Page 3 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 10:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    சொற்றொடர் அமைப்பு:-​​
    பத்தி​ரிகையாளரும்,​​ வானொலி,​​ தொலைக்காட்சி ஊடகத்தாரும் பள்ளி ஆசிரியர்களும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று சொற்றொடர் ​(வாக்கியம்)​ அமைப்பு. முக்கியமாக ஒருமை, பன்மை மயக்கம் சொற்றொடர்களில் இருத்தல் ஆகாது. ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை மயங்க எழுதினால் ஏளனம் செய்கிறோம். இடித்துரைக்கிறோம். தமிழில் மிகத் தாராளமாக இப்பிழையைப் பலரும் செய்கிறார்கள்.

    1.​ பிரேசில் நாட்டில் பெரும்பாலான இடங்கள்​ வெள்​ளத்​தால் சூழப்பட்டுள்ளது. ​(ஒரு செய்​தித்​தா​ளில்)
    2.பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலைகள்​ தெரி​விக்​கப்​பட்டது.
    இடங்​கள் என்​னும் பன்​மைச் சொல்​லுக்​கேற்​பச் சூழப்​பட்​டுள்​ளன என்​றும், கவ​லை​கள் என்​னும் சொல்​லுக்​கேற்ப தெரிவிக்கப்பட்டன என்றும் முடிக்க வேண்டும் என்று அறியாதவர்களா?​ அல்லது அக்கறையின்மையா?

    1.ஒவ்வொரு சிலையும் வண்ண வண்ணமாக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.​ ​(ஒரு தொலைக்காட்சி செய்தி)
    2.இந்த மன்றத்தின் செயற்பாடு ஒவ்வொன்றும் பாராட்டிற்குரியன ​(ஒரு சிற்றிதழில்)
    ஒவ்வொரு சிலையும் எனும் ஒருமைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், செயற்பாடு ஒவ்வொன்றும் எனும் ஒருமைக்கேற்ப பாராட்டிற்குரியது என்று முடித்தல் வேண்டும்.

    இந்த நுட்பமெல்லாம் நம்மவர் சிந்திப்பதில்லை.
    'அர்' எனும் பலர்பால் விகுதி கொண்டு முடிய வேண்டிய வாக்கியங்களைச் செய்தி படிப்பவர் சிலர் முழுமையாகப் படிக்காமல் அஃறிணைப் பன்மை கொண்டு முடிக்கிறார்கள். இது ஒரு பாணி போலும்.

    1.விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தன.​ ​(ர்)
    2.​ பலநாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருந்தன.​ ​(ர்)
    முடி​வில் உள்ள 'ர்' ஒலியை விழுங்கிவிடுகிறார்கள். கேட்கும் நம் செவியில் அச் செய்தி தேளாய்க் கொட்டுகிறது.

    ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளார்:​- ''ஓய்வாக இருக்க முடியாத நிலையில் ஏதாவது​ வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள்''.
    இந்த வாக்கியத்தில் ஏதாவது என்பது ஒருமை,​​ வேலைகள் என்பது பன்மை. ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று எழுத வேண்டும். சொற்றொடர் அமைப்பில் கருத்துப் பிறழ உணருமாறு நேர்ந்துவிடக் கூடாது.

    ஒரு நூல் மதிப்புரையில் ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்:-
    ''மனுதர்ம சாஸ்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டுள்ளவர்க்கும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்''.

    "மனுதர்ம சாத்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் -​ அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும்'' என்று இருந்தால் இச்சொற்றொடர் சரியானதாகும். மதிப்புரை செய்துள்ளவரின் கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும். எழுதப்பட்டுள்ளபடி 'தவறான எண்ணம் கொண்டவர்க்கும் இந்நூல் பயன்படும்' என்பது தவறான கருத்தன்றோ?

