"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!
கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.
உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.
"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.
ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.
கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.
நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே
பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
Bookmarks