தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மழையும் பொழியும் குழையும் - மழை பொழிகிறது, இதுவரை இறுகிக்கிடந்த மண் குழையத்தொடங்குகிறது.
மழை பொழிந்தால் நிலம் குழைகிறது. அன்பு பொழிந்தால் மனையாள் குழைகிறாள்.. இந்த மூணு வார்த்தைகளில் ஆனந்த வாழ்வின் அடிநாதம் அடங்கிக் கிடக்கிறது. மழை பொழியும் மண்குழையும் என்பதை இங்கு தெளிவாக வேறுபடுத்திக் காட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது. அதை அடுத்த வரிகளில் ஈடுசெய்திருக்க வேண்டும் நீங்கள்...
பார்க்கலாம்.
இலையும் கிளையும் தழையும் - காய்ந்திருந்த மரஞ்செடிகள் துளிர்க்கின்றன.
அடுத்த வரியோ இலை கிளைகளைப் பற்றிப் பேசப் போய்விடுகிறது.. பூமி குழைந்ததோடு சரி... மரங்கள் ஏற்கனவே வளர்ந்தவை. மழையில் இலை துளிர்த்து தழைப்பது சட்டென நடந்து விடுகிறது. ஆகவே இதை அடுத்ததாய் எழுத வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. மண்ணும் மனமும் மட்டுமே குழையும் என்பதால் பூமி என்பதை நாமாக எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்
விளையும் - பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
களையும் இழையும் - கூடவே களைகளும் வளர்கின்றன.
இங்கும் ஒரு சின்ன தடுமாற்றம் காணப்படுகின்றது. விளையும் களையும் இழையும். களையும் இழையும் சரி.. ஆனால் விளையும் என்பதை பயிர்கள் விளையும் என்பதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால் விளையும் என்பது செய்வினை. விளைவிக்கப்படுகினறன என்பது செயப்பாட்டு வினை.
இந்தச் சின்ன சிக்கலை நீக்க விளைச்சலையும் களையையும் பிரிக்க வேண்டும்.
விளையும் இழையும் களையும்
என்று வரிசை மாற்றினால் விளவது விளைச்சல், இழைவது களைகள் எனத் தெளிவு வரும்.
இழையும் வளையும் களையும் – அக்களைகளை, வளையல்கள் இழையும் கரங்கள் அதாவது பெண்கள் களைகின்றனர்.
இலக்கியத்தரம் வாய்ந்த வரி இது.. இழையும் வளையும் களையும்.. அது விவசாயமானாலும் சரி.. குடும்ப வாழ்க்கை ஆனாலும் சரி.. இது மிகப் பொருள் மிகுந்த வரி...
இதைப் பார்க்கும் பொழுது
இழையும் விளையும் களையும்
இழையும் வளையும் களையும்
என்று சொல்லி இருந்தால் இன்னும் இன்பமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.
விளை என்பதை இளைஞன் என்றும் வளை என்பதை வளையலணிந்த பெண்ணாகவும் கொண்டு மகிழவும் தோன்றும்..
முதிரும் கதிரும் உதிரும் - அமோக விளைச்சலால் கதிர்கள் நன்கு வளர்ந்து முற்றி உதிரத் தொடங்குகின்றன.
சென்ற கண்ணியும் இந்தக் கண்ணியும் இதை வாழ்வியல் கவிதையாக சிலேடையில் அர்த்தம் கொள்ளத்தக்க கவிதையாக மாற்றும் சாத்தியக் கூறு இருப்பதை அழகாகக் காட்டுகின்றன.
அங்கே விளைச்சல் - வாழ்க்கை, இங்கே அறுவடை - அனுபவம்..
இந்தச் சாத்தியக்கூறு கண்ணுக்குத் தெரிவதால் கவிதையை - உழவுக்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு சிலேடையாக்க இயலும் என்பது அழகாகவே தெரிகிறது..
அதற்கு கவிதை எங்கே தொடங்க வேண்டும்?
கதிரும் கடலும் குலவும்...