    ஒரு விழா பற்றி அறிவிப்பாளர் சொல்லுகிறார்:-
    ''இன்றைய விழா சரியாக மாலை ஆறு மணியளவில்​ நடை​பெ​றும்.'' இத்​தொ​ட​ரில் பிழையுள்ளதா?
    உள்ளது.
    எப்படி?
    சரியாக என்று சொன்னால் ஆறு மணி அளவில் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? சரியாக ஆறு மணிக்கு என்றோ ஆறு மணியளவில் என்றோ ​ சொல்லுதலே சரியாகும். சரியாக என்று சொல்லிவிட்டு ஏறத்தாழ ​(அளவில்)​ என்பது முரணன்றோ?

    ஒரு கூட்டத்தில் பேச்சாளர் பேச்சைத் தொடங்குகிறார்:-
    ''இங்கு கூடியுள்ள அனைவர்க்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. அதென்ன?​ வணக்கத்தில் முதற்கண் வணக்கம்,​​ இடைக்கண் வணக்கம்,​​ இறுதிக் கண் வணக்கம் என்றெல்லாம் உண்டா? என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் வாக்கியம் சரியான பொருளில் அமையும். வணக்கத்தை ஏன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? அனைவர்க்கும் வணக்கம் என்றோ,​​ அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் என்றோ தொடங்கினால் அழகாக இருக்குமே.

    தமிழ் வளரும்....

    நன்றி:- தினமணி கதிர்

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாங்களேன் நேரம் பா(ர்)த்து
    வந்து எனைக் காப்பாத்து...


    பன்மையில் விளித்து
    ஒருமையில் முடித்த
    இப்பாடல் வரி ஓர் எடுத்துக்காட்டு..


    இசையில் சுரபேதம் எப்படி சோற்றுக்கல் போல் இடறுமோ
    அப்படியே இச்சொற்றொடர் பிழைகளும்..

    தவிர்க்க உதவும் இப்பாகமும் அருமை..


    தொடர்க பாரதி..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பதிவிற்கேற்றது போல பாடல்கள் எப்படியண்ணா உங்களுக்கு கிடைக்கின்றன..! “கள்”ளில் உண்டான மயக்கம் தீர்ந்ததா அண்ணா..?

    ===============================================================

    மொழிப் பயிற்சி - 11:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் "அத்து" எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி, "வாரும் கடை மடையரே'' என்றார்.
    புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? "வந்தோம் மடத் தலைவரே'' என்று திருப்பியடித்தார்.

    இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.
    மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு "அத்து" என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.

    மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ).
    இச்சொல்லுடன் "இல்" உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்?
    மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.
    குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது.
    பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம்.
    இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது.
    ஆக, தமிழில் "அம்" என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.
    இன்னும் வேண்டுமா?

    - குலம் - குலத்தில்
    - நலம் - நலத்தில்
    - இனம் - இனத்தில்
    - வலம் - வலத்தில்

    இப்படி எல்லாவற்றிலும் "இல்" உருபு சேர்த்தால் "அத்து" சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா?
    இல்லை.
    "உடன்" எனும் உருபு சேர்த்துப் பாருங்கள்.
    - நலம் + உடன் = நலத்துடன்
    - சினம் +உடன் = சினத்துடன்

    இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.

    சொற்றொடர் முடித்தல் வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக:-
    - அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)
    - அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)
    - அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)
    - அது நல்லது அன்று (ஒன்றன் பால்)
    - அவை நல்லவை அல்ல (பலவின் பால்)

    காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம்.
    எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் "அல்ல" என்பது மட்டுமே.
    - நானல்ல
    - அவரல்ல
    - அதுவல்ல
    - அவையல்ல
    என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.
    இல்லை, அல்ல இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

    புத்தகம் மேசை மீது இல்லை - இது சரியான வாக்கியம்.
    "நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை" - இது பிழையுடைய வாக்கியம்.
    இது "நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்" என்று இருந்தால் சரியாகும்.
    - மரத்தில் காய்கள் இல்லை
    - வயிற்றுக்குச் சோறு இல்லை
    என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும்.

