அரிய விளக்கம்! பகிர்தலுக்குப் பாராட்டு பாரதி அவர்களே!
அரிய விளக்கம்! பகிர்தலுக்குப் பாராட்டு பாரதி அவர்களே!
தமிழறிந்த அனைவரும் தவறாது அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் திருத்தங்களும். அறிந்ததோடு அவற்றைத் தவறாது கடைப்பிடிக்கவும் வேண்டும். கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கும், பகிர்ந்துகொள்ளும் பாரதி அவர்களுக்கும். நன்றி.
முத்துப்பல் சிரிப்பல்லவோ
கோடைக்காலக் காற்றே
வெள்ளைக் கமலத்திலே
வரச் சொல்லடி
திருக்கோவில் வரும் சிலையோ..
திரைப்பாடல் வரிகளால் வல்லெழுத்து மிகும் இடங்களை மீள்பார்வை பார்த்துக்கொண்டேன் பாரதி..
தொடர்க உற்சாகமாய்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தொடருங்கள் அண்ணா
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா, கீதம், அண்ணா, நிவாஸ்.மொழிப்பயிற்சி - 7:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
-------------------------------------------------------------------------
கவிக்கோ.ஞானச்செல்வன்
வல்லெழுத்து மிகா இடங்கள்
1. அது, இது, எது முன் மிகாது.
(எ-டு) அது பெரிது, இது சிறிது, எது கரும்பு?
2. அவை, இவை, எவை முன் மிகாது.
(எ-டு) அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன?
3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?
(எ-டு) அவ்வாறு சொன்னார், இவ்வாறு செப்பினார், எவ்வாறு கண்டார்?
4. ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்களின் முன் மிகாது.
(எ-டு) ஒரு கோடி, இரு தாமரை, அறுபதம், எழுசிறப்பு.
5. பல, சில முன் மிகாது.
(எ-டு) பல சொற்கள், சில பதர்கள், பல தடைகள், சில கனவுகள்.
6. உகர ஈற்று வினையெச்சங்கள் முன் மிகாது.
(எ-டு) வந்து சென்றான், நின்று கண்டான்.
7. அத்தனை, இத்தனை முன் மிகாது.
(எ-டு) அத்தனை குரங்குகள், இத்தனை பசுக்களா?
குறிப்பு:- அத்துணை முன் மிகும்.
(எ-டு) அத்துணைப் பெயர்களா? இத்துணைச் சிறப்பா?
8. பெயரெச்சம் முன் மிகாது.
(எ-டு) ஓடாத குதிரை, வந்த பையன், பறந்த புறா
குறிப்பு:- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
9. என்று, வந்து, கண்டு முன் மிகாது.
(எ-டு) என்று சொன்னார், வந்து சென்றார், கண்டு பேசினார்.
வல்லொற்று மிகுமிடங்கள், மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை. சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.
இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமை உருபுகள் (2 முதல் 7 முடிய) விரிந்து (வெளிப்படையாக) இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.
நூலைக் கற்றான் - இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.
உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.
பால் பருகினான் - இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.
ஒரு வினைச் சொல் நிற்க, அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச்சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.
(எ-டு) வந்து (முற்றுப் பெறாத வினை) நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.
இதுபோல் முற்றுப் பெறாத வினை, ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.
வந்த (முற்றுப் பெறாத வினை) பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து (வினையின் கடைசி எழுத்து) இல்லாமற் போயிருந்தால் (கெட்டிருந்தால்) அது ஈறு கெட்ட பெயரெச்சம்; அதுவே எதிர்மறைப் பொருளும் (இல்லை என்பது) தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
(எ-டு) உலவாத் தென்றல் - உலவாத தென்றல் என்பதில் "த்" என்னும் ஈற்றெழுத்துக்கெட்டு (இல்லாமற் போய்) உலவா என நின்று "த்" வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று. தென்றல் உலவும் (அசையும்) இது உலவாத (அசையாத) என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.
ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை. பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும். "மை" விகுதியும் கெட்டிருக்கும்.
(எ-டு) செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.
இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
(எ-டு) வட்டக்கல் - வட்டமாகிய கல். கல்லே வட்டம். வட்டமே கல்.
தமிழ் வளரும் .....
