நதி சொன்னது;
நான்தான் கடலை நிரப்புகிறேன்
கடல் சொன்னது;
என் உப்பைத் தின்றுதான் எல்லோரும் வாழ்கிறார்கள்.
உப்பு சொன்னது:
உப்பில்லா பண்டம் குப்பையிலே.
குப்பை சொன்னது:
குப்பைத் தொட்டி என்வீடு-என்வீட்டில்
குப்பையும் கொட்டுவார்கள்-சிலசமயம்
குழந்தையையும் கொட்டுவார்கள்.
குழந்தை கேட்டது:
பெற்றெடுத்த தாயே -பெரும்பாவம் செய்தாயே
குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே
பெண்குழந்தை என்றதினால்
பேதலித்துப் போனாயோ?
கண்ணென்றும் மணி என்றும்
கற்கண்டுக் கட்டி என்றும்
பொன்னென்றும் பூவென்றும்
போற்றி எனைக் கொஞ்சாமல்
குப்பைத் தொட்டியிலே வீசும் அளவுக்கு
குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே
தாய் சொன்னது:
என்னருமை மகளே என்னை நீ மன்னிப்பாய்
பாவிநான் இப்போது உயிரோடு இல்லையடி
ஆவியாய் இருந்துனக்கு ஆசி வழங்குகிறேன்
குறையாகப் பிறந்தாலும் தப்பில்லை ஆனால் நீ
முறையாகப் பிறக்கவில்லை ஆதலினால் இவ்வுலகம்
ஏசுமே என்றஞ்சிக் குப்பைத் தொட்டியிலே
வீசி எறிந்திட்டேன் வீண்பாவம் செய்திட்டேன்
கதியேதும் இல்லாமல் கரையேதும் காணாமல்
நதியிலே குதித்திட்டேன் என்னுயிரை மாய்த்திட்டேன்
நதி சொன்னது:
நான்தான் கடலை நிரப்புகிறேன்.
Bookmarks