    "இன்று பள்ளி இல்லை" என்பது பிழை. "இன்று பள்ளிக்கு விடுமுறை" என்பதே சரியானது.
    "அல்லன்", "அல்லள்" என்பனபோல் "அல்லை" எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும்.
    மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:-
    "எனக்கு நல்லையும் அல்லை என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில்,
    உனக்கு நல்லையும் அல்லை.''
    என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.

    தமிழ் வளரும்.....

    நன்றி:- தினமணி கதிர்

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    [QUOTE=பாரதி;522952]பதிவிற்கேற்றது போல பாடல்கள் எப்படியண்ணா உங்களுக்கு கிடைக்கின்றன..!

    “கள்”ளில் உண்டான மயக்கம் தீர்ந்ததா அண்ணா..?

    ===============================================================


    நான் அவன் '' இல்லை''!!!!!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 12:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    குறைந்த படிப்புடைய வாசகர்களுக்கு மட்டுமல்லாது, நிரம்பப் படித்தவர்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் அறிய வேண்டும் என்றே சில நுட்பமான செய்திகளையும் இப்பகுதியில் எழுதி வருகிறோம். நம் பேச்சு வழக்கிலுள்ள சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    "அவர்தான் இப்படிச் சொன்னார்."
    இவ்வாக்கியம்,"அவர்தாம் இப்படிச் சொன்னார்" என்றிருத்தல் வேண்டும்.
    அவன்தான், அவர்தாம், அதுதான், அவைதாம் என்பனவற்றை நோக்குக.

    "அதுகளுக்கு என்ன தெரியும்?" "இது பற்றியெல்லாம் அதுகளுக்கு என்ன தெரியும்?" என்று இயல்பாகப் பேசுகிறோம். அவர்களுக்கு என்ன தெரியும் என்று சரியாகச் சொல்ல வேண்டும்.

    உயர்திணையை அஃறிணையாக்கிப் பின் பன்மையை ஒருமையாக்கும் இரண்டு பிழைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் செயலுக்கு "நான் பொறுப்பல்ல" என்று முடித்தல் தவறு. "நான் பொறுப்பல்லேன்" என்று முடித்தல் வேண்டும். பன்மையில் சொன்னால் யாம் (நாம்) "பொறுப்பல்லோம்" அல்லது "பொறுப்பல்லேம்" என முடித்தல் வேண்டும்.

    "அவர் தன் நாட்டிற்காக மிக அரும்பாடுபட்டார்". இந்த வாக்கியத்தில் பிழையுண்டா?
    உண்டு.
    "அவர் தம் நாட்டிற்காக" என்று திருத்துதல் வேண்டும்.
    - அவன், அவள், அது வரும்போது "தன்" என்றும்,
    - அவர் அவை வரும்போது "தம்" என்றும் இணைப்புச் செய்க.

    "திருவள்ளுவர் தன் திருக்குறளில் சொல்லாத அறம் இல்லை". இவ்வாக்கியத்தில், "திருவள்ளுவர் தம் திருக்குறளில்" என்று ஒரு சிறிய திருத்தம் செய்தால் பிழையற்றதாகும்.

    கவிதாயினி - சரிதானா?
    பேராசிரியர், தலைமையாசிரியர் என்று ஆண்களைக் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை என்று பெண்களைக் குறிப்பது ஏன்?
    பெண்ணுரிமை பேசும் மகளிரே கூட இது தம்மை குறைவு செய்கிறது என உணர்வது இல்லை. பெண்ணைப் பேராசிரியை, தலைமையாசிரியை எனக் குறிப்பிட்டால், ஆணைப் பேராசிரியன், தலைமையாசிரியன் என்று அன் விகுதி போட்டுச் சொல்ல வேண்டும்.
    கவிதாயினி என்றும் பெண்ணுக்கு அடைமொழி தருகிறார்கள்.
    கவிஞர் என்பது ஆண், பெண் இருவர்க்கும் பொதுதானே?
    (அர்-மரியாதைப் பன்மை)
    கவி,தா, இனி - இனிமேலாவது கவி தருக என்று பொருளாகாதோ?