ஆமாம்.. சூரியன் நமது அப்பா, கடல் நமது தாய்..
அவர்கள் குலவலில் தோன்றிய அன்பு மழை... உழுத நிலம்.. பயிராய் மக்கள்.. களையாய் தீயநட்பு.. அழகாக பொருந்தி வரும். வறண்ட காலம் அன்பு வற்றிப் போன முதுமைக் காலமாய் மாறிவிடுமல்லவா..
முதிர்ந்த கதிர்கள் களத்திலடிக்கப்பட நெல்மணிகள் உதிர்கின்றன. வளர்ந்த ஆண்மகன் மணம் என்னும் களத்தில் அடிக்கப்பட அங்கும் மணிகள் உதிர்கின்றன.. (ஹிஹி)
உதறும் பதரும் சிதறும் - தூற்றி உதற, பதர்கள் காற்றில் சிதறி வெளியேறுகின்றன.
பாருங்க. கல்யாணம் ஆன பின்னால் உபயோகமில்லா நட்புகள் குறைந்து போகின்றன. மனைவியைப் பார்த்தாலே உதறி அந்த நட்புகளை உதறுகிறோம். என்னமா ஒத்துப் போகுது பாருங்கள். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றுச் சும்மாவா சொன்னார்கள்.
குதிரும் பதறும் கதறும் - தானியங்களை சேமிக்கும் குதிரானது இவ்வளவு தானியங்களையும் தன்னுள் அடக்கமுடியுமா என்று பதறுகிறது. இருந்தும் அது கதறக் கதற, கழுத்துவரை நிரப்பப்படுகிறது.
சரியா பிடிச்சிட்டீங்க. மனுஷன் கல்யாணத்துக்கு அப்புறம் குதிர் மாதிரிதான் குண்டாகிடறான், சரியாகப் பொருந்துகிறது,,
சதிரும் புதிரும் அதிரும் - ஆட்டபாட்டங்களும் வேடிக்கைப் பேச்சுகளும் எங்கும் அதிரச்செய்கின்றன.
சதி(ர்)- மனைவி, புதிர்(பதி)-கணவன்.. இதுக்கு மேல அர்த்தம் சொல்லணுமா என்ன?
இந்த இரு கண்ணிகளிலும் அழகாக விளைச்சலையும் அதன் விளைவையும் அழகாக சொல்லி இருப்பதோடு இதை எப்படி வாழ்க்கையோடு இணைக்கலாம் என்பதையும் கோடி காட்டி இருக்கீங்க. (உங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ)
முதலில் சொன்ன மாதிரி தொடக்கத்தையும் முடிவையும் இணைக்கிற மாதிரிக் காட்டுவதால் வாழ்க்கைச் சக்கரத்தையும் இந்தக் கவிதையில் காட்டும் வாய்ப்பு இருக்கிறது.
தொடரும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இல்லை...இல்லை எனக்குத் தெரிந்து இந்தத் தவறைச் செய்யவே இல்லை.
என்ன அழகாய்க் கோர்த்திணைத்து மாலையாக்குகிறீகள்,நான் இறைத்த முத்துக்களை! இப்போதுதான் அணியத் தகுந்ததாகிறது மாலை!
இப்படியும் பொருள் கொள்ளமுடியும் என்று விளங்குவதுடன் எந்தெந்த வார்த்தைகளை எங்கெங்கு இணைத்தால் எப்படிப் பொருள் வேறுபடும் என்பதையும் அறியமுடிகிறது. என் நன்றியும், பாராட்டுகளும், தாமரை அவர்களே.
தற்கால அர்த்தமற்ற எழுத்துக் கோர்வைக்குள் காத்திரமான கவிதைகளும் பிரசவமாகின்றன, அவற்றில் "மழைக் கொடைத் தந்தத் தமிழ்க்கொடை"யின்
முதிரும் கதிரும் உதிரும்
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
சதிரும் புதிரும் அதிரும்.
இவ் வரிகள் வைர வரிகள்.