நன்றி : தினமணிக்கதிர்
அன்றய பாரதி மொழிக்காக இன்றைய பாரதி மொழி வளச்சிக்காக .....ஆஹா அற்புதம் தொடருங்கள் நண்பரே
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
அண்ணா இதை ஒரே தொகுப்பாக வடிவமைத்து நமது மன்ற இ-புத்தக பகுதியில் ஏற்றிவிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
மிகா இடங்களை மிக அழகாக விளக்கிய பாகம்.
பகிர்தலைத் தொடர்க பாரதி. கவிக்கோ அவர்களுக்கு நன்றி..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ஊக்கங்களுக்கு நன்றி ஜெய், நிவாஸ், அண்ணா.
அன்பு நிவாஸ், இத்தொடர் இன்னும் கவிக்கோ அவர்களால் தொடரப்படுகிறது. கட்டுரை நிறைவு பெறும் வேளையில் கண்டிப்பாக உங்கள் விருப்பப்படி செய்ய முயற்சிப்போம்.
மொழிப்பயிற்சி - 8:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ.ஞானச்செல்வன்
இலக்கண விளக்கம் எழுதிக் கொண்டே போனால் அது விரிந்து கொண்டே செல்லும். எளிதாகவும், சுருக்கமாகவும் சிலவற்றை அறியுமாறும் எழுதினோம். ஒற்றுமிகுதல் தொடர்பாக அறியத்தக்க மற்றும் இரண்டு செய்திகளையும் தருகிறோம்.
உவமைத் தொகை என்பது ஒன்று. ஒன்றை மற்றதற்கு உவமையாகச் சொல்லும் போது உவமை உருபு (போல, ஒத்த, அனைய, நிகர்த்த ) மறைந்திருப்பது உவமைத் தொகை.
(எ-டு) முத்துப்பல் என்பது முத்து போன்ற பல் எனும் பொருளது.
இங்கே உவமைத் தொகையில் சந்தி "ப்" மிகுந்தது. உவமை விரியில் மிகவில்லை.
குற்றியலுகரம் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. இதை விளக்கவே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். இயன்றவரை சுருக்கமாகச் சொல்வோம்.
குறைந்த ஓசையுடைய "உ" எனும் எழுத்து.
உகரத்திற்கு ஒரு மாத்திரை.
குறைந்த உகரத்திற்கு அரை மாத்திரை.
தொடர் வகையான ஆறு வகைப்படும், சொல்லின் ஈற்றில் வல்லொற்றின் மீது உகரம் ஏறி (சேர்ந்து) வருதல் இதன் இயல்பு.
(எ-டு) குரங்கு - இச்சொல்லின் "கு"வில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.
முழுமையான உகரம் எது?
அது முற்றியலுகரம்.
பசு- "சு"வில் உள்ள உகரம் முழுமையானது.
வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லொற்று மிகும் என முன்னர் சொல்லியிருக்கிறோம்.
பத்து - இதில் உள்ள "உ" (த் + உ) அயலில் "த்" என்ற வல்லெழுத்தை நோக்க வன்தொடர்க் குற்றியலுகரமாம்.
பத்துப்பாட்டு இங்கே வல்லொற்று மிகுதலைக் காண்கிறோம்.
எட்டுத்தொகையும் இவ்வாறே.
எழுத்து என்பதில் வன்தொடர்க் குற்றியலுகரம் உள்ளது.
"கள்" எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லொற்று மிகுமா? "கள்" ஒரு தனிச் சொல் அன்று; பன்மை காட்டும் விகுதி.
ஆதலின் எழுத்துகள் என்பதே இயல்பானது. இவ்வாறே தலைப்புகள், இனிப்புகள் என்று இயல்பாக எழுதுவதே பொருத்தம்.
ஆயினும் பழந்தமிழ்ப் புலவர் (பரிமேலழகர் உள்ளிட்டவர்) "எழுத்துக்கள்" என்று எழுதியுள்ளார்கள்.
ஆதலின் இருவேறு முறையிலும் எழுதலாம். ஆயினும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன எனும்போது இனிப்புச் சுவையுடைய "கள்" எனும்
பொருள் காணக்கூடும். ஆதலின், "இனிப்புகள்" என்றே எழுதுக.
வலி மிகுதல் - மிகாமை சில குறிப்புகள்:-
தமிழ் பேசு, தமிழ்ப் பேச்சு:-
மேற் காணும் இரண்டிலும் தமிழ் என்பது நிலைமொழி.
பேசு, பேச்சு என்பன வருமொழி.