    மருத்துவர், பொறியாளர், முதல்வர், எழுத்தாளர் என்றெல்லாம் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை, கவிதாயினி என்று சிலவற்றைப் பெண்களுக்குரியதாகப் பயன்படுத்துதல் ஏனோ? ஆண் ஆசிரியர் ,பெண் ஆசிரியர் என்று வேறுபடுத்தி அறிவதற்காக இப்படிக் குறிக்கிறோம் என்பார் சிலர்.

    அந்த அடைமொழிக்குப் பின் வருகின்ற பெயரை வைத்து, அவர் ஆண் அல்லது பெண் என்று அறியமுடியுமே!

    "உம்" என்னும் இடைச்சொல்பெயர், வினை, இடை, உரி எனும் நான்கு வகைச் சொற்களுள் பெயரும் ஆகாது, வினையும் ஆகாது, குணம் சுட்டும் உரிச்சொல்லும் ஆகாது, பெயர்க்கும், வினைக்கும் இடையே நின்று செயற்படுபவை இடைச் சொற்கள்.

    உவமை உருபுகள் (போல, போன்ற, ஒத்த, நிகர்த்த) அசைநிலைகள் ஏகாரம், ஓகாரம் போன்றவை.
    உம் எனும் இணைப்புச் சொல். இவையெல்லாம் இடைச்சொற்கள் எனப்படும்.

    "முத்தும், மணியும், பவளமும் நிறைந்திருந்தன".
    இவ்வாக்கியத்தில், வரும் "உம்" என்பது இடைச்சொல்.

    - கபிலரும், பரணரும் வந்தனர்.
    - பூரியும் கிழங்கும், பொங்கலும் வடையும்

    இவற்றில் வருகின்ற "உம்" இணைப்பை உண்டாக்கும் ஓர் இடைச்சொல். ஆனால் இந்நாளில், "கடிதம் போடவும், வந்து செல்லவும், ஐயாவைப் பார்க்கவும்" என்று பலரும் சொல்லி வருகிறோம். ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு சொல்லை கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப்
    பயன்படுத்துகிறோம். இது பிழையன்றோ?

    ஆங்கிலமொழியின் தாக்கம் காரணமாக, "உம்" பயன்படுத்த வேண்டிய இடத்தில் புதிதாக "மற்றும்" என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
    தமிழில்,"மற்று" எனும் அசைச் சொல் உண்டு.
    மற்றொன்று - வேறொன்று என்ற பொருள் உண்டு.
    ஆனால், "இந்நாளில் பேச்சு, பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும்" என்று ஆங்கிலத்தில், சிலவற்றைச் சொல்லி இறுதிக்கு முன்னதாக "and" சேர்ப்பது போல் "மற்றும்" சேர்த்து வருகிறோம். இது சரிதானா?

    "சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்"
    இந்த மற்றும் தேவைதானா?

    அருவி - நீர்வீழ்ச்சி எல்லாப் பொருள்களுக்கும் தமிழில் சொல் உண்டு.
    நமக்குப் புதிதாக அறிமுகமான வந்தேறிய பொருள் என்றால் அதற்கும் ஓர் ஆக்கச் சொல்லைக் கண்டறிவது தமிழில் எளிதே. கடல், மலை, அருவி எல்லாம் தமிழில் என்றென்றும் இருப்பவை. மலையிலிருந்து நீர் கொட்டுவதை "அருவி" என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து ...கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்" என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?

    தமிழ் வளரும்.....

    நன்றி:- தினமணி கதிர்

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அருமையான தொடர்.

