #41
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    நாள்களா? நாட்களா?
    நாள்+காட்டி= நாட்காட்டி, நாள்+குறிப்பேடு= நாட்குறிப்பேடு. இவை சரியானவை.
    ஆனால் நாள்+கள்=நாட்கள்-பிழையுடையது. கள் என்பது இங்கே பன்மை விகுதி மட்டுமே. சொல்லோடு சொல் சேர்ந்தால் புணர்ச்சி விதி வேண்டும். ஒரு சொல்லோடு "கள்' என்பது சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது. "கள்' என்பது பெயர்ச் சொல்லாயின் மயக்கம் தரும் ஒரு குடிவகைப் பெயர் என அறிவோம். கள் பழந்தமிழ்ப் பொருள். நாட்கள் எனில் நாள்பட்ட கள்- மிகப் பழைய கள் என்று பொருளாம். நாள் பட்ட கள் "சுர்' என்று கடுப்புமிக்கதாய் இருக்கும் என்பர் பட்டறிவுடையோர். ஆகவே நமக்கெதற்கு நாட்கள்? நாள்கள் என்று இயல்பாக எழுதுவோமே?

    பவழமா? பவளமா?
    தமிழில் "ழ' கரம் தனிச்சிறப்புடைய ஒலி. அதனால் இதற்குச் சிறப்பு ழகரம் என்று பெயர். தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் இவ்வெழுத்தை ஒலி மாறாமல் உச்சரிக்க முடியாது. தமிழர் எவரும் ழகரத்தைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது என்று முன்னரே நாம் வலியுறுத்தியுள்ளோம். சரி... அதற்கென்ன இப்போது?
    பவழம் என்றாலும் பவளம் என்றாலும் பொருள் ஒன்றே. பவழம் என்று உச்சரிக்கத் தெரியாதவர்கள்- உச்சரிக்க முடியாதவர்கள் பவளம் என்று பிழையாக ஒலிக்கிறார்கள் என்று ழகரப் பற்றுக் காரணமாக உரைப்பார் உளர். அவர்களின் கருத்துப் பிழையானது. தமிழில் எந்த அகரமுதலியை (அகராதியை) எடுத்துப் பார்த்தாலும் பவழம்- பவளம் என்றுதான் போட்டிருக்கிறார்கள். பவளம்- பவழம் என்று எழுதியிருப்பதோடு ஒன்பான் மணிகளுள் (நவரத்தினங்களுள்) ஒன்று என்றும் எழுதியிருக்கிறார்கள். "மணிமிடைப்பவளம்', "பவளக் கூர்வாய் செங்கால் நாராய்' போன்ற பழந்தமிழ்த் தொடர்களைச் சான்றாகக் கொள்க. "பவழத்தன்ன மேனி ' எனும் தொடரும் பழந்தமிழில் உண்டு. ஆதலின் பவழம், பவளம் இரண்டும் ஒன்றே.
    ஆதலின் எழுபத்தைந்தாம் அகவை நிறைவு கொண்டாடுபவர்கள் பவள விழா அழைப்பிதழ் என்று அச்சடித்திருந்தால், அவர்கள் மீது சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ் அறியாதவர்கள் என்று வெற்றுரையும் வீச வேண்டாம்.

    இழிவு- இளிவு இரண்டும் ஒன்றா?
    இழிவு என்பதில் சிறப்பு ழகரம். இளிவு என்பதில் பொது ளகரம். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இரு சொற்களையும் காணலாம். தமிழில் ஆழமாக எதுவும் அறியாமல், ழ மீது கொண்ட மிகையார்வம் காரணமாக, இளிவை இழிவு என்று திருக்குறளிலும் மாற்றிவிட்டார்கள் என்று திருக்குறள் பதிப்பாசிரியர்கள் மீது, ஏன்... திருவள்ளுவர் மீதே குற்றம் சாட்டுகிறவர் உண்டு.

    இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அது தாழ்வு அல்லது கீழான எனும் பொருளாகும். ஆனால் இரு சொற்களுக்குமிடையே நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. இழிதல் என்றால் இறங்குதல். மலையிலிருந்து அருவி கீழே இறங்கினால், "இழி தரும் அருவி' என்றனர். தலையின் இழிந்த மயிரனையர் என்றார் திருவள்ளுவர். தலையிலிருந்து கீழே இறங்கிய (கொட்டிய) மயிர் என்பது உவமை. அதற்கு என்ன மரியாதை உண்டு?அதுபோலவே தம் நிலையிலிருந்து கீழே இறங்கியவரும் (தாழ்ந்தவரும்) ஆவார் என்பது பொருள்.

    ஆனால் இளிவு வேறு. எண் சுவையுடன் சாந்தம் என்று ஒன்று கூட்டி நவரசம் என்பர் வட நூலார். தொல்காப்பியம் உரைக்கும் மெய்ப்பாடுகள் எட்டுள் இளிவரல் என்பதும் ஒன்று. "நகையே அழுகை இளிவரல் மருட்கை' என்று அந்த நூற்பா தொடங்குகிறது. இந்த இளிவரல்தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், "இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும் மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு.

    திருக்குறளில் வரும் இளிவு எனும் சொல்லை எடுத்துவிட்டு, இழிவு என்னும் சொல்லைச் சேர்த்திட நாம் யார்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது? திருக்குறளில் கைவைக்கும் அளவுக்கு நாம் பேரறிவாளரா? என்று சிந்திக்க வேண்டும், இப்படியொரு சிந்தனையைக் கிளப்பியவர்கள்.

    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணி கதிர்

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தொடரும் பணிக்குப் பாராட்டு பாரதி.


    சுந்தரத் தெலுங்கு, இந்தியாவின் இத்தாலி என அழைக்கப்படும் பெருமிதத்தால் ஆந்திர மக்கள் தமிழை கரகரப்பான ஒலி கொண்ட மொழி என அழைக்கிறார்கள் - எனக் கேட்டிருக்கிறேன்.

    ஆந்திரப் பெண்ணைத் தமிழ் இளைஞன் காதலித்து
    புற்றரை, வாட்டடணங்கண் எனப் பேசினால் என்னாகும் என யோசித்தேன்..
    --------------------------------------------------------------------------------
    தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
    தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை


    ----------------------------------------

    முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடிவைக்கலாமா?


    இரண்டு பாடல்களையும் இயற்றியவர் கண்ணதாசன்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #43
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தாள் - தாள்கள்

    தோள் - தோள்கள்

    இப்படி எழுதுவது சரியென்னும்போது நாள்கள் என்பதும் மிகச்சரியென்று இப்போது உரைக்கிறது.

    பவழம், பவளம்

    சந்தேகம் நீங்கியது.

    முகம் சுளித்தான், முகம் சுழித்தான்

    இவற்றில் எது சரி, இரண்டுமே சரியா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

  8. #44
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post


    தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
    தாங்கிக் கொண்டாள் வாங்கிக்கொண்டாள் முருகப்பெம்மானை


    ----------------------------------------

    முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடிவைக்கலாமா?


    இரண்டு பாடல்களையும் இயற்றியவர் கண்ணதாசன்...
    எடுத்துக்காட்ட இப்படிப்பட்டப் பாடல்வரிகள் எப்படிதான் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருகின்றனவோ? மிகவும் வியப்போடு பாராட்டுகிறேன் இளசு அவர்களே.

  9. #45
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு நன்றி அண்ணா, கீதம்.

    “கள்” பன்மை விகுதி சேரும் போது புணர்ச்சி விதி பொருந்தாது என கவிக்கோ கூறிய பின் மீண்டும் சற்று மயக்கம் வரத்தான் செய்கிறது.

