(1)
தாவும் பொன்மானொன்று
தானைத் தலைவனாய்
மன்றப் புல்வெளியில்
மேய்கிறது, பாய்கிறது,
ஆய்கிறது, வேய்கிறது,
ஓய்ந்தமரும் வேளையில்
உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!
*****
(2)
கடவுளையும், கன்னியையும்
கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
கவிதை தருவானவன்,
கவிதைத்தரு ஆனவன்,
கவிதை தரும் வானவன்!
*****
(3)
அந்தத்துவம் இந்தத்துவம்
என தத்துவங்கள் பல விதைப்பான்;
எந்தத்துவமானாலும்
பந்துக்குள் காற்றாய்
பைந்தமிழில் அடைப்பான்;
கவிதைகளை வாழவைத்து
அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!
*****
(4)
கடிவாளமிடப்படா
கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
கைவரப்பெற்றவன்,
மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
மூர்த்தி பெரிது, அவர்
கீர்த்தி அதனினும் பெரிது!
*****
(5)
மன்றத்தின் மணிமுடி
வயசிலோ வணங்காமுடி!
வலதுகால் வைத்து வருவோரை
ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
இந்த இனியவருக்கு
மரியாதை வழங்காமையே
மரியாதை வழங்கலாம்!
*****
(6)
உள்ளுவதெல்லாம்
உயர்வாய் உள்ள....
துள்ளியதெல்லாம்
தொய்ந்து துவள....
உள்ளதையெல்லாம்
சொல்வதா? கொல்வதா?
குழப்பமேகத்துக்குள்
குளிர்நிலவு!
*****
(7)
சீறிவரும் புரவியொன்று
சிறு ஓய்வு கொண்டதின்று!
மாறிவரும் நாளில்
மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
சேணத்தில் சுமந்துசெல்லும்!
*****
(8)
அழகிய கையெழுத்துக் கண்டால்
பழகிய எவரும்
பழிப்பரோ தமிழை?
பண்பு, பரிவு, பாசமென்னும்
முப்பரிமாணப் பெட்டகம்,
பெயரும், அவரும்!
*****
(9)
இரவில் இல்லாதவர்,
இரவில் இருப்பவர்!
படம்பார்த்து கதைசொல்வதுபோல்
இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
படைக்கிறாரே பல புதியமுகங்களை!
*****
Bookmarks