மன்றத்தில்,
பொன்னாட்டம் இருக்கின்ற படைப்பிற்கு எல்லாம்-தக்க
பின்னூட்டம் இல்லையெனச் சிலர் பிதற்றுகின்றார்.
என்றுமே
காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சுதான்
நம் படைப்பு சிறந்ததென்று
நாமா சொல்லுவது?
நாடல்லவா சொல்ல வேண்டும்?
அன்றொருநாள் மாமதுரை மண்ணில்
"தமிழ் நாட்டைப் பற்றித்" தகவுடைய பாடலைத்
தருவோருக்குத்
தக்க சன்மானம் தரப்படும் என்று
தமிழ்ச் சங்கத்தார்
தண்டோரா போட்டனர்.
பலரும் பங்கேற்ற அப்போட்டியில்
பாரதியின்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"-
என்ற பாடலும் பங்கேற்றது.
ஆனால் பாரதியின் பாடலுக்கு
மிக்கபுகழ் மாமதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தக்கதோர் பின்னூட்டம் தரப்பட வில்லை.
இன்றளவும் தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலுக்கு
"இரண்டாம் பரிசு" என்றே அறிவிப்புச் செய்தனர்.
அப்போட்டியில்
முதல் பரிசு பெற்ற பாடலோ இன்று குப்பையிலே
பாரதியின் பாடலோ கோபுரத்திலே.
எனவே படைப்புகளில்
பின்னூட்டம் பெறுவதெல்லாம் தங்கமுமல்ல
பின்னூட்டம் மறுப்பதெல்லாம் தகரமுமல்ல.
"என்கடன் பணிசெய்து கிடப்பதே"-என்ற
அப்பர் பெருமானின் அருள்வாக்கிற்கு இணங்க
"நம்கடன் படைப்பதே" என்ற
மனநிலையோடு
மன்றத்தில் பணி செய்வோம்.
Bookmarks