ஐகாரக் குறுக்கம்
ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை பெறும் என உறுப்பியலில் கூறப்பட்டது.ஆயினும் அலகிடும்போது ஐகாரக்
குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின்
வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக
அலகிடப் பெறும்.
எடுத்துக்காட்டு :
அன்னையையான் நோவ தவமால் அணியிழாய்
புன்னையையான் நோவன் புலந்து
- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
(அவம் = வீண் ; நோவன் = வருந்துவேன் ; புலந்து
= சினந்து)
மேற்காட்டிய வெண்பாவில் ஐகாரத்தை
நெடில்போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு அன்னையையான், புன்னையையான் எனும் சீர்களை
அன்-னை-யை-யான் எனவும் புன்-னை-யை-யான் என்று
பிரித்தால் அவை நாலசைச் சீர்கள் ஆகும். வெண்பாவில்
நாலசைச் சீர்களுக்கு இடமில்லை. ஆகவே ஐகாரக்
குறுக்கத்தை ஒரு மாத்திரை பெறும் குறில் போலக் கொண்டு
அன்-னயை-யான், புன்-னயை-யான் என அலகிட வேண்டும்.
அச்சீர்கள் கூவிளங்காய்ச் சீர்கள் ஆகி, வெண்பா ஓசை
காக்கப் பெறும்.
(ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
ஐ-யிரு என அலகிட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)
(பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)
மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத்
தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம்
அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால்
இலக்கணம் சிதையும்.)
நன்றி : tamilvu.org
இது இணையத்தில் கண்டெடுத்தது. மொழியின் நுட்பமான அலகுகளில் ஒன்றாகத் தெரிகிறது. உச்சரிக்கும் காலத்தின் அளவைக் கொண்டு அளக்க வேண்டியிருக்கிறது.
தெரிந்தவர்கள் இன்னும் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஐ - வரக்கூடிய வார்த்தைகள் தொகுத்து அவற்றை அசை பிரித்தால் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்
அம்மையப்பன்
ஆணை
யானை
பாளை
பானை
சேனை
மனைமாட்சி
ஐந்து
வளையாதது
சிலையானது
மழலை
இவற்றை கொஞ்சம் அசைபிரித்துக் கொடுங்களேன்.
Bookmarks