மழைக்கொடைத் தந்தத் தமிழ்க்கொடை எனும் தலைப்பில் மழைக்கொடை(த்) தந்த(த்) தமிழ்க்கொடை எங்கோ இடிக்கின்றது.
கவிஞருக்குப் பாராட்டுக்கள்.
´போன பதிகத்தில் குதிருக்கு ஏன் ஆணைச் சொன்னீர்க்ள் மனைவிதானே குண்டாகிறாள் என்று சிலர் அழைத்துச் சந்தேகம் கேட்டார்கள்.
மக்கா நல்லா கவனிக்கணும் நீங்க.. என்னென்ன நடக்குதுன்னு..
குதிரும் பதறும் கதறும் - தானியங்களை சேமிக்கும் குதிரானது இவ்வளவு தானியங்களையும் தன்னுள் அடக்கமுடியுமா என்று பதறுகிறது. இருந்தும் அது கதறக் கதற, கழுத்துவரை நிரப்பப்படுகிறது.
மனைவி சமைச்சது நல்லா இல்லைன்னாலும் நல்லா இருக்குன்னு சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் கணவனுக்கு. நல்லா இல்லைன்னு சொல்லிட்டா இரண்டு வாரத்துக்கு முகத்தைத் தூக்கி வச்சிப்பாங்க.
நல்லா இருக்குன்னு சொல்லிட்டா, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க என்ற கவனிப்பு வேற. இல்லம்மா சாப்பிட இடமில்லைன்னு சொன்னா, அப்ப சாப்பாடு நல்லா இருக்குன்னு பொய்தானே சொன்னீங்க என்று அழுகை.. இதைச் சமாளிக்க எத்தனை நாள் ஆகுமோ..
அது மட்டுமா நல்லா இருக்கு என்று மனசைச் சந்தோசப்படுத்திய ஒரே குற்றத்துக்காக அதே பதார்த்தத்தை அதே சுவையில் சமைத்து அதைத் திணிப்பார்கள். இப்போ உண்மையைச் சொன்னா, உங்களுக்கு என் மீது இருந்த அன்பு, காதல், பாசம் இன்ன பிற அத்தனையும் போயிடுச்சி.. அதான் நான் எத்தனை ருசியா(???) சமைச்சாலும் உங்களுக்குப் பிடிக்காமல் போகுது என்று ஒரே அழுகை வேறு. ஒரே ஒரு பொய் சொல்லப் போய் வாழ்க்கை முழுக்க இப்படி அல்லல் பட்டு, உணவைப் பார்த்த்துமே பதறி, அங்கே சொல்ல முடியாமல் வெளியே வந்துக் கதறி...
குதிர் எனக்கு இதைக் கொடுங்கள் எனக் கேட்பதில்ல. அது தேமேன்னு உட்கார்ந்திருக்கும். சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கிற கணவர்களும் அப்படித்தான்.
சரி அடுத்த பதிகம் செல்வோம்.
ஒளியும் வளியும் உலவும் - இதமான ஒளியும் இளந்தென்றல் காற்றும் உலவுகிறது.
திருமணத்திற்குப் பின் புதிய தேஜஸ் வரும். வாழ்க்கையில் இதமானத் தென்றல் வீசும். அதுவரைக்கும் சரி. நம் விவசாயத்தை பார்த்தால் அறுவடைக்காலம் தை மாதம். அப்போது குளிர்காலம். அதன் பின் வீசுவது குளிர்காற்று. தென்றல் காற்று அல்ல. இந்தக் குளிர் காற்று வடக்கில் இருந்து வீசுவதால் வாடைக்காற்று எனப்படும், வாடைக் காற்று உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாதே அம்மணி. இயற்கையைச் சரியாகப் படம் பிடிக்க வேண்டுமல்லவா? காலைப் பனி, அதைக் கதிர்க் கரங்களால் களையும் சூரியன் அல்லவா இங்கு தேவை.
