புதிய திரைப்படத்தின்
திருட்டுப் பதிப்பினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும்
எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.
முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி
பினாத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.
குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம்
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.
அவளது ஒப்புதலின்றி எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.
இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.
Bookmarks