பாண்டி நாட்டைச் சார்ந்த கொறுக்கையூரில் புத்தன் என்பவரின் மகனாகத் தோன்றியவர் காரியார்.இவர் இயற்றிய நூலே கணக்கதிகாரம்.இந்நூல் 64 வெண்பாக்களையும் 45 புதிர் கணக்குகளையும் கொண்டுள்ளது.இதில் உள்ள ஒரு கணக்கு.
பலாப்பழத்தினுள் இருக்கும் பலாச்சுளைகளின் எண்ணிக்கையை அறுப்பதற்கு முன்பே காண்பது எப்படி?
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல்--ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பறுக் கெண்ணி--வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறுஎண்ண வேண்டாம் சுவை"
விளக்கம்: பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவே பலாப்பழத்தினுள் இருக்கும் சுளைகளின் எண்ணிக்கையாகும்.
உதாரணமாக காம்பைச் சுற்றியுள்ள சிறு முட்களின் எண்ணிக்கை 100 என்க. இதை 6 -ஆல் பெருக்க விடை 600 . இதை 5 ஆல் வகுக்க விடை 120 . இதுவே பலாப்பழத்தினுள் இருக்கும் சுளைகளின் எண்ணிக்கையாகும்.
Bookmarks