Page 13 of 15 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 LastLast
Results 145 to 156 of 174

Thread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)

                  
   
   
  1. #145
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 65: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



    கவிக்கோ ஞானச்செல்வன்


    "மாதராய்ப் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார்' என்று ஒரு மருத்துவத் திங்களிதழில் மூலிகை மருத்துவர் எழுதிய கட்டுரையில் படித்தோம். இந்தச் சொற்றொடரில் மூன்று பிழைகள் உள்ளன.

    "மங்கையராகப் பிறப்பதற்கே...' என்னும் தொடக்கத்தை மாற்றிவிட்டார். "நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று கவிதை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிஞர் பெயரைப் பாரதியார் என்று மாற்றிவிட்டார். மேலும் புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசனார்க்கு உரிய அடைமொழியைச் சேர்த்துவிட்டார். பாட்டு வரியில் பிழை; பாட்டின் ஆசிரியர் பெயரில் பிழை; அவர்தம் அடைமொழி (பட்டம்) யில் பிழை. சரியாக அறிந்து - அறிந்தவரைக் கேட்டு எழுதலாமன்றோ?

    "இருப்பிரிவினரிடையே மோதல்' ஒரு பத்திரிகைச் செய்தி. இரு பிரிவினர் என்று இயல்பாதல் வேண்டும். "ப்' போட்டு வலி மிக வேண்டாம். கோடியக்கரையும், கருப்புப் பணமும் மாறாமல் வந்து கொண்டேயுள்ளன. நாம் பலமுறை எழுதிவிட்டோம். இப்போதும் கோடிக்கரை, கறுப்புப்பணம் என்று எழுதுங்கள் என வேண்டுகிறோம்.

    கொஞ்சம் (கொஞ்சும்) இலக்கணம்:
    காளி கோவில் தெரு; காளிக் கோவில் தெரு - எது சரி? கோ.சு.மணி தெரு; கோ.சு.மணித் தெரு - எது சரி? இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் முதலில் வருவதே (க் - மிகாமல், த் - மிகாமல்) வருவதே சரி.
    ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலை மொழி உயர்திணையாய் இருப்பின் வல்லெழுத்து மிகாது.

    காளியது கோவில், மணியது (பெயர் கொண்ட) தெரு என்று விரியும் இவை. அது எனும் உருபு, காளி கோவில், மணி தெரு என்பனவற்றுள் மறைந்திருப்பதால் இவை ஆறாம் வேற்றுமைத் தொகைகள். காளி, மணி ஆகிய நிலைமொழிகள் உயர்திணை எனக் காண்க. நிலை மொழி முதலில் வருவது; கோவில், தெரு என்பன வருமொழிகள் (பின்னர் வந்து சேர்வன).

    தெருப் பெயராதலின் மணி தெரு என்று விட்டிசைத்தல் சரியே. மணித் தெரு எனில் மணியான (சிறந்த) தெரு என்று வேறு பொருள் உண்டாகக் கூடும்.

    நம்பி என்பது ஒருவர் பெயர். அவரது கையை எப்படி நம்பி கை (நம்பியது கை) என்று எழுதிட வேண்டும். நம்பிக்கை என்று எழுதினால் பொருளே மாறுபட்டுப் பிழையாகிவிடும். இவ்வாறே தம்பி தோள் எனில் தம்பியது தோள் எனப் பொருள்படும். தம்பித் தோள் என்றால் பிழை. தம்பித்துரையில் - "த்' வருகிறதே! வலி மிகல்தானே இது? ஆம். வல்லெழுத்து மிகுதல்தான். ஆனால் தம்பி எனும் பெயரும், துரை என்னும் பெயரும் ஒன்றோடொன்று ஒட்டி நிற்பவை. அஃதாவது தம்பியாகிய துரை என்று பொருள். இதனை இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். இவ்விடத்து வல்லொற்று மிகும் என்பது இலக்கண விதி.

    சற்றே சொல்லாய்வோம்:
    ஆகாய விமானம் என்னும் சொல் நிரம்ப நம் பயன்பாட்டில் உள்ளது. பேசுகிறோம், செய்தியிதழ்களில் படிக்கிறோம். இதற்குச் சரியான தூய தமிழ்ச் சொல் நம் எல்லார்க்கும் தெரிந்த ஒரு சொல் "வானூர்தி' இருக்கிறதே! இச்சொல்லை ஏன் பயன்படுத்துவதில்லை? வானில் செல்லும் (பறக்கும்) ஊர்தி (வாகனம்). வானூர்தி - பொருள் வெளிப்படையானது.

    தமிழர்கள் ஒட்டுநர் இல்லாமல், தானே இயங்கும் வானூர்தியும் கண்டனர் போலும். "வலவன் ஏவா வான ஊர்தி' என்பது சங்கப் பாட்டு வரி. (வலவன் - பைலட்). சிலப்பதிகாரத்தில் வான ஊர்தி வருகிறது, கண்ணகியை வானுலகு அழைத்துச் செல்லுவதற்காக. சிந்தாமணியில் மயில் வடிவில் அமைந்த வானூர்தி - மயிற்பொறி பேசப்படுகிறது. இராவணன் சீதையைக் கவர்ந்து வானூர்தியில் கொண்டு சென்றான் (தமிழ்க் கம்பன் கூற்றுப்படி) என்றும் படித்துள்ளோம். ஆக வானூர்தியைப் பரப்புவோமாக!

    தமிழிலுள்ள சில சொற்கள் பிறமொழிச் சொல்லாக இருத்தல் கூடும். முருங்கைக்காய் என்பதை அப்படி யாராவது நினைக்க முடியுமா? தமிழ்நாட்டுக் காய், தூய தமிழ்ப் பெயரே இது என்றுதான் எண்ணுவோம். "முருங்கா' என்னும் சிங்களச் சொல்லே முருங்கை எனத் தமிழில் திரிந்தது என்று "தமிழ் வரலாற்றிலக்கணம்' எனும் நூலில் அ.வேலுப்பிள்ளை எனும் தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

    நம் தமிழ்நாட்டுக்குரிய முப்பழங்களுள் இரண்டின் தமிழ்ப் பெயரை நம் தமிழ்ப் பிள்ளைகள் மறந்தனரோ? எனும் ஐயம் எழுகிறது. வாழைப் பழத்தைப் "பனானா' என்றும் மாம்பழத்தை "மாங்கோ' என்றும் எங்கும் எப்போதும் இயல்பாகச் சொல்லுகிறார்கள். மாதுளம் பழம் என்பதும், "பொம்மகர்னட்' என்றுதான் பள்ளிப் பிள்ளைகளால் சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிப்பது காரணம். வீட்டிலாவது பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களைச் சொல்லித் தர வேண்டும்.


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  2. #146
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 66: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



    கவிக்கோ ஞானச்செல்வன்


    தமிழ்நாட்டில் பல கருவிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவற்றையெல்லாம் இளம் தலைமுறையினர் அறியாதே இருக்கின்றனர். அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. எடுத்துக்காட்டாக, சுத்தியல் (ஹாமர்), திருப்புளி (ஸ்குரு டிரைவர்), குறடு (கட்டிங் பிளேயர்), ரம்பம் (சா) என்பனவற்றைச் சொல்லலாம்.

    ரம்பம், வாள் என்றும் சொல்லப்பட்டது. வாள் பட்டறை என்று மரம் அறுக்கும் இடத்துக்குப் பெயர். திருகு (ஸ்குரு) என்றும் திருகாணி என்றும் (நகை - தோடுகளில் இருப்பது) சொற்கள் நம்மிடையே இன்றும் உண்டு.

    பழகு தமிழ்ச் சொற்களை மறந்துவிட்டால், தமிழில் சொல்வளம் - சொற் பெருக்கம் குறைய வாய்ப்புண்டு. கணினி வரவுக்குப் பின் புதிய பல சொற்களும் தமிழுக்கு வந்தன. தொடுதிரை, சொடுக்கி, முகப்பக்கம், இணையதளம், வலைமுகவரி, மின்னஞ்சல் இப்படிப் பல உள்ளன. தமிழில் புதிய சொற்களை உருவாக்க வழி இருப்பதால் நாம் பிற மொழிச் சொல்லைப் பெரும்பாலும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. "டெக்னிக்' என்பதை தொழில்நுட்பம் எனத் தமிழில் சொல்லுகிறோம். இந்தியில் டெக்னிக் - டெக்னிக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

    ஆனாலும் சில போதுகளில் இடர் தோன்றாமல் இல்லை. இருப்புப்பாதை (ரயில்வே)யில் ஓடும் வண்டியை ஆகுபெயராக ரயில் என்றே குறித்தோம். நிலக்கரியில் ஓடிய காலத்தில் புகைவண்டி எனத் தமிழில் சொன்னோம். ஈழத்தில் புகைரதம் என்றார்கள். (ரதம்- வடசொல்) இப்போது ரயிலைத் தொடர்வண்டி என்று சொல்லுகிறோம். சிலர் கேட்கிறார்கள்: இரண்டு பேருந்து இணைத்துச் செல்வதும் தொடர்வண்டிதானே? ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வன எல்லாம் தொடர்வண்டிகள்தாமே! வேறு சொல் இல்லையா? இந்தியில் வண்டி எனப் பொருள்படும் காடியைப் பயன்படுத்துகிறார்கள். (காடி தமிழிலும் இருந்துள்ளது பற்றி முன்னரே எழுதியுள்ளோம்)

    தமிழில் மிதிவண்டி முதலாக, மகிழுந்து (ஸ்ரீஹழ்) வரை எல்லாவற்றையும் வண்டி என்று சொல்லும் முறை உள்ளது. ரயில் என்பதைத் தமிழ் எழுத்துமுறைப்படி இரயில் ஆக்கி, இரயில் வண்டி என்று கொள்ளலாமோ? என்று நினைக்கிறோம். எழுதும்போது "இ' சேர்த்தாலும் சொல்லும்போது ரயில் என்றே சொல்லலாம். அறிஞர்கள் தம் கருத்தை அல்லது வேறு சொல்லை அளிப்பார்களாக.
    ஒருவர், ""பால்கனிக்குத் தமிழ் என்ன?'' என்று கேட்டார். பால்கனி தமிழ்தானே! பால், கனி (பழம்) தமிழ்ச் சொற்கள் அல்லவோ என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சிந்தித்தோம். நிலா முற்றம் என்று சொல்லலாமே! நிலாமொட்டை மாடியிலும் நன்றாகத் தெரிந்தாலும் வீட்டின் ஒரு பகுதியான பால்கனியில் நின்று நிலவைப் பார்க்க முடியும்.

    அதனால் நிலா முற்றம் எனலாம். "வேயா மாடமும் வியன்கல இருக்கையும்' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு தொடர் உண்டு. இதில் வேயா மாடம் - மேலே கூரை வேயப்படாத திறந்தநிலை மாளிகை எனலாம். இப்போதெல்லாம் சில உயர்நிலை உணவகங்களில் "ரூஃப் கார்டன்' எனும் இடத்தில் உணவு பரிமாறுகிறார்கள். இதுவே வேயா மாடம்.

    "மான்கள் காலதர் மாளிகை' பற்றியும் சிலம்பில் வருகிறது. முன்னரே எழுதியுள்ளோம். ஈண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் நல்லது. மானின் கண்போல் வடிவமைக்கப்பட்ட துளைகளைக் கொண்ட காற்றுவீசும் வழிகள் அமைக்கப்பட்ட மாளிகை. காற்றுவீசும் வழி எது? இன்று ஜன்னல் (சன்னல்) என்கிறோமே, அதுதான். சிலர் "சாளரம்' என்றும் சொல்வர். இதற்கு அழகான தூய தமிழ்ச் சொல் காலதர் (கால் - காற்று; அதர் - வழி)

    தீபாவளி என்னும் சொல் தீபம் + ஆவளி என்னும் சொற்களின் சேர்க்கை. தீபங்களின் வரிசை என்று பொருள். தீபம் + ஆவளி இரண்டும் வடசொற்களே. வடக்கே தீபங்களை அடுக்கி வரிசையாக ஏற்றி இன்னும் வழிபடுகிறார்கள். (நாம் கார்த்திகைத் திருநாளில் செய்கிறோம்). தீபாவளியைத் தீப ஒளித்திருநாள் ஆக்கியிருக்கிறோம். ஒளி - தூய தமிழ்ச்சொல்; தீபம் வடசொல்லே.

    மகவுப்பேறா? மகப்பேறா?
    மகப்பேறு மருத்துவமனை என்று பலகை பார்க்கிறோம். நாமும் எழுதுகிறோம். "மகவு என்றால்தான் பிள்ளை; அதனால் மகவுப் பேறு மருத்துவமனை என்றுதானே இருக்க வேண்டும்' எனப் பெரியவர் ஒருவர் நம்பால் கேட்டார்.

    உண்மைதான், தொல்காப்பியத்திலும் இளமைப் பெயர்கள் பற்றி நூற்பா (சூத்திரம்) 1500-இல் மகவு என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்மகன், பெண்மகள் என்று எழுதுகிறோம். மகன், மகள் எப்படி வந்தன? மகவு என்னும் சொல் மக - எனத் திரிந்து அன் விகுதி பெற்று ஆண்பாலாகவும், அள் விகுதி பெற்றுப் பெண்பாலாகவும் ஆயின என்று சொல்லலாம்.


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  3. #147
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    திருப்புளி, கொறடு, சுத்தியல் போன்ற சொற்களை என் தாத்தா, அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதன்பின் மற்றவர்கள் வாயிலிருந்து கேட்பதெல்லாம் ஆங்கில வார்த்தைகளே. பிள்ளைகளுக்கும் தமிழில் சொன்னால் புரிவதில்லை. சுத்தியல் எடுத்து வா என்றால் சுற்றி சுற்றி வருகிறார்கள். விளக்கம் சொன்னபின் அதன் பெயர் hammer. இனி அப்படியே சொல்லுங்கள் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

    படிக்காதவர்களிடமும் அரைகுறையாகவேனும் ஆங்கில வார்த்தைகளே புழங்குகின்றன, பள்ளிக்கூடத்தை இஸ்கூல் என்பது போல். வேலைக்காரம்மாவிடம் குழாயை மூடச்சொன்னால் முழிக்கிறார். பைப் என்று சொன்னால்தான் புரிகிறது. எல்லாம் காலக்கொடுமை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. தமிழ் வார்த்தைகளை படிப்படியாக மறைந்துபோக விடாமல் நினைவுக்குக் கொண்டுவர முயலும் இதைப்போன்ற கட்டுரைகள் இன்று மிகவும் தேவை.

    பால்கனிக்கு நிலாமுற்றம் என்னும் சொல் பொருத்தமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

  4. #148
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்கு மிக்க நன்றி கீதம்.

    -----------------------------------------------------------------------
    மொழிப்பயிற்சி - 67: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!



    கவிக்கோ ஞானச்செல்வன்


    குழந்தைப் பேறு என்பதில் மகனோ, மகளோ பிறக்கக்கூடும். இவ்விரண்டிலும் "மக'தான் உள்ளது; "மகவு' இல்லை. ஆதலின் மகப்பேறு என்று குறிப்பதில் தவறில்லை. மகன், மகள் என்னும் சொற்கள், தொல்காப்பியம், சங்கநூல்கள் எனப் பண்டுதொட்டு இருப்பனவேயாம். மக்கள் என்னும் சொல்லும் "மக' அடிப்படையில் உருவானதாக இருக்கக்கூடும்.

    "கள்' விகுதி பயன்பாட்டில் மிகுதியாக இல்லாத காலத்திலேயே மக்கள் எனும் சொல் உண்டு. "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே' (தொல்), "மக்கள், தேவர், நரகர் உயர்திணை' என்று நன்னூல் பிற்காலத்தில் நவின்றது.

    "என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்' புறநானூறு, பாரிமகளிர் (மகள்+இர்) இர் பலர்பால் விகுதி-மகள்-மகளிர் சங்கச் சொல்லே.
    மகம்+நாளில்-மகநாளில் இதிலுள்ள மகம் என்பது வேறு. இது மக மீனைக் குறிக்கும் (மக நட்சத்திரம்) மகவு-மக என்பது வேறு. மகவுப்பேறு என்பதனினும் மகப்பேறு எனச்சொல்லுதல் எளிது. அதனால் மகப்பேறு நிலைபெற்றுவிட்டது.

    வல்லொற்றின் பின் மெய்யெழுத்து வராது. இதுபற்றித் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் சொல்லித் தந்திருப்பார். வல்லினப்புள்ளி எழுத்துக்கள் (எ-டு: ட்,ற்) பின்னே மற்றொரு ஒற்று வராது எனக்கூறி கற்க்கண்டு என எழுதக்கூடாது. கற்கண்டு என்று எழுதுக எனச்சொல்லியிருப்பார்.