    சுழித்தல் என்றால் ”சுழி” எண்ணை எழுதுதல் என்று எண்ண வாய்ப்பு இருக்கிறது. இன்று இணைய அகராதிப்பகுதி பிழைச்செய்தியை காட்டுவதால் சரியா என பார்க்கவும் இயலவில்லை. முயன்று பிழை களைவோம்.

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி -16:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்


    பொருத்து - பொறுத்து:- ஒரு விளக்கம்

    பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல்.
    "செய்" என்னேவல் வினை முற்று என்பர் இலக்கணப் புலவர்.
    பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும். நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும். இந்த எடுத்துக்காட்டில் பொறுத்து எனும் சொல் உயரும் என்ற சொல் கொண்டு முடிந்தது.
    என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம்.
    என்னைப் பொருத்தவரையில் என்றெழுதினால் என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) வரையில் (அளவில்) வாக்கியம் சரியாக எப்பொருளும் தராமல் சிதறிப் போகிறது.

    கருநாடகச் சட்டப் பேரவைப் பெரும்பான்மை பற்றிய முடிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். இந்தச் சொற்றொடர் தெளிவாக இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாங்கி அல்லது ஏற்று முடிவு காணப்படும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தே என்றால் தீர்ப்பைப் பொருத்து - சேர்த்துவிடு என்று ஏவல் முடியும் சொல்லில் "ஏகாரம்" பொருத்தே எப்படிப்பொருந்தும்?

    பொருப்பு எனும் சொல்லுக்குப் பக்கமலை அல்லது மலை என்று பொருள்.
    பொறுப்பு எனில் கட்டாயக் கடமை (உத்திரவாதம்).
    இந்தச் செயலுக்கு யார் பொறுப்பு?
    இந்த நிலையத்தின் பொறுப்பாளர் யார்? போன்ற தொடர்களை நோக்குக.

    - பொறை - பொறுமை;
    - பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க)

    "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை".
    நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு.

    நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளிவிட முடியாது. அதனையும் தாங்கித் தன் பெரும்பான்மை பற்றி முடிவு செய்யப்படும் என்றால் இதில் என்ன பிழையிருக்கிறது ஐயா?

    உறவும், உடைமையும் நமக்கு உறவாக இருப்பவர்கள் நம் குடும்பத்தார், சுற்றத்தார் இவர்களைச் சுட்டிச் சொல்லும்போது எப்படிச் சொல்லுவது? எழுதுவது? வழக்கமாக, எனது மைத்துனர், எனது தம்பி, எனது மாமா என்று எழுதுகிறார்கள். இப்படி எழுதுதல் பிழை.

    திருமண அழைப்பிதழ்களில் எனது மகன், எனது மகள் என்று குறிப்பிடுவார்கள். என் மகள், என் மகன் என்றே குறிப்பிட வேண்டும்.
    அல்லது எனக்கு மகன், எனக்கு மகள் என இலக்கணத்தோடு இயம்பலாம். எனது புத்தகம், எனது வீடு, எனது நிலம் என்று உடைமைப் பொருள்களைச் சுட்டலாம். உறவுப் பெயர்களைச் சுட்டுதல் பிழை.

    திருமண அழைப்புகளில் மற்றொரு பிழை வழக்கமாக அச்சேறி வருகிறது. திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்று கூடாத இடத்தில் ஒரு "ச்" சேர்த்துவிடுகிறார்கள். திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்று வினைத் தொகையாக (திருவளர்ந்த, வளருகின்ற, வளரும்) எழுதுவதே சரி.

    பிழையும், திருத்தமும் நூல்கள் அச்சிட்டு முடித்தபின் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துப் பிழைகளைப் பட்டியலிட்டுத் திருத்தமும் வெளியிடுவார்கள்.

    ஊர்ப் பெயர்களில் ஏற்பட்டுவிட்ட பிழைகள் பற்றி ஒரு பட்டியல் முன்னரே கொடுத்துள்ளோம். விட்டுப்போன ஊர்கள் சில பற்றி நினைவு வந்தது.