    பகிர்வுக்காக நன்றி.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!

    கவிஞனுக்கு ஈடான பெண்பாற் சொல்? கவிஞை?

    ஆசிரியர் , ஆசிரியை - பால் பேதம் சொல்லில் அறியத்தரக்கூடாது என்பது இக்கால நோக்கமாகி வருகிறது.

    ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?

    ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?


    சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by இளசு View Post
    கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!
    நளாயினி புருசனை எப்படி கூப்பிட? சந்திராயன் மாதிரி ஆகிடுமே...

    Quote Originally Posted by இளசு View Post
    ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?
    நடிகர் தமன்னாவா? என்ன கொடுமை சார் இது?

    ஆண்களோட ஆடைகளைத்தான் போட்டுக்கறீங்கன்னா, பட்டத்தையுமா?

    Quote Originally Posted by இளசு View Post
    ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?


    சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.
    ஆரு(r) இல்லையேன்னு ஆராவது கீக முடியுமா?
    ஆறாவ்து படிக்குற பையன் கூட கேக்க முடியாது.

  9. #33
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by Hega View Post
    அருமையான தொடர். பகிர்வுக்காக நன்றி.
    நல்லது நண்பரே.

    Quote Originally Posted by இளசு View Post
    கவிதாயினி வேண்டாம். கவிஞர் போதும். சரி!

    கவிஞனுக்கு ஈடான பெண்பாற் சொல்? கவிஞை?

    ஆசிரியர் , ஆசிரியை - பால் பேதம் சொல்லில் அறியத்தரக்கூடாது என்பது இக்கால நோக்கமாகி வருகிறது.

    ஆங்கில ஏடுகளில் ஆக்டர் என்றே நடிகைகளையும் குறிப்பிடுகிறார்கள். நடிகர் தமன்னாவின் இரசிகன் ஆதவா - இப்படித்தான் எழுதவேண்டும்?

    ஆங்கிலத்தில் Ms என எழுதி மணமான பெண்ணா என்றக் குறியீட்டை மறைக்கும்படி எழுதுகிறார்கள். அதுபோல் தமிழிலும்?

    சிந்திக்க வைக்கும் தொடர். தொடர்க பாரதி.
    ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி அண்ணா.

    கவிக்கோவின் எல்லாக்கருத்துக்களுக்கும் நாம் உடன்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது கருத்துக்களை எதிர்க்கும் ஆக்கப்பூர்வ கருத்துக்களையும் படிக்கத்தான் செய்கிறேன்.

    இப்போது இப்படியெல்லாம் பெயர் வைப்பார்கள் என அக்காலத்தில் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.

    Quote Originally Posted by sarcharan View Post
    நளாயினி புருசனை எப்படி கூப்பிட? சந்திராயன் மாதிரி ஆகிடுமே...
    நடிகர் தமன்னாவா? என்ன கொடுமை சார் இது?
    ஆண்களோட ஆடைகளைத்தான் போட்டுக்கறீங்கன்னா, பட்டத்தையுமா?
    ஆரு(r) இல்லையேன்னு ஆராவது கீக முடியுமா?
    ஆறாவ்து படிக்குற பையன் கூட கேக்க முடியாது.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

  10. #34
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப் பயிற்சி - 13:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

    கவிக்கோ.ஞானச்செல்வன்

    ஞாயிறுதோறும்:-
    ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கி​ழமையும் விடுமுறை நாளாகும் என்பதை 'ஞாயிறுதோறும் விடுமுறை' என்று அறிவிப்பார்கள். இது சரிதான். ஆனால் சில இடங்களில் 'ஒவ்வொரு ஞாயிறு தோறும் விடுமுறை' என்று எழுதியுள்ளார்களே! 'தோறும்' எனும் சொல் ஒவ்வொரு எனும் பொருளையே தருவதால்,​​ இப்படி இரு சொற்களை ஒரு பொருள் குறிக்கப் பயன்படுத்துதல் வேண்டா.