மிளிரும் கதிரும் ஞாபகம் இருக்குதில்லையா? அதை இங்கே கொடுக்கலாம். காரணம், சூரியன் மிகச்சிறந்த விளைச்சலைக் காண்கிறான் அல்லவா? குதிர்கள் நிரம்பி வழிகின்றன. எனவே அவனுக்கு ஒரு கர்வமும் இருக்கும். கண்ணாடியைத் துடைத்து விட்டு கீதம் அக்காவின் மார்க் ஷீட்டைப் பார்க்கும் அவரின் அப்பாவைப் போல பெருமிதத்துடம் சூரியன் பனித்திரையைக் கதிர் கரங்களால் துடைத்துவிட்டு தன்னால் விளைந்ததைக் கண்டு மிளிர்கிறான் என்றுக் காட்டி இருந்தால் அது இயற்கையோடு ஒன்றி இருந்திருக்கும் என்பது என்கருத்து. சூரிய ஒளிபட்டு பனித்துளி மிளிர்கிறது.. சூரியனும் மிளிர்கிறது என்று சொல்லலாமா?
கதிரும் பனியும் மிளிரும் - ஒரு வார்த்தை அதிகமாகுதே பின்னால் இதைப் பார்ப்போம்.
கிளியும் பலவும் குலவும் - கிளிகளும், பலவிதப் பறவைகளும் கொஞ்சிப் பேசிக் குலவுகின்றன.
சாப்பாட்டுப் பிரச்சனை தீர்ந்தாச்சி.. இங்கே குளிர் காலம் என்பதால் துருவப் பகுதியில் பனி மூடியதால் பல வகைப் பறவைகள் இங்கே வரும்.
பொலிவும் களியும் பொழியும் - எங்கும் அழகும், ஆனந்தமும் நிறைந்திருக்கிறது.
இழிவும் பழியும் கழியும் - கீழான செய்கைகளும், குற்றப்பேச்சுகளும் மறைந்துவிடுகின்றன.
மீதமுள்ள இரண்டு வரிகளும் அப்படியே இருக்கட்டும்.
இது எப்படி மனித வாழ்க்கைக்குப் பொருந்து எனப் பார்ப்போம்.
கதிரும் பனியும் மிளிரும்
கதிர் என்பது தகப்பன். பனி என்பது தாய். இருவரும் புரிதல் வாழ்க்கையில் மிளிரத் தொடங்குகிறார்கள்
கிளியும் பலவும் குலவும்..
கிளிகள் - குழந்தைகள்... பல குழந்தைகள் பிறந்து குலவுவார்கள்..
[COLOR="Blue"]பொலிவும் களியும் பொழியும் -
இதனால் குடும்பம் ஆனந்தச் சங்கமமாக, நல்லதொரு பல்கலைக் கழகமாக மாறிப் பொலிவு பெற ஆனந்த மழை பொழியும்..
இழிவும் பழியும் கழியும் -
இது சற்று முரணாக வரியாக இருந்தாலும் .... பொறுப்புள்ள குடும்பத் தலைவன் - தலைவி ஆன பின்பு முன்பு அறியாமல் செய்த பல தவறுகளால் உண்டான தறுதலை, தண்டச்சோறு இப்படியான பல பட்டங்கள் கழிவதை எடுத்துக் கொள்ளலாம்.
மனையும் துணையும் இணையும் - இதுவரை பிணக்கிட்டிருந்த மனையாளும் அவள் துணைவனும் ஒன்றுபடுகின்றனர்.
மனையும் துணையும் இணையும் என்பதை மனைவியும் துணைவனும் ஒன்றுபடுகின்றனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் உழைக்கத் தொடங்கிய உடனே ஒன்று பட்டிருப்பார்கள்.
மனை என்றால் மனைவி மட்டுமல்ல... குடும்பத்தினர் - உறவினர் என்றும் பொருள்.. துணை என்றால் கணவன் அல்ல.. நண்பர்கள். எனவே இதை உறவினர்களும் நண்பர்களும் இப்பொழுது நம்மோடு வந்து சேர்ந்து கொள்வார்கள் என்றுச் சொல்லலாம். இது விவசாயம்
அதே போல் சந்தோஷமான குடும்பம் அமைந்த பின்னே, வீடு நிலம் போன்றவற்றை வாங்குகிறோம் அல்லவா? அது வாழ்வியல்..
அப்படியானால் துணை என்றால் என்ன?
வீட்டிற்குத் துணை செய்யும் அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள். அதாவது வீடு, நிலம், கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி, வாஷுங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் இப்படி எல்லாவற்றையும் வாங்குதலைக் குறிக்கும்..
அணியும் மணியும் பிணையும் - இழந்திருந்த ஆடை அணிகலன்கள் வாங்கப்படுகின்றன.
இரண்டிலும் இங்கே ஒரே அர்த்தம் தான்,
பிணியும் வினையும் தணியும் - உடல்நோவும், மனநோவும் குணமாக்கப்படுகின்றன.
பிணி சரி. ஆனால் இங்கே வினை சரியா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. மன வருத்தங்கள் வினையா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
அதே சமயம் இல்லற வாழ்க்கையில் காணும் பொழுது..
பிணிகள் வரும், தொழில் குறையும் என்பது போன்ற அர்த்தம் வருகிறது. வினையும் என்பதை வலியும் என்று நேரடியாக மாற்றினால் இந்த தவறான பொருள்கொள்ளுதல் இருக்காது.
நினையும் பணியும் பணியும் - நினைக்கும் எல்லாக்காரியங்களும் நிறைவேறுகின்றன.
இது சரியாக இருக்கிறது. மிகத் தெளிவாக இருக்கிறது..
வரவும் வரவும் பரவும்
கறுவும் உறவும் மறவும்
தரவும் பெறவும் விரவும்
பரிவும் பிறவும் திறவும்.
வரவும் வரவும் பரவும் - வருவாய் பெருகவும் விருந்தினர் வரவும் பெருகுகிறது.
விவசாயத்திற்கான பொருளும் வாழ்வியலுக்கான பொருளும் இங்கே ஒன்றுதான். அங்கேயும் இங்கேயும் வருமானமும், உறவினர்கள் வருகையும் பெருகுகிறது..
கறுவும் உறவும் மறவும் - பகையாயிருந்த உறவுகளும் அதை மறந்து உறவாடுகிறது.
விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டானால் எல்லோர் மனமும் நிறைந்திருப்பதால் பகைகள் மாறிவிடும்,
காதல் மணம் அல்லது நம் வீட்டில் பெண்ணெடுக்க வில்லை போன்ற பல மனத்தாங்கல்கள் திருமணம் நடந்த போது உருவாகி இருக்கலாம். அததனையும் மாறி விடும்.
தரவும் பெறவும் விரவும் - செழிப்புடன் இருப்பதால் பெண் தரவும் பெண் எடுக்கவும் முன்வருகின்றனர். அல்லது சிறிய அளவில் எதையேனும் தந்து பெரிய அளவில் பொருள் பெற்றுச் செல்கின்றனர். அல்லது செலவு தரவும் வரவு பெறவும் வருகின்றனர். மூன்று பொருள் கொள்ளலாம்.
பாருங்க.. நம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வதைக் கூட இங்கே சொல்லி இருக்கீங்க...
பரிவும் பிறவும் திறவும் - அதனால் இதுவரை
இல்லாத பரிவு போன்ற பல புதிய விஷயங்களை மனந்திறந்துகாட்டுகின்றனர்.
இப்போ பாட்டி தாத்தா ஆகறோம் நல்ல பேரக் குழந்தைகள். மனம் பரிவால் நிரம்புகிறது, பொருள் சேர்த்தல், குடும்பம் என்பதைத் தாண்டி ஆன்மீகம், பொதுத் தொண்டு இப்படிப் பல புதிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன,,
உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்.
திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.
நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.
இப்போது மேலே இருக்கும் மூன்று பதிகங்களை வாழ்வியலாய்ப் பார்ப்போம். இவை முதுமையைக் குறிப்பன.
