உன் மெளனக்கிணற்றின் ஆழமறியாமலும்
அவ்வாழத்தில் புதையுண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய விவரமறியாமலும்
தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
இறங்கியபின்னரே உணர்கிறேன்!
உன்னிடம் பகிரப்பட்ட என்
கனவுகளும், நம்பிக்கைகளும்
என்றாவது நிறைவேற்றுவாயென்று
ஒப்படைக்கப்பட்டிருந்த என் ஆசைகளும்
தம் வனப்பிழந்து வடிவம் குலைந்து
மேலும் மேலும் அழுத்தம் பெற்று
சேற்றுக்குள் முங்கி மூச்சுமுட்டிக்கிடக்கின்றன.
அவை எழுப்பிய அலறல்கள் யாவும்
அக்கிணற்றின் அடியாழத்திலேயே
எதிரொலிக்கப்பட்டு அவற்றையே
வந்தடைந்துவிட்டிருந்தபோதிலும்.
தம் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பனின் வருகைக்காக காத்திருக்கின்ற
அவை எழுப்பிய ஈனசுரங்களைக்கொண்டு
அவற்றை அடையாளங்காண்கிறேன்!
இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,
அளவிலா என் அற்புதங்களை மட்டுமேந்தி!
Bookmarks