    இதுபோலவே 'பணமாகவோ அல்லது காசோலையாகவோ' தரலாம் என்று சில அறிவிப்புகளைக் காண நேர்கிறது. 'ஓ' என்பது இங்கு அல்லது எனும் பொருளில் வரும் போது,​​ இரண்டையும் ஏன் சேர்க்க வேண்டும்? 'பணம் அல்லது காசோலை' தரலாம்,​​ பணமாகவோ காசோலையாக என்றோ ஒன்றை மட்டும் குறித்தல் நன்று.

    நினைவுகூறுதல்:​​-
    'நம் தலை​வ​ருடைய பணிகளைப் -​ புகழை நாம் என்றென்றும் நினைவு கூறுதல் வேண்டும்' என்று எழுதுகிறார்கள். கூறுதல் என்றால் சொல்லுதல் எனும் பொருள்தரும் என்றறிவோம்.
    கூர்தல் என்றால் மிகுத்தல்.
    அன்பு கூர்தல் என்றால் அன்பு மிகுத்து ​(மிக்க அன்பு கொண்டு)​ என்று பொருள்.
    ஒருவர் புகழை,​​ அவர்தம் பணிகளை நினைவு கூர்தல் என்றால்,​​ மிகவும் நினைத்தல் ​(நிரம்ப நினைத்தல்)​ என்று பொருள்.
    ஆதலின் தலைவருடைய புகழை நாம் என்றும் நினைவு கூர்தல் வேண்டும் என்றெழுதுவதே சரியாகும். முன்னரே இதுபோலவே,​​ உளமார,​​ அளப்பரிய என்பவற்றை உளமாற,​​ அளப்பறிய என்றெழுதுவது பிழை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    இந்த 'ர'கர 'ற'கரம் பற்றி என்னும்போது,​​ பல ஆண்டுகள் முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பில் இரண்டு திரைப்படங்களின் பெயர்கள் தவறாக எழுதிக்காட்டப்பட்டன.

    1.​ பெருமைக்குறியவள் (பெருமைக்கு உரியவளை) -​ பெருமைக் குறியவள் என்றெழுதி மிகத் தவறான ஒரு பொருள்தோன்றச் செய்துவிட்டார்கள்.

    2.கொம்பேரி மூக்கன் -​ கொம்பில் ஏறுகின்ற ஒருவகைப் பாம்பின் பெயரை கொம்பேறி மூக்கன் என்றெழுதிடாமல்,​​ கொம்பேரி மூக்கன் என்றெழுதிக் காட்டினார்கள்.
    ஏரி ​(நீர்நிலை)​ இங்கு எப்படி வந்தது?
    ஏன் வந்தது?
    எழுதுபவர் மொழியறிவு இல்லாதவர் என்றால்,​​ எழுதிய பின் அறிந்த ஒருவர் மேற்பார்வையிட்டுத் திருத்தியிருக்க வேண்டாவா?

    இப்போதும் ஏடுகளில் பார்க்கிறோம்.
    'வரட்சி நிவாரண ​ நிதி' என்று வருகிறது.
    இது வறட்சி நிவாரண நிதி என்றிருக்க வேண்டும்.
    வறள்,​​ வறட்சி என்பன சரியான சொற்கள்.

    ஒருவர் மீது கொண்ட அல்லது ஒரு செயலில் கொண்ட முழுமையான ஈடுபாட்டை அக்கறை எனல் வேண்டும். இப்போதும் சிலர் இதனை "அக்கரை" என்றெழுதுகிறார்கள். அந்தக் கரை ​(ஆற்றங்கரை)​ அன்று இது. மொழி மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.

