நன்றி : இக்கவிதையை எழுதத் தூண்டிய கீதம் அக்கா (எனக்கும் தான் ) அவர்களின் கவிதையான பரிதாப வாழ்வு யாருக்கடி?
என்னுடைய இளம்பிராயம் என்பது
கோலிக்குண்டும், பம்பரமுமாய் சுற்றிய காலம்;
சைக்கிள் டயரால் தெருவைச் சுற்றிய காலம்;
தென்னை மட்டையில் கிரிக்கெட் ஆடிய காலம்;
ஏழு தட்டைக்கற்களை ஒன்றன் மேல் ஒன்றடுக்கி
அதன் மேல் பந்தெறிந்து செவெண்டீஸ் ஆடிய காலம்;
ஓணானைப் பிடித்து பீடி குடிக்க வைத்த காலம்.
கிராமத்தில் தொலைக்காட்சி கால் பதித்த காலம்;
வீடுகளில் தலையில் இரும்புக் கொம்பு முளைத்த காலம்;
நான் கால மாற்றத்தின் சாட்சியாயிருந்த காலம்!
ஹிந்தி தர்ஸனாக இருந்த தூர்தர்ஸன்;
சித்ரஹாரில் புரிந்தும் புரியாத ஹிந்திப்பாட்டு;
அரிதாய் சித்ரமாலாவில் ஒரு தமிழ்பாட்டு;
மூன்று மாததிற்கொருமுறை தமிழ்படம்;
அதுவும் விருது வாங்கிய சோகப்படம்;
ஞாயிறன்று இராமாயணம் என்றிருந்த சமயத்தில்
மண்டல ஒளிபரப்பாய் நுழைந்தது
சென்னை தொலைக்காட்சி!
ரிமோட் மாற்ற அவசியமின்றி
ஒற்றுமையாய் ஒலியும் ஒளியும்;
செவ்வாயன்று நாடகம்;
8.40-ல் தமிழில் செய்திகளால்
சோபனா ரவி, ஈரோடு தமிழன்பன்,..குடும்ப உறுப்பினரானார்கள்;
நாற்று நட்டு, களை பிடுங்க வயலும் வாழ்வும்;
ஒரு வார ஓட்டையை அடைக்க எதிரொலி;
ஞாயிறு தோறும் தமிழ்த்திரைப்படம்
காண வீடு நிறையக்கூட்டம்!
நினைத்தாலே இனிக்கும்
இளமைக் காலங்கள் அது
மீண்டும் ஒருமுறை நன்றி கீதம் அவர்களுக்கு!
என் கால இயந்திரம் சற்று பின்னோக்கி செல்வதற்கு உந்து சக்தி தந்ததற்கு!!
Bookmarks