ஒன்று இயல்பாகவும், ஒன்று "வலி" மிகுந்தும் வந்திருப்பது ஏன்?
தமிழ் பேசு என்பது தமிழில் பேசு என விரியும். ஆதலின் ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
தமிழ்ப் பேச்சு என்பது தமிழில் ஆகிய பேச்சு அல்லது தமிழில் பேசப்பட்ட பேச்சு என விரியும். இதனில் "இல்" உருபோடு பிறிதொரு சொல்லும் மறைந்திருப்பதால் உருபும், பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ் படி- தமிழைப் படி - இரண்டாம் வேற்றுமைத் தொகை தமிழ்ப்படி - தமிழில் உள்ள படி - உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ்ப் படம், தமிழ்ப்பாடம், தமிழ்ப் பேராசிரியர் என்பவற்றை விரித்துப்பொருள் காண்க.
ஊர்ப் பெயர்களின் முன்னர் க,ச,த,ப வந்தால் வல்லெழுத்து மிகும்.
(எ-டு)
1. திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
2. சென்னைக் கம்பன் கழகம்
3. அம்பத்தூர்த் தொழிற்பேட்டை
ய்,ர்,ழ் ஈறாக வரும் சொற்கள் முன் வல்லெழுத்து பெரும்பாலும் மிகும்.
(எ-டு)
1. தாய்ப்பாசம்,
2. வேர்க்கடலை
3. யாழ்ப்பாணம்
4. நாய்க்குட்டி
5. நீர்ச்சோறு
6. கூழ்ச்சட்டி
காய்கதிர் - வினைத் தொகையில் மிகவில்லை (காய்ந்த கதிர், காய்கின்ற கதிர், காயும் கதிர்)
மோர் குடி - வேற்றுமைத் தொகையில் மிகவில்லை (மோரைக் குடி)
தாழ் சடை - இதுவும் வினைத் தொகை - மிகவில்லை.
வேய்ங்குழல் என்று வல்லொற்று மெல்லொற்றாகத் திரிதலும் உண்டு (வேய்- மூங்கில்)
"இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்",என்பது பொதுவிதி.
உயிரோசை இறுதியில் சொற்கள் முன் வரும். க,ச,த,ப க்கள் மிகும்.
(எ-டு)
1. வரச் சொன்னான் (ர் + அ = ர)
2. பலாப் பழம் - (ல் + ஆ = லா)
3. கரிக்கட்டை - (ர் + இ = ரி)
எதிர்மறைப் பெயரெச்சத்தில் (வலி) மிகாது.
(எ-டு)
வாடாத பூ (த் + அ = த)
அண்ணாதுரையா? அண்ணாத்துரையா?
துரை என்பது (Durai) வடசொல். மெல்லொலி கொண்டது. ஆதலின் "த்" மிகாது.
ஆனால் துரை (Thurai) என்று அழுத்தி ஒலித்தால் தமிழ் வல்லெழுத்தாகி அண்ணாத்துரை என்று வரும்.
ஒலிக்கும் முறையை ஒட்டி "வலி" மிகுதலும் மிகாமையும் ஏற்படுகின்றன.
தமிழ் வளரும்....
நன்றி:- தினமணி கதிர்
பாரதி
வாழ்த்துகள், பாராட்டுகள் சரியா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அண்ணா..
மீண்டும் குழப்பம் ஏற்படுத்துவதாக கருத வேண்டாம்.
கவிக்கோவின் கருத்துப்படி சொற்களைப் பிரித்து பொருள் கொள்ளும் வகையில் பார்த்தால், வாழ்த்துகள், பாராட்டுகள் என்பதே சரி என தோன்றுகிறது.
ஆனால் ....
தமிழாசிரியர் சாம்பவி அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தின் படி பார்த்தால், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்பதே சரி!! (ஒருமைக்கு வாழ்த்து, பாராட்டு என்பதே முறை என்பதையும் மறக்க வேண்டாம்.)
வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
கீழ்க்கண்ட திரியை மீண்டும் ஒரு முறை பாருங்களேன் அண்ணா.
http://www.tamilmantram.com/vb/showt...?t=8640&page=2
மொழிப்பயிற்சி - 9:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
கவிக்கோ.ஞானச்செல்வன்
ஞானசம்பந்தர் - ஞானச் செல்வர்
இரண்டிலும் ஞான என்பது நிலைமொழி.
ஒன்றில் ஒற்று மிகாமலும், ஒன்றில் மிகுந்தும் வந்துள்ளதேன்?