உழலும் உழலும் நலியும் - இதுவரை நாம் பல விஷயங்களுக்காக உழன்று வந்திருப்போம். அப்படி இனிக் கஷ்டப்படவேண்டியதில்ல. மன உழற்சிகள் குறையும். ஏனென்றால் ஆன்மீக வழியில் பயணம் ஆரம்பித்து விட்டது..
விழலும் அழியும் - நம்மிடம் இருந்த தேவையற்ற வேண்டாத எண்ண்ங்கள், ஆசைகள் விழல் போன்றவை அவையும் அழியும்.
தழலும் ஒழியும் - ஆசைத் தீ அணையும்
கழலும் கழலும் - நம் அடியும் இறைவன் அடியை நோக்கும்
பிழியும் விழியும் வழியும் - நம்முடைய விழிகள் நற்கதி வேண்டி அழும். நம்முடைய கடை வழி தேற்றத்தை எண்ணி மனமும் பிழியும்.
திருவும் உருவும் மருவும்
நம்முடைய செல்வம், மதிப்பு, உருவம் எல்லாம் மாறத் தொடங்கும்...
உருகும் உளமும் இறுகும்
மனம் உருகும்.. இறைவனைத் துதித்து. அதே மனம் இறுதிக் காலத்தை எதிர் கொள்ளும் வலிமையயும் பெறும்.
அருகும் அருகும் கருகும்
இந்தக் காலக் கட்டத்தில் அதிசயமாகத் தோன்றும் சில ஆசைகள் நிறைவேறாது அவை கருகிவிடும்.
அல்லது புல்லாய் பூமியில் உதித்த இந்த உடலும் இறந்த பின் தீயிடப்பட்டுக் கருகும். மானிடராதல் அரிது என்று ஔவை சொன்னார். அதனால் மனிதப் பிறவியை அரிதானப் பிறவி - அருகு என்றுச் சொல்லலாம். அப்படி அரிதாகக் கிடைத்த மானிட உடல் அருகிக் கருகும்.. இறந்தவுடன் எரிக்கப்பட்டு விடும்.
"
பிறகும் பெருகும் சுடரும்.
அப்படி இருந்தாலும் ஞானச் சுடர் பெருகும், அல்லது உடலை எரித்த பின்னும் நம்முடைய புகழ் பெருகும்,,,
இப்படி விவசாயத்தையும் வாழ்வியலையும் அழகாக இந்தக் கவிதையில் இணைக்கலாம் அக்கா.
இப்பொழுது புரிந்திருக்குமே ஏன் உடனே நான் இ-பணம் பரிசளித்தேன், ஏன் உங்கள் விளக்கத்திற்காகக் காத்திருந்தேன் என.
கவிதையை இந்த அளவிற்கு பதம் பதமாக பிரித்துப் பார்த்து கருத்துச் சொல்ல அனுமதித்து அதையும் இரசித்து ஊக்கம் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி..
இந்தக் கவிதை விளக்கத்தின் போது தெரியாமல் என்னுடன் தொலைபேசியில் உரையாடி என் விளக்கங்களைச் சகித்துக் கொண்ட ஆதன், இரவி ஆகியோருக்கும் எனது நன்றி..
தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டேன் என்று சொன்னாலும், இரசித்தேன் என்று சொன்ன தலைக்கும் நன்றி..
இதைப் பொறுமையாய் படிக்கும் அனைவருக்கும் நன்றி.
அக்கா, கலையக்கா வந்தால் இரவி மாதிரியே புலம்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வர்ட்டா!!!
ஹி ஹி இதை விமர்சனப் போட்டிக்கு நகர்த்திடச் சொல்லலாமா?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சமையலும் கவிதையும் ஒன்று.
சமையலில் நமக்கு இட்பொருட்களின் குணம், சுவை, பதம் இப்படு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைச் சரியாக விகிதங்களில் சரியான பதங்களில் கூட்டி சுவையூட்டுகிறோம். இதைச் சுவைப்பவர் நாக்கும், மூக்கும், விழியும்,உடலும் மனமும் நம் அடிமை.