    ஆயினும் இன்னும் பலர் பயிற்ச்சி என்று எழுதுகிறார்கள். "ற்' ஓசையே அழுத்தமாக இருப்பதால் "ச்' அழுத்தம் தனியே வேண்டாம் என்றே இலக்கண நூலார் "ற்' றோடு "ச்' சேராது என்றனர். சொல்லாக உச்சரிக்கும்போது அந்த ச் ஒலி இருக்கிறது என்பதை உணர்க. அதனால்தாம் சிலர் தம்மையறியாமலேயே பயிற்ச்சி என்று எழுதிவிடுகிறார்கள்.

    பற்ப்பசை என்பதும் அத்தகைய ஒரு சொல். பற்பசை என்றே எழுத வேண்டும். இவ்வாறே உட்கார் என்பதை உட்க்கார் என்றெழுதுவதும் பிழை. இனி நீங்கள் எழுதும்போது கவனமாக உட்காருங்கள், பற்பசை கொடுங்கள், கற்கண்டு எடுத்துக்கொள்ளுங்கள், நாளும் பயிற்சி செய்யுங்கள் என்று தவறின்றி எழுதுவீர்களாக.

    வல்லொற்று இரட்டித்தல் உண்டு; இது வேறு. எந்த வல்லொற்று வந்ததோ அதே எழுத்து- இன்னொரு சொல்லோடு சேர்கிறபோது இரட்டித்தல் அது. (எ-டு) காட்டரண் (காடு+அரண்) ட் இரட்டித்தது, சோற்றுப்பானை (சோறு+பானை) ற் இரட்டித்தது.

    இலக்கணம் எதற்கு?
    பேசுவதற்கும் எழுதுவதற்கும் எதற்கு இலக்கணம்? நாமறிந்தபடி பேசுவதில் என்ன தவறு என்று சிலர் கருதக்கூடும். இலக்கணம் என்பது புதிதாகத் திணிக்கப்படும் ஒரு கருத்தன்று. காலம் காலமாக நம் பேச்சில், எழுத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறியே இலக்கணம். முன்னரே எழுதப்பட்ட இலக்கியங்களின் றே இலக்கண விதிகள் எடுக்கப்பட்டன.

    இதனை "எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எடுக்கப்பட்டது' என அறிஞர் உரைப்பர். எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைக் காண்போமே.
    "நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்' என்று சொல்லுகிறோம். இதில் வாக்களித்தனர் என்பதைப் பிரித்தால் வாக்கு+அளித்தனர் என்றாகும். இப்படிச் சேர்ந்தபோது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்ன? வாக்கு என்ற சொல்லில் (க்+உ=கு) இறுதியில் நின்ற "உ' எனும் ஓசை நீங்கிவிட்டது. "கு'வில் "உ' நீங்கினால் "க்' இருக்கும். இதனோடு வருமொழி முதலில் உள்ள "அ' சேர்ந்து க்+அ=க வாக்களித்தனர் என்றாகிறது.

    "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்பது விதி. இந்த விதியைப் பார்த்தா நாம் பேசுகிறோம்? இயல்பாக நாம் பேசும்போது இவ்விதி அதனுள் அடங்கியிருக்கிறது. இன்னும்சில காட்டுகளைப் பார்ப்போமா?

    நேற்று+இரவு=நேற்றிரவு
    நண்டு+ஓடி=நண்டோடி

    சரி, மேற்சொன்ன நூற்பாவின் (சூத்திரம்) விளக்கம் சொல்லவில்லையே. வருமொழி முதலில் உயிர் எழுத்து வருமானால், நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் தான் ஏறியிருந்த மெய்யெழுத்தை விட்டு நீங்கிவிடும்.

    முதலில் இருக்கும் சொல் நிலைமொழி; அதனுடன் சேரும் சொல் வருமொழி.

    வாக்கு-நிலைமொழி; அளித்தனர்-வருமொழி. வாக்குவில் உள்ள இறுதி "உ' குறுகிய ஓசைகொண்ட உகரம் ஆகும் (குற்றியலுகரம்). "உ' என்னும் எழுத்துக்கு ஒரு மாத்திரை ஒலியளவு. (கை நொடிப்பொழுது ஒரு மாத்திரை)

    வாக்கு என உச்சரிக்கும்போது "கு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கிறதா? இல்லை. நடு, நாடு-இரண்டையும் உச்சரித்துப் பாருங்கள் "நடு'வில் உள்ள "உ' முழுமையாக ஒலிக்கும்; நடுவில் உள்ள "உ' அரையளவு ஒலிக்கும். இதற்கு அரை மாத்திரை மட்டுமே.


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  5. #149
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 68: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    குற்றியலுகரம் ஆறுவகையாக அமையும்.

    குற்றியலுகரம் க்,ச், ட், த், ப், ற் எனும் ஆறு வல்லின மெய்கள் மேல் ஏறிவரும். அதாவது கு,சு,டு,து,பு,று என்றே அமையும். இந்த ஈற்றெழுத்துகளின் அருகில் (முன்) இருக்கும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப் பிரிவு செய்யப்பட்டுள்ளன.

    பாக்கு - வன்தொடர்க் குற்றியலுகரம்

    வண்டு - மென்தொடர்க் குற்றியலுகரம்

    பல்கு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்

    பயறு (ய்+ அ ) - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

    அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

    நாடு - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

    "ய' என்னும் உயிர் மெய் எழுத்தின் முடிவில் "அ' எனும் உயிர் ஓசை கொண்டு இதனை உயிர்த்தொடர் என்பர். நெடில் தொடரில் ஆடு என்று உயிரோ காடு என்று உயிர்மெய்யோ வரலாம். நெட்டெழுத்தாக இருத்தல் வேண்டும். புரிந்தும் புரியாமலும் இருக்கிறதா? திரும்பத் திரும்பப் பொறுமையாகப் படித்துப் பார்த்துத் தெளிவு பெறுக.

    எப்படி நேர்கின்றன?

    பிழைகள் சில எப்படி நேர்கின்றன என்று புரியவில்லை. ஒரு செய்தியறிக்கையில், "மரப்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள்' என்று நீண்டது அச்செய்தி. படிக்கும்போது நாக்குத் தடுமாறி, விபத்து என்னும் சொல் இடையில் புகுந்ததோ?

    பூசணிக்காய் என்பதும் பரங்கிக்காய் என்பதும் வேறானவை. பச்சை நிறத்தின் மேல் வெண்படலம் பூசினாற்போல் புறத்தோற்றம், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப் பகுதி இருப்பது பூசணிக்காய். பரங்கிக்காய் இளையதாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின் (பழுத்து) பழுப்பு நிறத்தில் இருக்கும். அறுத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப்பகுதி இருக்கும். பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று சொல்லும் வழக்கமுண்டு. பாரதி, "வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே' என்று பாடியுள்ளார். யாரும் பரங்கிக்காயைப் பூசணிக்காய் என்று சொல்லார்.

    ஒரு தொலைக்காட்சியில் பூசணிக்காய்த் திருவிழா என்று செய்தியில் சொன்னார்கள்; காட்டப்பட்டதோ, நன்றாகப் பழுத்த (பழுப்பு) பரங்கிக் காய்களாகும். இஃதொரு பிழையா எனில், ஆம், பிழையே. தமிழில் இருவேறு பொருளுக்கு இருவேறு பெயர்கள் உள்ளன என்பதை அறியாமல் பேசுவது பிழையன்றோ?

    "ஒவ்வொரு பூக்களுமே' திரைப்பாடல் வெளிவந்தபோதே ஒவ்வொரு பூவும் என்றுதானே வரும்? பூக்கள் என்றது பிழை என்று பேசப்பட்டதைப் பலரும் அறிவர். "இதழில் வெளிவரும் ஒவ்வொரு துணுக்குகளும் அருமை' எனும் வாக்கியத்தைப் படித்தபோது மேற்சொன்ன பாடல் பற்றிய செய்தி நினைவில் எழுந்தது. ஒவ்வொரு துணுக்கும் என்றோ எல்லாத் துணுக்குகளும் என்றோ எழுதிட வேண்டும்.

    இவ்வாறே "ஐந்து பேரின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது'. இந்த வாக்கியத்திலும் ஒருமை, பன்மை மயக்கம் உள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று முடித்தல் வேண்டும்.

    "சட்டத்தைத் திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று ஒரு செய்தியாளர் படித்தார். சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இத்தொடர் அமைந்திட வேண்டும்.

    அமெரிக்காவில் மணியடித்தான்!

    எதற்கு என்று வினவுகிறீர்களா? எதற்குமில்லை. அமெரிக்காவில் என்பது தனி; மணியடித்தான் என்பது தனி. இரண்டையும் ஏன் இங்கே காட்டினோம் என்பது பற்றிப் பார்ப்போம்.

    அமெரிக்கா, ஒரு நாட்டின் பெயர். அஃதென்ன "வில்'? அது "வில்' அன்று "இல்' எனும் உருபு "வில்'லாக மாறியது. எப்படி? அமெரிக்கா (க்+ஆ= கா) எனும் சொல்லில் இறுதி, "ஆ' என்று உயிரெழுத்து ஓசையில் முடிகிறது. இல் என்னும் உருபுவில் "இ' என்னும் உயிரெழுத்து இருக்கிறது. இரண்டு உயிர்களையும் ஒன்றிணைக்க ஈண்டு "வ்' எனும் மெய்யெழுத்து பயன்பட்டது. இதற்கு உடன்படு மெய் என்று பெயர். இரண்டு உயிர் எழுத்துகள் ஒன்றொடொன்று சந்திக்கும்போது அவற்றை உடம்படுத்த (சேர்க்க) பயன்படும் மெய். அமெரிக்கா + இல், அமெரிக்கா+வ்+இல் = அமெரிக்காவில்.

    மணியடித்தான் என்பதைப் பிரித்தால் மணி+ அடித்தான் என்றாகும். இவற்றுக்கு இடையில் "ய்' என்னும் மெய்யெழுத்து வந்து இரண்டையும் இணைக்கிறது. மணி (ண்+இ)+ய்+அடித்தான் (ய்+அ=ய) மணியடித்தான்.

    ஆக, வ்,ய் எனும் இரண்டும் உடம்படு மெய்கள் என்று இலக்கணம் சுட்டுகிறது. நாம் இந்த இலக்கணத்தைப் பார்த்தா பேசுகிறோம்? நாம் பேசுவதில் இந்த இலக்கணம் அமைந்து கிடக்கிறது. அமெரிக்காவில் (வ்), இந்தியாவில் (வ்), திருச்சியில் (ய்) இங்கு ஏன் "ய்' வர வேண்டும்?


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  6. #150
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 69: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்' யும், ஏனைய உயிர்கள் இருந்தால் "வ்' வும் "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும். தே (த்+ஏ)+வ்+ஆரம்= தேவாரம். அவனே (ஏ)+ய்+அழகன் = அவனேயழகன்.

    அமெரிக்காவில் "ஆ' இருப்பதால் "வ்' வந்தது. திருச்சியில் "இ' இருப்பதால் " ய்' வந்தது. தேவாரத்தில் "ஏ' காரம் உள்ளது. இதில் "வ்' வந்தது. அவனே - இலும் "ஏ' காரம் இருக்கிறது. இதில் "ய்' வந்தது. (இரண்டும் வரும்) ஆனால் கோவில், கோயில் என இரண்டு வகையாய் எழுதுதல் சரியன்று. கோவில் என்பதில் "ஓ' உள்ளது. "ஓ' இருந்தால் "வ்' தான் உடம்படு மெய். ஆதலின் கோவில் மட்டுமே சரி. கோ+இல் = கோ (க்+ஓ)வ் +இல் (வ்+இ=வி) கோவில்.

    தெரிந்தும் தெரியாமலும்:
    தெரிந்து செய்யும் பிழைகள், தெரியாமல் செய்யும் பிழைகள் என இரண்டு உண்டு. நம் வாழ்வில் நம் செயல்களில் நேர்கின்ற பிழைகள் மட்டுமல்ல ; மொழியை எழுதுவதிலும் இப்பிழைகள் இரண்டும் நேர்கின்றன.

    கணபதி என்பது ஒருவர் பெயர் (வடமொழிப் பெயர்தான்). இதனை ஆங்கிலத்தில் மிடுக்காக "கண்பத்" என்று சொல்லத் தொடங்கினர். இப்போது "கண்பத்'தும் போய் (பத்துக் கண்கள் அல்ல) "கண்பட்' ஆகிவிட்டதே! இதுதான் கொடுமை; இது தெரிந்தே செய்யும் பிழை.
    இவ்வாறே பழனிச்சாமி என்ற அழகிய தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் எழுதி, சுருக்கி - பால் என்றாக்கி, பால் சகோதரர்கள் என்று வணிக நிலையத்துக்குப் பெயர் வைக்கிறார்கள். மனம் தாங்காத இப்பிழையும் தாங்கித்தான் வாழுகிறோம்.

    கோனார் தமிழ் உரைநூலின் முதலாசிரியர் ஐயன்பெருமாள் கோனார்; பெரும் புலவர். இந்தப் பெயரை ஐயன் பெருமாள் என்று சொல்லாமல் ஐயம் பெருமாள் என்று பேச்சு வழக்கில் உரைத்தனர். இது தொடர்ந்து இன்று அய்யன் கணபதி என்னும் பெயரை அய்யம் கணபதி என்று ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள். இதிலுள்ள அய்யம், சந்தேகம் என்னும் பொருளைத் தருமே ஐயா. இது சரியா?

    சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் பருவம்; இதனையே வசந்த காலம் என்பர். இப்போது (இதை எழுதும் நாளில்) ஐப்பசி மாதம் - இதில் ஒருநாள் தொலைக்காட்சிச் செய்தியில், ""இது வசந்த காலமாதலால் முதுமலை சரணாலயத்தில் விலங்குகள் அதிகம் கூட்டம் கூட்டமாய்க் காணப்படுகின்றன'' என்று படித்தார் ஒருவர். இந்தச் செய்தியை எழுதிய செய்தி ஆசிரியர்க்கோ, படித்தவர்க்கோ வசந்தகாலம் என்பது எது என்று தெரியவில்லை. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம் என்பார்கள். இந்தப் பருவத்தில் குளிர் மிகுதியாக இருக்கும். ஆதலின் இலக்கணத்தில் "கூதிர்காலம்' என்ற பெயர் உண்டு.

    கூதிர் (குளிர்) காலத்தை வசந்த காலம் (இளவேனில்) என்றது தெரியாமல் செய்த பிழை. அவர்களுக்கு இந்தப் பருவங்களின் பாகுபாடு பற்றித் தெரியவில்லை. ஆயினும் பிழை, பிழைதானே?
    ஒரு செய்தியில் "இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் தாக்குதல்' என்று தலைப்புச் செய்தியில் சொன்னார்கள். நம் மீனவர்கள் எப்போது தாக்கத் தொடங்கினார்கள்? இவர்கள்தாம் அடிவாங்கி உதைபட்டு வருகிறார்களே! இந்தக் கொடுமை தீரவில்லையே! இந்த வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிட்டார்கள். "இராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்' என்று சொல்லியிருக்க வேண்டும். "மீது' விட்டுப் போனதால் வந்த வினை இது.

    பேச்சு வழக்கில் படித்தவர்கள் கூட வியபாரம் என்றும், இராமியாணம் என்றும் பேசக் கேட்டிருக்கிறேன். வியாபாரத்தை (வணிகம்), இராமாயணத்தை இப்படிப் பிழையாகச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.

    கனவுப் பட்டறை என்று சரியாகச் சொல்லி கனவு பட்டறை என்று எழுத்தில் காட்டுகிறார்கள். மணிச் செய்திகள் என்று சொல்லி மணி செய்திகள் என்று எழுத்தில் காட்டுகிறார்கள். வேறுபாடு புரிவதில்லையா?

    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  7. #151
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 70: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    ஏவலும் வியங்கோளும்:

    வா, செய், படி, நில் - ஏவல் (கட்டளை)

    வருக, செய்க, படித்திடுக, நிற்க - வியங்கோள்

    இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து ஏவல் என்பது ஆணையிடுவதாகவும், வியங்கோள் என்பது வேண்டுகோளாகவும் இருக்கின்றன என அறிந்து கொள்ள முடியும். இந்த இரண்டும் இல்லாது, நாம் புதிதாகச் சொல்லிவரும் சொற்களான வரவும்,செய்யவும், படிக்கவும், நிற்கவும் என்பன போன்றவை பிழையானவை என்று முன்னரே எழுதியிருக்கிறோம். "உம்' என்பது இணைப்பு இடைச்சொல். இதனைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