சம்பந்தர் (சம்பந்தம்) வடசொல். 'sa' என்ற ஒலியை உடையது. செல்வர் என்பது தமிழ்ச்சொல். செ (che) என அழுத்தி ஒலிக்கப்படுதலின் வல்லெழுத்து மிகுந்தது.
ஞானச்சம்பந்தர் என்பதும் ஞான செல்வர் என்பதும் பிழையாகும்.
ஞானபீடம் - இலக்கியப் பீடம்
ஞான பீட விருது என்கிறோம். இங்கே ஒற்று மிகவில்லை.
இலக்கியப் பீடம் இதழ் என்கிறோம். இங்கே ஒற்று மிகுந்துள்ளது. ஏன்?
ஞானம், பீடம் இரண்டும் வடசொற்கள்.
B - பீடம் என்பது இருக்கை. "இலக்கியம்" தமிழ். B - பீடத்தையும், P - பீடம் எனத் தமிழ் ஒலிப்படுத்தி உரைத்தலால் இலக்கியப்பீடம் என்று ஒற்று மிக்கது. மற்றும் பீடு + அம் என்றும் பிரித்துப் பெருமை, அழகு எனப் பொருள் காணலும் ஆகும். (அம்-விகுதி)
ஒருகால் - ஒருக்கால்
"உன்னால் ஒருக்காலும் இதைச் செய்ய முடியாது" என்று பேசுகிறோம்.
ஒரு பொழுதும், எந்தச் சமயத்திலும் முடியாது என்பதே இதன்பொருள்.
ஆனால் இச்சொல் ஒருகாலும் என்றிருப்பதே முறை, நெறி. இங்கே வல்லொற்று மிகாது.
ஒரு பொழுதும் என்பதை, ஒருப்பொழுதும் என்று சொல்லுவோமா?
இலக்கியச் சான்று:-
"ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்".
எதிர்க்கட்சி - எதிர்கட்சி
எதிரில் உள்ள கட்சி அல்லது எதிரியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி.
ஒரு விளையாட்டில் இரண்டு கட்சிகள் மோதும்போது எதிர் எதிரே இருந்து மோதுவதால் எதிர்க்கட்சி எனல் சரியே.
இவ்வாறே சட்டமன்றத்திலும் ஆளும் கட்சிக்கு வரிசைக்கு எதிரே இருப்பது எதிர்க்கட்சி எனல் பொருத்தமே.
ஆனாலும் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?
நேற்று எதிர்த்தது, இன்று எதிர்க்கிறது, நாளையும் எதிர்க்கும்.
எதிர்த்த, எதிர்க்கிற, எதிர்க்கும் கட்சியை எதிர்கட்சி என வினைத்தொகையாகச் சொல்லுதலும் சரியாகுமன்றோ?
ஒற்று இரட்டித்தல்:-
ஒற்றுமிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.
சோறு + பானை = சோறுப்பானை என்று எழுதுவதில்லை. சோற்றுப்பானை என்கிறோம்.
ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.
சோறு, ஆறு என்பவற்றுள் (ற் + உ= று) உள்ள "ற்" மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.
சோ+ ற் + ற் + உ = (சோற்று) ஒற்று இரட்டித்த பின் வலி (வல்லொற்று) மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.
அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும். அடையாறில் என்று எழுதுவது பிழை.
ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம். ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.
மாடு + சாணம் = மாட்டுச்சாணம் என்கிறோம்.
வீடு + சோறு = வீட்டுச் சோறு என்கிறோம்.
இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.
தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ்நாடு அரசு ஏன் வந்தது? தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.
கிணறு + தவளை = கிணற்றுத் தவளை.
காடு + பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு + அரசு = நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?
கட்டுப்பாடு + அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.
மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.
நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.
விளையாட்டு செய்திகள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். விளையாட்டுச் செய்திகள் என்று வல்லொற்று மிகுதல் வேண்டும்.
விளையாட்டைப் பற்றிய செய்திகள் என உருபும் பயனும் உடன் தொக்க தொகை இதுவாம். விளையாட்டுச் செய்திகளை விளையாட்டாய் எண்ணாதீர் (இக்குறிப்பில் ஒற்று இரட்டித்தல் இல்லை. வல்லொற்று மிகுதல் மட்டுமே)
தமிழ் வளரும்....
நன்றி:- தினமணி கதிர்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks