வந்தனம் நண்பர்களே!
எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. நானும் வெண்பா எழுத வேண்டும் என்று. அதனை ஒட்டிப் பிறந்தது இந்தப் பயிலரங்கம்.
என்னாசை முதலடியாக அசை பிரிக்கக் கற்றுக்கொள்ளலாம் என்று களம் காண்கிறேன்.
அதென்ன அசை. இதைப் பற்றி மன்றத்தில் பலரும் அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும் என் பங்குக்கு நானும் சொல்லிடுறேன்.
அசை இரு வகைப்படும்.
1) நேர் அசை
2) நிரை அசை
நேரசைகளாக அமைவன..
க - குறில் எழுத்து தனித்து
கல் - குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.
கா - நெடில் எழுத்துத் தனித்து தருவது
கால் - நெடில் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து வருவது.
நிரையசைகளாக அமைவன..
சுடு - குறிலும் குறிலும் இணைந்து வருவது
சுடும் - குறிலும் குறிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது
கடா - குறிலும் நெடிலும் இணைந்து வருவது
கடாம் - குறிலும் நெடிலும் மெய் எழுத்தும் இணைந்து வருவது
இந்தளவுதாங்க இப்போதைக்கு நமக்குத் தேவை.
இனி ஒவ்வொரு குறளா அசைச்சுப் பார்ப்போம். அதாங்க அசை பிரிச்சுப் பார்ப்போம்.
Bookmarks