    ஏவலுக்கும், வியங்கோளுக்கும் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் வினைமுற்றுகளாகும். ஏவல் வினைமுற்றுக்கும், வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி பள்ளியில் படித்திருக்கக்கூடும். ஏவல் வினைமுற்று, ஒருமை,பன்மை, வேறுபாடு உடையது.
    (எ-டு) நீ வா, நீங்கள் வாருங்கள் ஏவல் வினைமுற்று முன்னிலை இடத்தில் மட்டும் வரும்.
    (எ-டு) நீ செய், நீங்கள் நில்லுங்கள் என்பதன்றி நான், நாங்கள் எனும் தன்மையோடும், அவன், அவள், அவர்கள் எனும் படர்க்கையோடும் இணையாது. ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டும் வரும். (எ-டு) ஓடு, ஓடாதே, அடி, அடிக்காதே வியங்கோள் வினைமுற்று ஒருமை பன்மையில் வேறுபடாது.
    (எ-டு) அவன் வாழ்க!, அவர்கள் வாழ்க! வியங்கோள் வினைமுற்று மூவிடங்களிலும் வரும்.
    (எ-டு) நாம் வாழ்க (தன்மை), நீவிர் வாழ்க (முன்னிலை), அவர்கள் வாழ்க! (படர்க்கை) வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் எனும் பொருள்களில் வரும்.
    (எ-டு) வாழ்க, வெல்க (வாழ்த்துதல்), ஒழிக, அழிக (வைதல்), வருக, உண்க (வேண்டுதல்), செய்க, நிற்க (விதித்தல்) எதற்கு ஐயா இந்த விளக்கம் எல்லாம் என்று வினவுகிறீர்களா? நாம் பிறரை வாழ்த்துவதானாலும், வைவதானாலும், வேலை வாங்குவதானாலும், வேண்டுவதானாலும் இலக்கணப்படிப் பேசுவோமே! பேசினால் நல்லதுதானே என்னும் நோக்கத்தால் இவற்றை எழுதினோம்.

    வியங்கோள் வினைமுற்று க, இய, இயர் என்னும் விகுதிகளைக் கொண்டு முடியும் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.
    (எ-டு) வாழ்க, வாழிய, வாழியர் (வாழ்த்துப் பொருளில் மட்டுமே) திருக்குறளில் பல அறநெறிகளைச் சொல்லியுள்ள திருவள்ளுவர் ஏவல் வினையில் பெரிதும் சொன்னதில்லை. எல்லாம் வியங்கோளாகவே காண்கிறோம்.

    "கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' (கற்க, நிற்க) "எனைத்தானும் நல்லவை கேட்க தன்னைத்தான் காக்கின் சினம் காக்க செய்க பொருளை; அஞ்சுவது அஞ்சுக' இப்படி நிரம்ப எடுத்துக்காட்டுகளைக் காணலாம். ஒüவையின் ஆத்திச்சூடியில் இதற்கு நேர்மாறாக எல்லாம் ஏவலாக இருக்கக் காண்கிறோம். அறஞ்செய விரும்பு, இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், ஐயமிட்டு உண், ஒப்புரவொழுகு, ஓதுவது ஒழியேல். இப்படிப் பலவும். விரும்பு எனும் ஏவல் விரும்புக எனின் வியங்கோளாகும். உண் எனும் ஏவல் உண்க எனில் வியங்கோளாகும். ஒழுகு எனும் ஏவல் ஒழுகுக எனில் வியங்கோளாகும் (கரவேல் - ஒளிக்காதே, விலக்கேல் - விலக்காதே, ஒழுகு - கடைப்பிடி, ஒழியேல் - விட்டுவிடாதே) இடமறிந்து இவற்றையெல்லாம் நம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி வந்தால் தமிழ் நலம் பெறும்.

    தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்
    தெளிவாக அறிந்திருப்பவர் தெளிவாகப் பிறர்க்கு உரைக்க முடியும். உரைப்பவர்க்குத் தெளிந்த அறிவு இல்லையானால் கேட்பவர் குழப்பமே அடைவர். மேற்காணும் பாரதியின் வாக்கு அந்த மகாகவியின்,"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்னும் தொடரை நினைவூட்டுகிறது. "ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் இராசராசனுக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது' - இது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. இதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் தெளிவு இல்லை? எப்படி?

    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  8. #152
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 71: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


    கவிக்கோ ஞானச்செல்வன்


    சதய நட்சத்திரம் ஓர் ஆண்டில் பன்னிரண்டு. ஒரோ வழி பதின்மூன்று வருமே. இருபத்தேழு நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சுழற்சிமுறையில் வருவதால் மாதா மாதம் சதயம் வருகிறதே!

    என்ன சொல்ல வேண்டும்? ஆண்டுதோறும் "ஐப்பசி - சதய நட்சத்திரத்தன்று' என்று மாதத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஐப்பசித் திங்கள் சதய விண்மீன் நிலவும் நாளில் இராசராசச் சோழன் பிறந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன்.

    ஒரு கட்டுரையில் படித்தோம்: ""தீக்குச்சி எரிந்து கையைச் சுட்டு - கொப்புளம் வருமளவும் தன்னை மறந்திருக்கிறது தானே எழுத்தாளன்?'' இத்தொடரில் பிழையுள்ளதா? ஆம், உள்ளது.

    மறந்திருப்பவன்தானே எழுத்தாளன் என்று இருந்தால் பிழையற்று அமையும். இத்தொடரைச் சிலர் வலிந்து பேசி சரிதானே என்பர். எப்படி? தன்னை மறந்திருக்கிறது எழுத்தாளன் தன்மை- அதை உடையவன் எழுத்தாளன் என்பதை அப்படி அழகுற எழுதியிருக்கிறார் என்பார்கள். இந்த முட்டுக்கால்கள் எல்லாம் நில்லா. பிழையைப் பிழை என ஏற்பதே அழகு.

    எழுத்துக்களா? எழுத்துகளா?

    கள் எனும் பன்மை விகுதி சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது என்று முன்னரே நாம் எழுதியிருந்தோம். அதனால் நாள்கள், வாழ்த்துகள் என இயல்பாக எழுதுதல் நன்று எனக் குறிப்பிட்டோம். ஆயினும் வாழ்த்துகள் என வல்லொற்று மிகுந்து ஒலிப்பினும் பிழையில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஆனால் "இனிப்புக்கள் வேண்டா' (பொருள் திரிபு ஏற்படும் என்பதால்) என எழுதினோம்.

    வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

    எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

    உரையாசிரியர்களைச் சான்று காட்டியுள்ளீர்களே, மூல ஆசிரியர்கள் எப்படி எழுதியுள்ளார்கள்? எனும் ஐயம் எழும். "எழுத்தென படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' (தொல்) கள் விகுதியே பயன்படுத்தாமல் அக்காலத்து எழுதினர். அகர முதல் எழுத்தெல்லாம் (திருக்குறள்), "உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' (நன்) இப்படியே மூலநூலார் யாரும் "கள்' விகுதிக்கு இடம் தரவில்லை.

    "லளவேற் றுமையில் றடவும்' என்னும் நன்னூல் சூத்திரம் வழியாக லகரம், ளகரம் எனும் இரண்டு ஈறும் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே றகரம், டகரம் என மாறுபடும் என்றறிவோம். அதனால்தான் நாள் + கள் = நாட்கள் என்று சொல்லும் வழக்கம் தோன்றியது. ஆயினும் இலக்கியச் சான்றுகள் "நாள்கள் செலத் தரியாது' என்பதுபோல் இயல்பாகவே உள்ளது. ளகரம், டகரம் ஆகவில்லை. காரணம் நாம் முன்னர் குறிப்பிட்டதேயாகும்; கள் விகுதி என்பது தனிச்சொல் அன்று.

    மேற்கண்ட சூத்திரத்திற்கு உரை கண்டவர்களும் காட்டியுள்ள எடுத்துக் காட்டுகள்:
    கல் +குறிது = கற்குறிது
    முள் + குறிது = முற்குறிது (குறிது - குறுகியது)
    புல் + தரை = புற்றரை, முள் + செடி = முட்செடி என்பவற்றையும் நாம் காட்டலாம். (புல், தரை, முள், செடி - எல்லாம் தனித் தனிச் சொற்கள்)

    கள் விகுதி சேரும்போதும் இடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. பற்கள், சொற்கள் எனச் சொல்லுகிறோம். (பல்+கள், சொல்+கள்). புட்கள் (புள்+கள்) பறந்தன. (புள் - பறவை) பசும் புற்கள் முளைத்தன (புல்+கள்). ஆகவே கள் ஈறு சேரும்போது திரிதல் (மாறுபடுதல்) காண்கிறோம். ஏனிந்த முரண்பாடு?


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்


    மொழிப்பயிற்சி - 72: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!

    கவிக்கோ ஞானச்செல்வன்

    பல + பல - இவற்றைச் சேர்த்தால் பற்பல, பலப்பல, பலபல எனவும், சில + சில - இவற்றை இணைத்தால் சிற்சில, சிலச்சில, சிலசில எனவும், மூன்று வகையாகவும் வருதற்கு இலக்கணம் விதி வகுத்துள்ளது. ஆனால் 'கள்' என்பது சேருங்கால் என்னவாகும் என் விதி வகுக்கபடவில்லை. காரணம், கள் எனும் பன்மை விகுதி பிற்காலத்தது. முதலெழுத்து முப்பது, பத்துக்குற்றம், பறவை நூறு, சொல் பல பேசி, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்று எங்கும் கள் விகுதியின்றியே இலக்கணம் நமக்குக் காட்டுகிறது. பாங்கமை நிமித்தம் பன்னிரண்டென்ப (தொல்), நிமித்தங்கள் எனும் சொல்லாட்சியில்லை.

    ஒரு சொல்லிலேயும் இம்மாற்றம் இடம் பெற்றுள்ளது என்பதனையும் நாம் புறந்தள்ள முடியாது. நிற்க (நில் + க), கற்க (கல் + க) நில், கல் என்பன ஏவல் பகுதிகள். 'க' என்பது வியங்கோள் விகுதி. பண்டு தொட்டே இலக்கண நெறியுள் உடன்படல், மறுத்தல் இரண்டும் உண்டாதலின் நாமும் சிலவற்றை உடன் பட்டும் சிலவற்றை மறுத்தும் எழுதினோம்.

    பல ஆய்வு நிலைச் செய்திகளை பார்த்தோம். எளிய ஒன்றை இப்போது காண்போம். வாக்கியப் பிழை - ஒருமை, பன்மை கெடல். இது பற்றி முன்னரும் பல எடுத்துக் காட்டுகள் தந்துள்ளோம்.

    "இப்போது நினைத்தாலும் மனமும் கண்களும் கலங்குகிறது" என்று ஓர் எழுத்தாளர் ஒரு சிறுகதையில் எழுதியுள்ளார். மனமும் கண்களும் கலங்குகின்றன என்று பன்மையில் முடித்திட வேண்டும். சிறிய பிழைதான். ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

    இலக்கியச் சொற்கள் சற்றே வடிவம் மாறுபட்டு இன்றும் கூட எளிய மக்களின் பேச்சு வழக்கில் ஆளப்படுகின்றன.

    'ஞாயும் யாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்'

    பலரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டின் தொடக்கம் இது.

    ஞாய் - என் தாய்; யாய் - உன் தாய்;
    எந்தை - என் தந்தை; நுந்தை - உன் தந்தை

    தன்பால் அன்பால் வந்த வீடணனைச்சேர்த்துக் கொண்ட போது இராமன், (முன்னரே குகன், சுக்கிரீவனோடு அறுவர்) நின்னோடும் எழுவரானோம் (வீடணா உன்னோடு நாம் எழுவர் உடன்பிறப்புகள் ஆனோம்) இப்படி புதல்வர்களால் தந்தை தயரதன் பொலிந்தான் (சிறந்தான்) எனக் கூறுமிடத்து, இராமன் தன் தந்தையை, வீடணன் தந்தை எனும் பொருளில் (சிறப்பித்துப்) புதல்வரால் பொலிந்தான் நுந்தை என்பான். நும் (உம்) + தந்தை = நுந்தை.

    செவலய எடத்துல கட்டு!

    செவல (சிவப்பு நிறமுடைய) மாட்டை ஏரில் இடப்பக்கம் கட்டுக. சிவப்பு நிறமுடைய மாடு என்பதற்குப் பதிலாக செவல என்னும் பெயர் வாக்கியத்தில் வந்துள்ளது. இது ஆகு பெயர் என்பதாகும். ஒன்றின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயர். ஈண்டு செவல (சிவப்பு) என்னும் நிறத்தின் (குணத்தின்) பெயர் அந்நிறமுடைய மாட்டுக்குப் பெயராகி வந்ததால் இது பண்பாகு பெயர் (குணவாகு பெயர்) என்று சொல்லப்படும்.

    பெயர்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடிப்படையில் ஆறாகச் சொல்லப்படும்.

    (முழு) பொருளின் பெயர் - ஆலமரம், மனிதன்
    இடப்பெயர் - சென்னை, கல்லூரி
    காலப்பெயர் - ஐப்பசி, திசம்பர்
    சினைப்பெயர் - கிளை, இலை, கை, கால்
    குணப்பெயர் (பண்புப் பெயர்) - கறுப்பு, பசுமை
    தொழில் பெயர் - வற்றல், பொங்கல்
    (நிறம் குணத்தில் அடங்கும்)

    கறுப்புப் பணம் என்று இந்நாளில் பேசுகிறோம். இதென்ன? பணம் கரிய நிறத்தில் இருக்குமா? இல்லை. இது கள்ளப்பணம். அதாவது கணக்கில் வாராது சேர்க்கப்பட்ட பணம். தவறான வழிகளில் சம்பாதித்த பணம், கருமை நிறத்தை (கறுப்பை) தவறான செயலுக்குரிய பெயராக்கியுள்ளோம்.

    பெயர்கள் ஆறு எனப் பிரித்தாற்போல் ஆகு பெயர்களும் ஆறு பிரிவுகளாகும்.

    தாமரை போல் மலர்ந்த முகம் - தாமரை என்பது முழுப்பொருள்.

    மலர், மொட்டு, இலை, தண்டு அனைத்துக்கும் உரிய பெயர். இவ்விடத்து மலருக்கு (சினைக்கு) மட்டும் ஆகியுள்ளது. இது பொருளாகு பெயர் அல்லது முதலாகுபெயர் என்று சொல்லப்படும். முழுப்பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு (சினைக்கு) ஆகி வருவது இது.

    கிரிக்கெட்டில் இந்தியா வென்றது - மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் இந்திய விளையாட்டுக் குழு வெற்றி பெற்றது. இந்தியா எனும் நம் நாட்டின் (இடப்) பெயர் - இந்நாட்டின் (இடத்தின்) விளையாட்டு வீரர்களுக்கு ஆகி வந்தது. இது இடவாகு பெயர்.

    நன்றி: திரு.இராஜேஸ்வரன் (நண்பரின் உதவியால் 21.01.2014 அன்று இப்பகுதி பதியப்பெற்றது.)
    Last edited by பாரதி; 21-01-2014 at 04:46 AM.

  9. #153
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 73: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


    கவிக்கோ ஞானச்செல்வன்

    முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

    அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்துற்றது. வசந்தம் என்பது இளவேனிற் பருவத்துக்கு (காலத்துக்கு) உரிய பெயர். வசந்த காலத்தில் புதிய தளிர்கள், மலர்கள் செழித்து வளரும், தென்றல் காற்று வீசும், இனிமை மிகும். “அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்தன’ என்று சொல்லாமல் வசந்தம் வந்தது என்று சொன்னதால் – வசந்தம் எனும் காலத்தில் விளையும் வளத்துக்கு ஆகி வந்தது. இது காலவாகு பெயர்.

    “மூவரும் தலா (தலைக்கு) ஐந்நூறு பரிசு பெற்றனர்’ தலைக்கு மட்டும் பரிசு தர இயலுமா? தலை என்பது மனிதனின் (எவ்வுயிர்க்கும்) ஓருறுப்பு. இந்த உறுப்பின் (சினையின்) பெயர். இவ்வுறுப்பை உடைய முழுமனிதனுக்கும் (பொருளுக்கும்) ஆகி வந்ததால் இது சினையாகு பெயர்.

    “மனத்தினில் கறுப்பு வைத்து’ – சூரிய நிறத்தை உள்ளத்திலே வைத்துக் கொண்டு, இங்கே கறுப்பு எனும் பண்புப் பெயர் வஞ்சக நினைவுக்குப் பெயராகி வந்தது. இது குணவாகு பெயர்.

    “எல்லாரும் பொங்கல் உண்டனர்’ – பொங்கல் எனில் பொங்குதல். உலை பொங்கிற்றா? என வினவுவோம். பால் பொங்கியதா? என்போம். பொங்கல் – பொங்குதல் – இது ஒரு தொழில் (வேலை) பொங்குதலாகிய தொழில் ஆகிய உணவைப் பொங்கல் என்பது தொழிலாகு பெயர்.

    பள்ளிப் பிள்ளைகளுக்காக மட்டும் இலக்கணம் எழுதப்படவில்லை. தமிழ் பேசுபவர், எழுதுபவர் எல்லாரும் அறிந்திருத்தல் நல்லது. இதனை ஓரளவு விளங்கிக் கொண்டாலும் அதனால் பயனுண்டு. தமிழின் அழகை, நுட்பத்தை உணர்ந்து மகிழ்க.

    குணில் தெரியுமா?
    அணில் தெரியும்; குணிலா என்ன அது?

    “உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தது போல்’ என்பது சிலப்பதிகாரத் தொடர். உருள்கின்ற சக்கரத்தை ஒரு குச்சி கொண்டு சுற்றினால் மேலும் விரைந்து உருளும் அல்லவா? அதுதான் இது.

    கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வர வேண்டும் என்று நினைத்திருந்த சேரன் செங்குட்டுவனின் எண்ணத்தை உருள்கின்ற சக்கரம் என உருவகப்படுத்தியுள்ளார். வடபுல மன்னர் கனக விசயர் தமிழரசரின் வீரத்தை இகழ்ந்து பேசினர் என்னும் செய்தியைக் கேட்டது, உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல் (குச்சி) கொண்டு சுழற்றியது போல் அவனது நினைவை இன்னும் வேகப்படுத்தியது. எதற்கு இந்தக் கதை?

    குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் பழந்தமிழ்ச் சொல். சென்னையிலே கம்பு என்பதைக் கொம்பு என்று சொல்கிறார்கள். மரத்திலே கிளை, கொம்பு என்பவை உண்டு. மரக்கொம்பை உடைத்துத்தான் குச்சியாகப் பயன்படுத்துகிறோம். ஒட்டடைக் குச்சி; குச்சி பெரிதாக இருப்பின் கம்பு, ஒட்டடைக் கம்பு எனும் சொல்லும் உண்டு. கம்பு சுழற்றுதல் – சிலம்ப விளையாட்டு எனப்பட்டது. மரத்திலுள்ள கொம்பு வளைந்தும் நெளிந்தும் இருக்கலாம். ஆனால் கம்பு நேராக – ஒரே அளவினதாக இருத்தல் வேண்டும்.

    பல் விளக்கும் குச்சி – வேப்பங்குச்சி இப்போது பார்க்க முடியாததாகிவிட்டது. தடித்துக் கனமாக நேராக இருப்பது கம்பு. (கம்பு என ஒரு தானியம் உண்டு; இது வேறு) சிறிதும், பெரிதுமாக வளைந்தும் நெளிந்தும் இருப்பது கொம்பு என்று கொள்ளுவோமா? கொடி படரக் கொழு கொம்பு வேண்டும் என்று படிக்கிறோம். அவன் என்ன பெரிய கொம்பனா? என்பதும் அவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று கேட்பதும் மாட்டிற்குரிய கொம்பைக் குறித்து வந்தவையாகும். அவன் பெரிய முரடனா? எனும் பொருளில் வந்த சொல் வழக்கு அவை.

    முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

    “முருங்கா’ எனும் சிங்களச் சொல்லிலிருந்து “முருங்கைக்காய்’ வந்ததாக ஆய்வறிஞர் வேலுப்பிள்ளையவர்கள், தமிழ் வரலாற்றிலக்கணம் எனும் நூலில் குறிப்பிட்ட செய்தி பற்றி எழுதியிருந்தோம். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் முருங்கைக்காய் தமிழிலிருந்து சிங்களம் போயிருக்கலாம்; அது தமிழ்ச் சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியச் சான்றுகள் பலகாட்டித் தெளிவுற எழுதியிருந்தார்கள். உரமும், ஊட்டமும் தரும் முருங்கை நம்மதே என்பதில் மிக்க மகிழ்ச்சி.

    இரண்டு பேருந்துகள் இணைத்து இயக்குவதை, இணைப்புப் பேருந்து எனலாம் என்ற அன்பர் கருத்து ஏற்புடையதே. மேலொன்று, கீழொன்று என இரண்டடுக்குப் பேருந்தும் ஓடுகிறதன்றோ? அதற்கு இரட்டைப் பேருந்து என்று சொல்லலாம். ஆதலின் இருப்புப் பாதையில் ஓடும், தொடர்ந்து பல பெட்டிகள் கொண்ட வண்டியைத் தொடர் வண்டி என்றே சொல்லிடுவோம். ஆய்வும் அதன் விளைவான தெளிவும் அனைவர்க்கும் கிட்டியமை நன்று.


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  10. #154
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மொழிப்பயிற்சி - 74: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!


    கவிக்கோ ஞானச்செல்வன்


    லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசுகிறார்கள்!
    இவர்களுமா இப்படி?

    யாரவர்கள்? எப்படி நடந்து கொண்டார்கள்? அப்படியென்ன தவறு செய்தார்கள்? என்று ஆராய வேண்டாம். நன்கு கற்ற புலமை மிக்குடையவர்களும் உச்சரிப்பில் தவறும்போது நம் மனம் வாடுகிறது; வருந்துகிறது. நூல் (புத்தகம்) என்பதை ஒரு சிறந்த பேச்சாளர் பலவிடங்களில் நூள், நூள் என்றே உச்சரித்தார். “அவன் ஏன் தோல்வியைத் தளுவினான் தெரியுமா?’ என்று அவர் வினா விடுத்த போது, நாம் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். “அவன் ஏன் தோல்வியைத் தழுவினான்?’ என்பதுதான் அவரின் வினா.

    சென்னையில் மிகப் பெரிய அரங்கம். கற்றுத் தேர்ந்த அவையினர். பேச்சாளரோ நுண்மாண் நுழைபுலம் மிக்கவர், நாவன்மையும், சிந்தனைத் திறமும் படைத்த பேரறிஞர். ஆயினும் அவர்தம் உரையில், “உணர்வு சார்ந்து நாம் பேசினாள் (ல்) ‘, “இன்னும் சொல்லப் போனாள் (ல்)’, “அவர் ஏன் பாடவில்லை என்று கேட்டாள் (ல்)’,

    “இந்தப் பஞ்ச பூதக் களப்பு (கலப்பு)’. இப்படியே லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசும்போது நாம் மனம் வெறுத்தே போனோம். எழுந்து கத்துவது நாகரிகமல்லவே! ஆதலின் வாளாவிருந்தோம்! தம் பேச்சைத் தாமே ஒலிநாடாவில் – குறுவட்டில் பதிவு செய்து கேட்டுப் பார்த்தால், தவறு புரியாமல் போகாது. சற்றே முயன்றால் சரியாக உச்சரித்துப் பேசக் கூடுமே.

    வாட்டமில்லா வண்டமிழ் என்றும் ஈரத் தமிழ் என்றும் போற்றப்படும் நந்தமிழ் இப்படிச் சிதைக்கப்படலாகுமோ? இயல்பாக எளிமையாக வர வேண்டிய ஒலிப்பு – உச்சரிப்பு, அறிஞர் சிலரிடையே ஏன் இப்படி இடர்ப்படுகிறதோ?

    ”தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தவை. தமிழிலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறியையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை; உருவாக்கப்பட்டவை” என்று போற்றியுள்ளார் மேலை நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப். தமிழர்கள் இந்த வரிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    திரைகடலா? திரைக்கடலா?

    இந்த ஐயத்தை நம்மிடம் எழுப்பியவர் நண்பரும் கவிஞரும் ஆகிய ஒரு புள்ளி. நாம் சொன்னோம்,

    “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று ஒளவையார் பாடியுள்ளார்.

    “நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
    நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை’ என்று பாரதியார் பாடியுள்ளார்.

    எது சரி? இரண்டும் சரியானவைதாம். எப்படி? சற்றே இலக்கணக் கடலுள் புகுந்து முத்தெடுத்தல் முயற்சியில் ஈடுபடுவோமா?

    கடலின் அலையைத் திரை என்போம். (திரை – திரைச்சீலை, தோலில் தோன்றும் சுருக்கம் என்றும் பொருள் தரும்)

    கடலின் அலை என்றாவது ஓய்ந்ததுண்டா? “அலைகள் ஓய்வதில்லை’ என்று நாமறிவோம். “அலை’ என்பதைப் பெயராக்காமல், அலை என வினையாக்கிப் பார்த்தால், அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல் எனப் பொருள் தரும் வகையில் அலைகடல் என்போம். இவ்வாறே அலைக்குப் பதில் திரை எனும் சொல்லைப் போட்டால் திரை கடல் என்றுதானே ஆகும்?

    ஆதலின் “திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்னும் ஒளவை வாக்கின் அருமையை உணர முடிகிறது. அடுத்தது, திரை வேறு, கடல் வேறா? இரண்டும் ஒன்றே; வட்டக் கல் என்பதுபோல. ஆதலின் திரைக்கடல் எனின் இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். அன்றியும் திரையை உடைய கடல் என்று விரித்தால் இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (உடைய) உடன் தொக்க தொகையாகவும் கொள்ளலாம். ஈண்டும் ஒற்றுமிகும்.

    நீலத்திரைக் கடல் என்று மகாகவி பாடியதும், “திரை கடல் ஓடி’ என்று தமிழ்ப் பாட்டி பாடியதும் இலக்கணத்தோடு இயைந்து இனிமை பயக்கின்றன.

    ஆகவே இரண்டும் சரியே. இந்த விளக்கம் போதுமா? இன்னும் வேறு வேண்டுமா?

    முயல்வுகள் என்பது சரியா?

    முனைவர் பட்டம் பெற்ற ஒருவரின் நல்ல நூலில் இந்தச் சொல் காணப்படுகிறது. பார்த்த – படித்தவுடனே நம் மனத்தில் இது பிழை என்ற எண்ணம் உண்டாதல் இயற்கை. முயற்சிகள் என்றுதான் நாம் எழுதி வருகிறோம். இது புதிதாக இருக்கிறதே!

    முயற்சி ஒரு தொழில் பெயர். பயிற்சி, தளர்ச்சி, வளர்ச்சி என்பன காண்க. மகிழ்ச்சி என்பதும் இதுபோன்ற ஒரு சொல்லே. இதன் பொருள் என்ன? மகிழ்வடைதல் என்பதுதானே? மகிழ்வடைதலில் உள்ள முதற்சொல் மகிழ்வு. அடைதல் வந்து சேர்ந்து மகிழ்வடைதல் என்றாகிறது. மகிழ்ச்சியடைதல் என்பதும், மகிழ்வடைதல் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.


    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

  11. #155
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    திரைக்கடல், திரைகடல் இரண்டுக்கும் விளக்கம் அறிந்து தெளிந்தேன்.

    முயல்வுகள் சரியா என்பதில் இன்னும் தெளிவில்லை. அடுத்தப் பதிவில் தெளிவுபடுத்தப்படுமோ? காத்திருக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

  12. #156
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    தங்கள் கருத்துக்கு நன்றி கீதம். முயல்வேன் என்று நாம் கூறுவதுண்டு அல்லவா? முயல்வுகள் என்பது சரியே. கவிக்கோவும் அதைத்தான் கூறுகிறார்.

    -------------------------------------------------------------------------------------------------------------------------
    மொழிப்பயிற்சி - 75: பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம்!




    கவிக்கோ ஞானச்செல்வன்

    இயல்பாகப் பேசுவதே இலக்கணம்

    மகிழ்ச்சி – மகிழ்வு, தளர்ச்சி – தளர்வு, அயர்ச்சி – அயர்வு. இச்சொற்களைப் போலவே முயற்சி – முயல்வு எனக் கொண்டால், “எல்லா முயல்வுகளும்’ என்னும் எழுத்தில் பிழையில்லை என அறியலாம். முயற்சிகள் என்று மட்டுமே எழுதியும் பேசியும் கேட்டும் பழக்கப்பட்ட நமக்கு முயல்வுகள் புதிதாகத் தோன்றுவது இயல்பே.

    அடடா! என்னே தமிழ்!

    விடம் (விஷம்) என்பதும், நச்சு என்பதும் ஒன்றே. குழந்தையாய் இருந்த கண்ணனைக் கொல்ல பூதகி எனும் அரக்கி முலைப்பால் கொடுத்தாள், கண்ணனோ அவள் உயிரையே உறிஞ்சி எடுத்துவிட்டான். இந்நிகழ்வை ஆழ்வார்ப் பாசுரம் “பேய்ச்சி விட நச்சு முலை’ எனும் தொடரால் குறிக்கிறது. விடமுலை எனினும் நச்சு முலை எனினும் ஒன்றே! பின் ஏன் இரண்டு சொற்களும் வந்தன? விட என்பதற்கு விடம் எனக் கொள்ளாது பேய்ச்சி (உயிரை)விட – நச்சு முலை – என்று பொருள் காண வேண்டும்.

    “குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்று தொடங்கும் பாடலை நாமறிவோம்.

    “வண்டார் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்
    கொண்டாள் தழீஇக் கொழுநன்பால்’
    என்பது சிலப்பதிகாரம். குஞ்சி (குடுமி) ஆடவர்க்குரியது. குழல் (கூந்தல்) மகளிர்க்குரியது.

    சிலம்பு விற்க மதுரைக்குப் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி தழுவினாள். கோவலன் தன் குடுமியில் (குஞ்சி) சூட்டியிருந்த மாலையினை எடுத்துக் கண்ணகியின் கூந்தலில் (குழல்) சூட்டிப் பிரியா விடைபெற்றான். மிக விளக்கமாக எழுத வேண்டிய இடம் இது. இலக்கியக் கட்டுரை ஆகிவிடும் ஆதலின், வேண்டிய செய்தியை மட்டும் காண்போம்.

    குழந்தைக் கண்ணனைப் பாடும் ஆழ்வார், “மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ’ என்று பாடியுள்ளார். இங்கே குஞ்சி, குழல் இரண்டு சொற்களும் ஏன் வந்தன? எப்படி இது பொருத்தமாகும்? இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பதாயினும் சிறிய பொருள் வேறுபாடுண்டு.

    குஞ்சி – முன் குடுமி, குழல் – பின் தொங்கும் கூந்தல்.

    குழந்தைக் கண்ணனுக்கு முன் குடுமியும் உண்டு. பின்னால் தொங்கும் கூந்தலும் உண்டு என்று பொருள் தரும் வண்ணம் மேற்கண்ட பாடல் வரி சிறப்படைகிறது.

    முன்னாளில் ஆண்களும் குடுமி வைத்திருந்தனர் என்பதைச் “சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்னும் பழமொழி கொண்டு அறியலாம்.

    தமிழின் சீர்மை அறிந்து மகிழ்ந்தீர்களா? நம் பழந்தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் இணைந்துள்ளன. (வடசொல் தமிழில் கலந்தது போலவே) மதங்கம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம். அவ்வாறே மெது, மென்மை மெத்து மெத்தென்று என்பன எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள். தமிழின் மெது என்பதே “மிருது’ எனத் திரிந்தது. மனம் என்னும் தூய தமிழ்ச் சொல்லிலிருந்தே மனஸ், மனசு, மனது என்பன தோன்றின. துறக்கம் என்னும் தூய தமிழ்ச்சொல்லே சொர்க்கம் என்றாயிற்று என மொழி நூல் அறிஞர் உரைப்பர்.

    புனைப் பெயரா? புனை பெயரா?

    ஒருவர் தம் இயற்பெயரில் அல்லாமல் தாமாகப் புனைந்து கொண்ட பெயரால் எழுதி வருகிறார். அப்பெயரில் அவர் நேற்றும் (முன்பும்) எழுதினார். இன்றும் (இப்போதும்) எழுதுகிறார். நாளையும் (பின்னரும்) எழுதுவார். புனைபெயர் எனில் புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என முக்காலமும் கொள்ளத்தக்கதாகும். காலம் கரந்த (மறைந்துள்ள) பெயரெச்சம், அஃதாவது மூன்று காலங்களுக்கும் பொருந்தக்கூடிய பெயர் எஞ்சிய வினை. வினைத் தொகை எனப்படும். புனை பெயரை வினைத் தொகையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் பொருத்தமுடையது.

    புனைப் பெயர் எனில், புனைந்தது ஆகிய பெயர் எனக் கொண்டு, புனைந்தது என்னும் வினையைப் புனைதல் என்னும் தொழில் பெயர் ஆக்கினால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். ஆகிய எனும் பண்பு உருபு பெற்று வருவதால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். புனைதல், பெயர் இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என வலிந்து கொண்டு இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். ஆனால் இவ்விளக்கத்தைவிட முன்னர்ச் சொன்னதே மிகப் பொருந்தி வருவதால் புனை பெயர் என்பதே சரியானது; இப்படித்தான் அறிஞர் பலர் எழுதியுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.

    என்ன? தமிழில் ஒற்றிலக்கணம் (வல்லினம் மிகுதல்) மிகவும் இடர் செய்கிறேதோ? அப்படியொன்றுமில்லை. இயல்பாகப் பேசுவதே இலக்கணம் ஆக்கப்பட்டுள்ளது. புனை பெயர் என்று சொல்லிப் பாருங்கள். புனைப் பெயர் என்றும் சொல்லிப் பாருங்கள். எது இயல்பாய் உள்ளது? புனை பெயரன்றோ? வரச் சொன்னார், அந்தப் பையன் இயல்பாகும். இதனை வர சொன்னார், அந்த பையன் எனில் விட்டிசைப்பதை உணரலாம்.

    தமிழ் வளரும்....

    நன்றி : தினமணிக்கதிர்

Page 13 of 15 FirstFirst ... 3 9 10 11 12 13 14 15 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •