இருள்வெளியில் வீழ்ந்து கிடக்கும்
என் கண்ணீரின் ஒவ்வொரு துளியிலும்
மிதந்து கொண்டிருக்கும் உன் முகம்
எனக்குள் ஒரு பிரளயத்தை நிகழ்த்துகிறது..
நமக்கான அன்பின் அனைத்து திசைகளும்
நிரந்தரமாக மூடப்பட்ட பின்
எல்லா இரவுகளிலும் யாருமறியா மெல்லிய விசும்பலுடன்
என் கண்ணீரை துடைத்துக்கொள்கிறேன்..
வெளவால்கள் இரையும் ஒரு இருண்ட வனாந்தரத்தில்
இரத்தம் தோய்ந்து இறந்து கிடக்கும்
ஒரு வெண்புறாவாய்
நம் காதலை உருக்குலையச்செய்தது
எந்த சாத்தானின் சாபம்..?
மறைந்தாலும்மறையாத சூரிய ஒளிபோல
உன் நினைவுகள் என் ஒவ்வொரு அணுவிலும்
சிலுவையாய் அறையப்பட்டிருப்பது கண்டு
துயரத்தில் சிக்குண்ட மனசு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து வலிக்கிறது..
இத்தனை புலம்பலையும் மொத்தமாய் தின்றுதீர்த்தது
என் கண்பார்த்து நீ அழுத உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு..
- நிந்தவூர் ஷிப்லி -
Bookmarks