கருப்பு,சிவப்பு என பேதம் இல்லை,
எனவே நிறவெறி அற்ற சமூகமாய்
அறிவிக்கிறேன் உன்னை..
பொருளாதார ஏற்றத்தாழ்வில்
நீயும் ஒடுக்கப் படுகிறாய்
பேப்பர் பந்தாய் மாறுகையில்..
காயப்படுத்த எண்ணம் இல்லாத காரணத்தினால்,
போர்களத்தில்,
சமரசப் உடன்படிக்கைகளே உன் மேல் எழுதப்படுகின்றது..
முதல் குட்டு,
முதல் சபாஷ்
இரண்டையும் நீ வாங்கி விடுகிறாய்
ஒரு மாணவனுக்கு கிடைக்கும் முன்,
முதல் கண்ணீர்,
முதல் முத்தம்
இரண்டையும் நீ ஏந்திக் கொள்கிறாய்
ஒரு காதலனுக்கு கிடைக்கும் முன்,
உன்னை அடித்தும்,திருத்தியும்
தன்னை வளர்த்த கவிஞர்கள் ஏராளம்..
கவிஞன் கசக்கி எறிந்த வெள்ளை காகிதத்தில்
ஒரு கர்வம் ஒளிந்திருக்கும்,
அவனை ஒரு படி ஏற்றி விட்டோமென..
தொழில்நுட்பமும்,கணிப்பொறியும் வளர்ந்து விட்டபோதிலும்,
எல்லா உயிருனுள்ளும் இருக்கின்றது,
ஏதோ ஒரு புதிய நோட்டு புத்தகத்தின் உன் வாசம்..
எல்லா குழந்தையினுள்ளும் மிதக்கின்றது,
ஏதோ ஒரு காகிதக் கப்பலில் உன் நினைவுகள்..
இறுதியாய் ஒரு கேள்வி,
உயிரற்ற பொருள் நீ என்றால்,
உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
-பிரேம்
Bookmarks