நீண்டதொரு மெல்லிய படர் பனியின்
அதிகாலை செஞ்சூரியக் கீற்றுகளின் வழியே
மெல்ல விசை கூட்டும் பெருவியாதிக்கார முனகலாய்
ஈரங்களற்ற வெற்றுக் காற்றாய் என் விசும்பல்கள்
இன்றும் எவரைச் சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அந்தப் புலம்பல்கள் உங்களைப் பற்றியானதாகவோ
என் இசைவாகா உங்கள் புறச் செயல்களுடைத்ததாகவும்
உங்கள் விழி நீர்க் கசியும் எனக்கெதிரான
வன்மங்களை வசைபாடியோ அமையப் பெற்றிருக்கலாம்
இன்னமும் நன்குணர்ந்திருக்கிறேன் அதை
என் கரமிறுக்கும் உங்கள் கரப் பிணைப்புகளை
காற்றினும் மெல்லிய உங்கள் மேனி வருடல்களை
உச்சந்தலை மீதான மயிர்க் கோதல்களை
என் புணர் விரோதங்களேற்று
நிராயுதபாணியாய் என்னை அத்துவானக் காட்டில் கிடத்துவீர்கள்
உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
மேலும் மேலும் என் விரோதம் கூட்ட முயல்வீர்கள்
ஒரு தேர்ந்த வல்லூரின் இரைக் குறியை
ஒரு சினச் சிங்கத்தின் சீற்றங்களை
அதிர்விலும விரையும் புள்ளிமானின் எச்சரிக்கையுணர்வுகளை
ஒருங்கிணைத்து எனக்காய் பிரயோகிப்பீர்கள்
உங்கள் பெயர்கள் மட்டும் ஓதியலையப்படும் ஓர் வெளியில்
என் பாடல்களை உரத்துப் பாடிக் கொண்டே
என் உறுப்புகள் களைந்து அதன் குருதி ருசிப்பீர்கள்
வடுக்களும் மறைந்து பூரணத்துவம் பெற்ற ஒரு நாளில்
பாதை மறித்து என் நலன் கேட்பீர்கள்
உங்கள் இடுப்போர கத்தியை தடவிக் கொண்டே.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com
Bookmarks