அது போல சொற்களின் குணம், சுவை, பொருள், சேர்க்கப் படவேண்டிய இடம் இப்படி பல உண்டு. நல்ல கவிதைச் சமையல்காரர் இப்படிச் சொல்லின் குணம், பதம், சுவை அறிவதனால் சரியான வார்த்தைகளை அங்கு அடிமையாகத காதும் இங்கு நமது அடிமை ஆகிவிடுகிறது..
முத்துக்களின் தரமே மாலையின் தரமாகிறது. இல்லையா? வரிசை பிறழ்ந்த சில முத்துக்களை அடையாளம் காட்டி நேர்த்தி செய்யும் ஒரு தர ஆய்வாளன் பணி மட்டுமே இது. முத்துக்களைக் கண்டவரும் கோர்த்தவரும் நீங்கள் மட்டுமே!!!
உங்கள் மனம் ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை ஒரு கருத்தை மட்டுமே சிந்திப்பதாக. எழுதி முற்றிலும் முடித்து ஒரு முறை சரி பார்த்த பிறகு நகாசு வேலைகளைக் கவனிக்கவும். அப்படித்தான் கவிதைகளை மெருகேற்ற இயலும். இல்லையென்றால் சொல்ல வந்ததை சொல்ல முடியாது.
இன்னும் பல முத்துமாலைகள் உருப்பெறட்டும் என்று வாழ்த்துகிறேன்,
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மிச்சமிருக்கும் நாலு வரிகளுக்கு வாழ்வியல் விளக்கம் தரணுமே.. அவைதானே கவிதையை முழுமையாக்கும்..
மனிதன் இறந்துவிட்டான். புகழுடம்பு எய்தி விட்டான்..
காலம் நிற்குமா? நிற்காத அல்லவா.. காலம் போய்க் கொண்டே இருக்கிறது.
உருளும் உலகும் சுழலும் - உலகம் சுழன்றுகொண்டிருப்பதால் காலமாற்றம் ஏற்படுகிறது.
அரளும் இருளும் புலரும் - பயமுறுத்திக்கொண்டிருந்த இருள் விலகி பொழுது புலர்கிறது. இது வரவிருக்கும் விடிவுகாலத்துக்கான குறியீடு.
ஒரு தலைவன் இரந்து போனதால் உண்டான இருள் விலக ஆரம்பிக்கும்..
காரணம் அடுத்த தலைவன் உருவாகிறான்.. அடுத்த தலைமுறை வருகிறது..
கதிரும் கடலும் குலவும்
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மறுபடி கவிதை ஆரம்பிக்கிறது இங்கே...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இதைத்தானே மாலை என்று சொன்னீர்கள்.....
ஆரம்ப இடத்திலேயே முடிவு வருவது!!!
ஒரு கவிதைக்கு எப்பொழுது உன்னதமடைகிறது? அது அதற்குள்ளே இருக்கும் அல்லது மறைந்து கிடக்கும் உண்மைகளை அதற்கே தெரியாமல் வெளியே கொண்டுவந்து சுவைக்கும் பொழுதே.... அவரையை சாப்பிடுவது நல்லது.... அதைவிட ருசியானது அவரைக்கொட்டை! அதற்கு அவரையைப் பிரிக்கவேண்டும்!! (கவிதையும் சமையலும் ஒன்று என்று சொன்னீர்களல்லவா,, ஏதோ நம்மளால முடிஞ்சது)
கவிதை முழுக்க ”உம்” விகுதி, தாமரை அண்ணாவின் விளக்கத்தில் நம்மை “உம்” போட்டு கேட்கச் சொல்லுகிறது.. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!!!
சாம்பவிப் பாட்டி இதைப் படித்தால் நிச்சயம் மகிழ்வார்கள்!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அப்பப்போ சில முந்திரக் கொட்டைகளைப் போல சில கவிதைகளில் கருத்து வெளியே தெரியும். சில இடங்களில் மாங்கொட்டைகளைப் போல் உள்ளேயும் இருக்கலாம்.. பலாக் கொட்டை போல பொருள்தெரியவே போராட வேண்டிய இடங்களிலும் இப்படி இன்னொரு கருத்து ஒழிந்துதான் இருக்கும்.