    திருவொற்றியூர்:-
    சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்த திருத்தலம், சுந்தரர் வரலாற்றில் இடம் பெற்றது. இத்தலத்து ஈசனை "வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம்" எனச் சுந்தரர் பாடி உருகினார். திரு ஒற்றியூர் என்பதைத் திருவெற்றியூர் என்று கற்றவர்களும், ஊடகச் செய்தியாளரும் சொல்லும்போது மனம் வருந்துகிறது.

    மயில் தொடர்புடைய தலபுராணம் கொண்ட மயிலாப்பூரும் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணுருவாக்கிய இடம் இது. மயிலா என்பதை மைலா ஆக்கிவிட்டார்கள். மைலாப்பூர் என்று எழுதுவது பெருந்தவறு.
    மயிலாப்பூர் என்னும்போது ஒலிக்கின்ற மயில் - மைலாப்பூர் என்னும்போது ஒளிந்து கொண்டதே.

    பூந்தமல்லி:-
    பூந்தமல்லி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஊரினைக் கற்றவர்கள் பூவிருந்தவல்லி என்று திருத்தமாகச் சொல்லுவதாக எண்ணி மாற்றியுள்ளார்கள். வல்லி எனில் கொடி. பூக்கள் நிரம்பப் பூத்திருந்த கொடி என்று விளக்கம் சொல்லுவார்கள். பூந்தண்மலி - பூக்களின் தண்மை (குளிர்ச்சி) மலிந்திருக்கும் (நிறைந்திருக்கும்) ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.


    தமிழ் வளரும்.......


    நன்றி:- தினமணி கதிர்

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பொறுத்து, பொருத்து --- தெளிந்தேன்.

    இனி பொருளைப் பொறுத்து, வாக்கியத்தில் தக்கச் சொல்லைப் பொருத்துவேன்.

    --------------------------------

    பூந்தண்மலி --- பூவிருந்தவல்லியை விட அழகு.

    --------------------------------------------------

    ''கள்'' மயக்கம் உனக்குத் தீர்ந்து, நீ எனக்கும் தெளிவிக்கும் நாள் விரைவில் வர வாழ்த்துகிறேன் பாரதி..

    -------------------------------------------

    பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #48
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பொருத்தமான பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா.

    -----------------------------------------------------------------------

    மொழிப் பயிற்சி -17:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    அமஞ்சிக்கரை என்ற ஊரைத் திருத்தமாகச் சொல்லுபவர்கள் அமைந்தகரை என்று குறிப்பார்கள். கரை என்பது ஆற்றுக்கோ, குளத்திற்கோ மக்களால் அமைக்கப்படுவது. தானாகக் கரை அமையுமா? அமைந்தகரையோ, அமைக்கப்பட்ட கரையோ எதுவும் அங்கில்லை. அமஞ்சி எனும் சொல் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இந்நாளில் இலவசம் என்று சொல்வதற்கு நிகரான சொல் இது. கரை என்பது சிற்றூர்ப் பகுதிகளையும் குறிப்பதுண்டு. யாரோ ஒரு வள்ளலால் பணம் பெறாமல் அமஞ்சியாகத் தரப்பட்ட இடமே இது என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஓர், ஒரு - சிறிய விளக்கம்:-
    ஆங்கிலத்தில் a, e, i, o, u என்னும் ஐந்தும் உயிரெழுத்துகள் எனக் கொண்டு,இவ்வெழுத்துகளுள் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஒன்று என்பதைக் குறிக்க ஹய் என்று எழுத வேண்டும் (an apple). a போடக்கூடாது என்ற விதி சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். நம் தாய்த் தமிழிலும் இப்படி ஒரு விதியிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இவ்விதியைக் கடைப்பிடித்து எழுதுகிறார்கள்?

    தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும்.
    - ஓர் அணில்
    - ஓர் இரவு
    - ஓர் உலகம்
    - ஓர் ஏடு
    - ஓர் ஐயம்
    என்று காண்க.

    உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும்.
    (எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.

    இம்முறையை மாற்றி ஓர் வீட்டில் ஒரு அம்மா இருந்தாள் என்று எழுதுவது பிழை. நூலெழுதுவோர், பத்திரிகையாளர் பலரும் இப்பிழையைப் பொருட்படுத்துவதில்லை. தம்போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் போக்கை. ஈண்டு இன்னொரு குறிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அஃறிணைப் பெயர்களோடு மட்டுமே இந்த ஓர், ஒரு (மற்றும் எண்கள் எவையும்) இணைத்தல் வேண்டும். உயர் திணையில் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. என்ன?விளங்கவில்லையா?
    ஒரு பேராசிரியர் எனல் தவறு, பேராசிரியர் ஒருவர் எனல் சரி.
    மூன்று பெண்கள் எனல் தவறு. பெண்கள் மூவர் எனல் சரி.
    பஞ்சபாண்டவர் என்பது வழக்கிலிருப்பினும் பாண்டவர் ஐவர் நூற்றுவர் கன்னர் (சிலம்பு) என்பதே தமிழ் மரபு.

    கிருட்டிணமூர்த்தி என்றெழுதல் சரியா? இப்படி எழுதுவது பிழையாகும். கிருஷ்ணமூர்த்தி எனும் வடமொழிப் பெயரில் உள்ள "ஷ்" என்ற எழுத்தை நீக்கிவிட்டு கிருட்டிண என்று எழுதுகிறார்கள்.
    கிருட்டி என்று ஒலித்த பின் அதனோடு ணகரம் இணைத்துக் கிருட்டிண என்றொலிப்பதற்குப் பெரும் முயற்சி வேண்டியுள்ளது.
    கிருட்டினமூர்த்தி என்று டண்ணகரத்திற்குப் பதில் றன்னகரம் போட்டு ஒலித்துப் பாருங்கள். இயல்பாக இனிமையாகச் சொல்ல வரும்.
    தமிழ்மொழி ஒலியியல் பற்றியும் அறிந்தவர்கள் இதனை நன்கறிவர். இதற்கு வலுவூட்ட வேறொரு சொல்லை நாம் பார்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். இங்கு பட்டினம் என்று "டி"யுடன் "ன" சேர்வதையும் பட்டணம் என்று "ட"வுடன் சேர்வதையும் கருதுக. ஆதலின் கிருட்டினமூர்த்தி என்றெழுதுவதே சரியானது.

    சரி, இப்பெயரைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் என்னவாம்?
    கறுப்புக் கடவுள் என்பதாம். கிருஷ்ணம் என்றால் கறுப்பு. மூர்த்தி - கடவுள். தேய்பிறைக் காலத்தை கிருஷ்ணபட்சம் என்பதன் பொருள் புரிகிறதா?

    இன்னும் மனம் இசைவு பெறவில்லையா?
    கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண - கருமை; வேணி- சடை) மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

    கரியநிறம், கருமை நிறம் என்றெல்லாம் இடையினம் வரினும் கறுப்பு எனும்போது வல்லினமே இட வேண்டும். யாழ்ப்பாணம் பெரும்புலவர் நா.கதிரைவேல் பிள்ளை பேரகராதியிலிருந்து, கழகத் தமிழ்க் கையகராதி வரை எதில் வேண்டுமாயினும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

    "கறுப்பும், சிவப்பும் வெகுளிப் பொருள"எனும் தொல்காப்பியச் சூத்திரம் நாமும் அறிவோம்.
    ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது இயல்பே.
    கறுப்பு - கரிய நிறம், சினம், வஞ்சனை என்று அகர முதலிகளில் காண்க.

    தமிழ் வளரும் ......

    நன்றி:- தினமணி கதிர்

Page 4 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •