மதுவிலே விழுந்து
மயங்கிக் கிடப்பவனுக்குக் கூட
மனம் திருந்தினால்
மறுவாழ்வு உண்டு.
கடமையை மறந்து
காதலில் விழுந்து
தோல்வி கண்டவன் கூட
கடைத்தேற வாய்ப்புண்டு.
நோயிலே விழுந்து
பாயிலே படுத்து
மரணம் வரை சென்றவன் கூட
மறுபடியும் வாழ வழியுண்டு.
நட்டமடைந்து
நடுத்தெருவுக்கு வந்த
வியாபாரிக்குக் கூட
விடிவுகாலம் உண்டு.
கடலிலே விழுந்த
கதிரவன் கூட
காலையில் கிழக்கில் உதிப்பதுண்டு.
ஆனால்
தமிழ்க் கடலிலே விழுந்தவனுக்குத்
தப்பிப் பிழைக்க வழியேதும் உண்டா? எனத்
தயவுடனே செப்பிடுவீர்!
Bookmarks