நீங்க உம், உம் என்று கேட்கிற ஆளில்லையே.. ஆ! என்று பாராட்டுகிற ஆளாச்சே..
ஏன்னா உம் + ஆ = உம்மா ஆச்சே!!!
கண்டிப்பா இப்படி ஆரோக்யமாக தமிழ் இலக்கிய உலகம் இருந்தால் தமிழ் அம்மாவின் உம்மா அத்தனைப் பேருக்குமே கிடைக்கும்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
காதல், திருமணம், குடும்பம், முதுமை, ஆன்மீகம் என்று வாழ்வியல் பொருளை என் வார்த்தைகளுக்குக் கொடுத்து வளம் பெற வைத்துவிட்டீர்கள்.
எழுதும்போது இப்படிதான் எழுதவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. சில இடங்களில் தடுமாறினேன் என்பது உண்மை.
அரளும் இருளும் என்ற இடத்தில் நீங்கள் சொன்னது போல் அரளும் என்றால் பயப்படும் என்ற பொருள் வருவதை உணர்ந்தும் வேறு எப்படியும் எழுதத்தோன்றாமல் அதையே எழுதினேன்.
ஒரு குடியானவனின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வரிகள் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வையும் பிரதிபலிப்பதை உங்கள் வரிகள் மூலமே கண்டுகொண்டேன். அதிலும் பல இடங்களில் உங்கள் விளக்கங்களை ரசித்தேன்.
குறிப்பாக,
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
இவ்வரிகளுக்கான விளக்கம் படித்து வாய்விட்டுச் சிரித்தேன்.
மனையும் துணையும் இணையும்
இவ்வரியில் மனை, துணை இவற்றுக்கான விளக்கம் கண்டு வியந்தேன்.
ஆரம்ப வரிகள் அனைத்தையும் ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தியமை கண்டு சிலிர்த்தேன்.
பல வகையிலும் என்னைப் பரந்து யோசிக்கவைத்த விளக்கங்கள்!
ஒரு வார்த்தையை, வரியை எப்படியும் பொருள் கொள்ளலாம் எனத்தெளிவித்த உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும் தாமரை அவர்களே.
மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் வரும் போட்டி அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் கவிதையைப் பற்றிய என் பார்வை பதித்த வட்டம் மிகக் குறுகியது. அதை விட்டு வெளியில் அழைத்துவந்த உங்களுக்கு என் நன்றி.
உங்கள் பார்வைக்கு
http://www.tamilmantram.com/vb/showt...473#post343473
http://www.tamilmantram.com/vb/showp...45&postcount=4
மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்...
கவிதைகளை எழுதி முடித்த பின் எழுத்துப்பிழைகளைக் களைவது போல... மொழிநல ஆய்வும் செய்தால்.. கவிதைகளின் தரம் பன்மடங்கு உயரும்..
வளர வளர நமக்கு இந்தப் பொறுப்பும் கூடுகிறது.. வார்த்தைக் கருவூலங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றின் மதிப்பையும் புரிந்து கொள்ளுங்கள்.. அதற்கு செய்யுள்களை விட விளக்க உரைகளை ஆழமாகப் படித்து, இன்னும் என்ன இருக்கிறது என ஆராயத் தொடங்குங்கள். கவிதைகளாக வாழ்ந்து பாருங்கள் மனதில்..
தினசரி தியானம் இந்த வகையில் எனக்குக் கிடைத்த நல்ல வரப்பிரசாதம். இது போன்ற பல கவிதைகளும் அவ்வாறே..
எப்படி அறையில் இருந்த கணினி அரையில் அடங்குகிறதோ அப்படி.. வளம் வளர வளர வடிவங்கள் குறுகத் தொடங்கும்...
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்தக் குறள்
போல
பல நூற்றாண்டுகள் உங்கள் படைப்புகள் வாழட்டும்.
என்னைப் போல பலர் வந்து அவற்றை வாய்பிளந்து ஆச்சர்யமாய் ஆராயட்டும்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks