பென்சிலை எப்படிப் பிடிப்பது
என்றும் அறிந்திராத வயதில்
அநேக சித்திரம் வரைந்து
அடிக்கடி என்முன் நீட்டுவான்,
என்ன இது கண்டுபிடியென்றொரு
புதிரையும் முன்வைத்து.
கொக்கிபோல் துவங்கியிருந்த
ஒரு கிறுக்கல் பந்திலிருந்து
கோணல்மாணலாய் இழுக்கப்பட்ட
சில கோடுகளைக்கொண்டு
ஏதேனும் ஒரு மிருகமாய் கற்பனை செய்தேன்.
தூக்கிய தும்பிக்கையுடன் யானையோ…
கழுத்துநீண்ட ஒட்டகசிவிங்கியோ…
கட்டாயமாய் இரண்டில் ஒன்று என்றேன்.
அவன் விரித்த விழிகளுடன் என்னைப் பார்த்து
அம்மா! இது நம் வீட்டு நாற்காலி என்றான்.
அடுத்தடுத்த முறைகளிலும்
அவன் உருவகித்தவற்றை
அடையாளங்காண இயலாமல்
முகம் சோரவைத்தேன்.
நீயே சொல்லடா என்றால்
நீதான் கண்டுபிடிக்கணும் என்று
நித்தமும் போராட்டம்.
பழகப்பழக அவன் பாஷை புரிந்தது.
அவன் வரையும் கோடுகளுக்கும்…
வளைவுகளுக்கும்… ஏன், புள்ளிகளுக்கும்
அர்த்தம் கண்டுபிடித்துவைத்தேன்.
அவனுடைய ஓவியங்களை மேயும்
என் கண்களையே பார்த்திருப்பவனின்
கண்களை மகிழ்ச்சியில் மின்னச்செய்தேன்.
அவனுடைய உலகத்தின் சன்னலுக்குள்
அவ்வப்போது எட்டிப்பார்த்ததன் விளைவாய்
சிலந்திமனிதனையும், வெளவால் மனிதனையும்,
ஏலியன்களையும் பென்டென்னின் தசாவதாரங்களையும்,
இரும்புமனிதனையும், இன்னும் சில பிரபலங்களையும்
எளிதில் இனங்கண்டு இன்ப அதிர்ச்சி அளித்தேன்.
இப்போதும் வரைகிறான்.
யாரென்று கேட்டு அதே விளையாட்டை
இன்னமும் தொடர்கிறான்.
அவன் சொல்லும்வரை
கோஸ்ட் ரைடர்களையோ...
ஸ்கேர் க்ரோக்களையோ...
டேர்டெவில்களையோ...
சிவப்பு மண்டையோட்டுக்காரனைப்பற்றியோ..
உண்மையிலேயே எனக்கு
எதுவும் தெரிந்திருக்கவில்லை.
வில்லன்களுக்கும் விசிறியானவனை
விசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்.
அவன் உலகத்துடனான என் பந்தம்
எப்போது கட்டவிழ்ந்தது என்ற
விவரம் தெரியாமல் விழிக்கிறேன்.
வளர்ச்சி விகிதத்தில் அவனைவிடவும்
வெகுவாய்ப் பின்தங்கிவிட்டேன் என்ற
உண்மை எனக்கு உறைக்க...
எவ்விதத் தயக்கமுமின்றி என் அறியாமையை
அவனிடம் ஒத்துக்கொள்கிறேன்.
அதை ஏற்பதில் மட்டும்
அவனுக்கேன் இத்தனைத் தயக்கம்?
எதுவும் பேசாமல் முகம் சுருங்கி
என்னைவிட்டு விலகிச் செல்பவனைக் கண்டு
சோர்ந்தாலும்.... தேற்றிக்கொள்கிறேன்.
இனி அவனுடைய ஓவியநாயகர்களின்
பிரஸ்தாபங்களைப் பகிர்ந்துகொள்ள
நண்பர்கள் உதவுவார்கள்…
******
சூர்யாவின் ஓவியநாயகர்கள் இங்கே...
Bookmarks