காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது
கண்ணில் பட்டது அந்த கருவளையம்
கண்டிப்பாக இன்று காணவேண்டும் மருத்துவரை
உடம்பில் ஏதோ ஒரு கோளாறு ... சிந்திக்கும் போதே
பால்காரன் மணிசத்தம் , காய்கறிக்காரன் அறைகூவல்
குளியல் அறையில் இருந்து கமலா துண்டு எங்கே ?
கமலா எக்ஸ்ப்ரஸ் புறப்பட்டது - ஒரு வண்டி
இருநூறு சக்கரங்கள் இணையாக ஓடியது
காலைஉணவு , மதியஉணவு ,நொறுக்கு தீனி
இவை எல்லாம் எடுத்து வைத்து பார்க்கையிலே
படுக்கையில் உருளும் சின்னக்குட்டி
எழுப்பி விட்டு எத்தனை நேரம் இப்படி தூங்குறியே
தூக்கி போய் காலைகடன் முடித்து
காக்கை குளியல் போட்டு தலை வாரி பூவைத்து
சட்டை போடும் போது பார்த்து
அம்மா இந்த சட்டையில பொத்தான் இல்லை
ஊசி தேடும் வேலையில் ஓசைபடாமல் போகும் கணவர்
மறந்து வைத்து போன மதிய உணவு
மூன்றாம் மாடியில் இருந்து என்னங்க சாப்பாடு என்று கூவ
இறங்கி வா என்று சைகை காட்டும் கணவன்
தூசி தட்டி வீடு கூட்டி தரை துடைத்து நிமிர்ந்து பார்க்க
" அத்தே ... மம்மம் " சேற்றுக் காலுடன் எதிர் வீட்டுக்குழந்தை
இது முடித்து அது முடித்து இளைப்பாறி உணவருந்த
என்ன கமலா சாப்பாடுல்லாம் ஆச்சா எதிர் வீட்டு மாமி
அவள் போக துணி துவைத்து துணி மடித்து
துவண்டுபோனாள் கமலா ................
அப்பாடா என்று அமர ஆட்டோ சத்தம்
மணி மூன்று அழுதபடி வந்தாள் குழந்தை
காரணம் கேட்டு காரியம் அறிந்தது
கணக்கு வரவில்லை பாவம்
வீட்டு வேலை முடித்தவளுக்கு வீட்டுப்பாடங்கள்
கை பிடித்து எழுதி கணக்கு சொல்லி கதை படிக்க
கணவன் வந்தான் கமலா தலைவலி என்று
காப்பி கொடுத்து கரிசனம் காட்ட அலுத்துக்கொண்டான்
பேசாம பொம்பளையா பொறந்து இருக்கலாம்......
வீட்டில நிம்மதியாவது இருக்கலாம் என்று
புன்முறுவல் பூத்தாள் ... இவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது
பாவம் இன்று என்ன வேலையோ ? வேதனையோ ? என்று ...
இரவு உணவு முடித்து இன்பப்பேச்சு பேசி
இருவரையும் தூங்க வைத்து பாத்திரம் கழுவ போனாள்
படுக்கவரும் போது முகம் கழுவி கண்ணாடி பார்க்க
கண்ணில் பட்டது .... கண்ணை சுற்றி கருவளையம்
கண்டிப்பாக நாளை காணவேண்டும் மருத்துவரை
காரணம் எதுவாக இருக்கும் ..... உறங்கிப் போனாள் அசதியில்
Bookmarks