    கண்டவை -​ கேட்டவை:-
    திருக்கோ​வில்​க​ளில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி சன்னதி என்று முன்னாட்களில் எழுதி வந்தனர். பின்னர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி சன்னதி என்று எழுதினார்கள். "ஸ்ரீ" யை விட்டு "அருள்மிகு" எனும் பொருள் பொதிந்த நற்றமிழ் அடைமொழியைச் சேர்த்தது நன்று. ஆனால், இந்நாளில் சில திருக்கோவில்களில் அருள்மிகு என்பதைச் சுருக்கி "அ/மி" மருந்தீசுவரர் என்பது போல எழுதியிருப்பதைப் பல இடங்களில் ​ காண நேர்கிறது. "மே/பா" ​(c/o)போடுவது போல தெய்வப் பெயர்களை இப்படி இழிவு செய்யலாமா?
    அடுத்தது "சன்னதி" என்ற சொல். இது "சந்நதி" என்று இருத்தல் வேண்டும். சந்நிதானம் என்னும் போது இவ்வாறே கொள்க.
    சில அகராதிகளில் "சன்னிதி" என்றும் காணப்படுகிறது. எப்படியாயினும் சன்னதி என்பது பிழையே.

    அருள்மிகு "வினா"யகர் திருக்கோவில் எனப் பல இடங்களில் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.
    வி + நாயகர் = விநாயகர் எனில் மேலான தலைவர்.
    பூதி -​ சாம்பல்,​​ விபூதி -​ மேலான சாம்பல் ​(திருநீறு)​ தமக்கு மேல் ஒரு தலைவரற்றவர் விநாயகர். மூல முதல் என்று போற்றப்படுபவர். அவரின் பெயரை வினாவுக்கு உரியவராகச் சிதைக்கலாமா?​ திருத்துவீர்களா?

    இந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டது என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரையின் அடிப்பாகத்தில் எழுத்தில் காட்டுகிறார்கள்.
    இது சித்திரிக்கப்பட்டது என்றிருத்தல் வேண்டும். சித்திரம் என்பது சொல். இதிலிருந்து வருவதே சித்திரிக்கப்பட்டது எனும் தொடர்.
    சித்திரத்தைச் சித்தரம் ஆக்கலாமா?

    ஓர் இசையரங்கில் ஒருவர் பாடுகின்றார். விநாயகர் வாழ்த்து அது.
    நந்தி மகன்தனை,​​ ஞானக்கொழுந்தனை என்று இசைக்கிறார்.
    ஞானத்தின் கொழுந்தாக இருப்பவனை-​ ஞானக் கொழுந்தினை அந்த இசைஞர் கொழுந்தன் ஆக்கிவிட்டார். கணவன் உடன் பிறந்தான் கொழுந்தன் எனப்படுவான். இப்படித் தமிழைச் சிதைக்கலாமா?
    எண்ணுங்கள்.​

    தமிழ் வளரும்........

    நன்றி:- தினமணி கதிர்

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான தொடர்..... இது போன்ற தொடர்களை படித்து நானும் கொஞ்சம் தமிழை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ஆசை!

    அது இங்கு கிடைப்பதில் மன நிறைவு.

    நன்றி தொடர் முகப்பாளரே.

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இந்த பாகம் அருமை. சந்நிதி, ஞானக்கொழுந்தினை என நல்ல பாடங்கள்.

    கலைஞர் தொலைக்காட்சியில் அன்னியச் செலாவணி எனக் காட்டுகிறார்கள்.
    அந்நியனா/ அன்னியனா?


    தொடர்க பாரதி..


    கவிக்கோவுடன் முரண்பட அப்படி எழுதினேன் அல்லன்.
    சிந்தனைத் தூண்டலே அவர் எழுத்துதானே..



    ----------------------------

    இந்தப் பாகத்துக்கான திரைப்பாடல்:


    அக்கரையில் அவரிருக்க
    இக்கரையில் நானிருக்க
    அக்கறையில்லாததேன் கடலலையே..


    சுசீலா பாடலின் படப்பெயர் சொன்னால் 100 இ-பணம் பரிசு...!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 3 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •