சிங்காரம் யாரோ ஒருவருடன் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பதை செல்வம் பார்த்தபோது அவன் தன் இருசக்கர வாகணத்தில் பயணித்துக்கொண்டிருந்தான். சட்டென்று வேகத்தைக் குறைத்து அவர்களுக்கு அருகே சென்று நிறுத்திவிட்டு சிங்காரத்தை நோக்கிப் போனான். நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரை சந்திக்கப்போகிறான். செல்வத்தின் அப்பாவின் பால்ய நண்பர். 40 வருடங்களாக அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தவர்கள். சிங்காரத்தை செல்வமும் அவனுடைய தம்பி தங்கைகளும் பெரியப்பா என்றே அழைக்குமளவுக்கு நெருக்கம்.
செல்வம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த சிங்காரம்...இவன் எதற்கு என்னிடம் வருகிறான் என்று அவனைப் பார்ப்பது அவருக்குப் பிடித்தமானதல்ல என்பதைப்போல முகம் மாறினார். அவருக்கு எதிரே வந்து நின்ற செல்வம்,
"நல்லாருக்கீங்களா பெரியப்பா"
என்றதும், சிங்காரம் 'யாருடா உனக்குப் பெரியப்பா" என்றே கேட்டுவிட வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை பொது
இடத்திலிருக்கிறோம் என்ற நாகரீகம் கருதி...தொண்டைக்குள்ளேயே அடக்கிவிட்டார். ஆனால் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.
"ஏன் பெரியப்பா...இன்னும் எங்க அப்பாமேல இருக்கிற கோபம் போகலையா...?"
செல்வத்தின் கேள்வியைக் கேட்டதும் அந்த சம்பவம் நடந்தது அவரது நினைவில் ஆடியது....
சிங்காரத்துக்கு அவசரமாய் கொஞ்சம் பணம் தேவைப்பட்டபோது நேராய் வந்து செல்வத்தின் அப்பாவிடம் கேட்டார். அந்த சமயத்தில் அவ்வளவு பணம் அவரிடமில்லாததால், தன் மனைவியின் சங்கிலியை பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்து வங்கியில் அடமானம் வைத்துப் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். மனைவி வீட்டிலில்லாத நேரத்தில் வேண்டாம்...அவர் வந்ததும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுக் கொடுத்தால் போதுமென்று சிங்காரம் சொல்லியும் கேட்காமல்..வற்புறுத்திக் கொடுத்தார். இரண்டு மணிநேரம் கழித்து உடம்பெல்லாம் ஆத்திரத்தில் நடுங்க..வீட்டுக்கு வந்த சிங்காரம் செல்வத்தின் அப்பாவைப் பார்த்து,
"எவ்ளோநாளா என்னை அவமானப்படுத்தனுன்னு நெனைச்சே...ச்சே..நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சங்கூட நினைச்சுப் பாக்கல...டூப்ளிகேட் நகையைக் கொடுத்து என்னை அத்தனைப் பேருக்கு முன்னால அவமானப்படுத்தினதுமில்லாம...போலீஸ்ல வேற புடிச்சுக் குடுக்கப் பாத்தியே....மேனேஜர் கால்ல கையில வுழுந்து..மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வந்தேன். இனிமே இனிமே உன் ச*ங்காத்த*மே வேண்டாம்....பணமேயில்லன்னு சொல்லியிருந்தாக் கூட வேற எடத்துலக் கேட்டிருப்பேன். இப்படி நம்பவெச்சுக் கழுத்தறுத்திட்டியே...போதுண்டா சாமி...நண்பன்னு நம்பனதுக்கு எனக்கு இந்த அவமானமே போதும்"
என்று இரைந்துவிட்டு, செல்வத்தின் அப்பாவுடைய எந்த சமாதானத்தையும் கேட்காமல் போய்விட்டார். திரும்ப அவர் வீட்டுக்குப் போன அப்பாவை...பார்க்கக்கூட விருப்பமில்லாமல்..கதவை அறைந்து சாத்தி அவமானப் படுத்தியனுப்பிவிட்டார். இரண்டொரு நாளில் வீட்டைக் காலி செய்துகொண்டு வேறு இடத்துக்குப் போனவர்...நான்கு வருடங்களுக்குப் பிறகு செல்வத்தை இப்போதுதான் பார்க்கிறார்.
தன் நினைவுகளிலிருந்து மீண்ட சிங்காரம், அந்த நினைவுகள் கொடுத்த வெறுப்புணர்வோடு...செல்வத்தைப் பார்த்து...
"எதிரியைக் கூட மன்னிச்சுடலாம்...உங்கப்பன மாதிரி ஆள மன்னிக்கவே முடியாது....உன்கிட்ட என்ன பேச்சு...நீ இடத்தை காலி பண்ணு"
வார்த்தைகளில் மிகுந்த வெறுப்பையும், கோபத்தையும் காட்டிய சிங்காரம், தன்னுடன் இருந்தவரிடம்,
"அப்ப நான் கிளம்பறேங்க பசுபதி. அப்புறம் பாக்கலாம்.."
சொல்லிவிட்டுக் கிளம்பியவரின் கையை மென்மையாய் பிடித்து நிறுத்தி...
"உங்க கோபம் புரியுது பெரியப்பா....அப்பா அந்த காரியத்தை தெரிஞ்சி செய்யல...அது டூப்ளிகேட்டுன்னு அவருக்கே தெரியாது"
"அவருக்கே தெரியாதா என்னடா கதை விடற...உங்கம்மாவோட நகை...உங்கப்பாவுக்கு டூப்ளிகேட்டுன்னு தெரியாதா....அதுசரி...நீ உங்கப்பனுக்குத்தானே வக்காலத்து வாங்குவ...உன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல கையை விடு"
"பெரியப்பா தயவுசெஞ்சி புரிஞ்சுக்குங்க நீங்க வந்துக் கேட்டதும் சட்டுன்னு எடுத்துக் குடுத்துட்டாரு....ஆனா அதுக்கு ஒரு வாரம் முன்னால எங்க பாட்டி வீட்டுக்குப் போன எங்கம்மா...அவங்க அண்ணன் பொண்ணு கல்யாணம் நாலு பவுன் சங்கிலியால தடைபட்டிருக்குன்னு தெரிஞ்சி..தன் கழுத்துலருந்ததை கழட்டிக் குடுத்துட்டாங்க. எங்க மாமாவும் கூடிய சீக்கிரம் அதே மாதிரி சங்கிலி செஞ்சுக் குடுத்தடறதா சொல்லியிருக்காரு. அதுவரைக்கும் அப்பாவுக்குத் தெரிய வேண்டான்னு, அதே மாதிரி டூப்ளிகேட்டை செஞ்சு போட்டுக்கிட்டு வந்திருக்காங்க. அது தெரியாம எங்கப்பா...அந்த நகையை உங்களுக்கு குடுத்துட்டார். நீங்க கோவிச்சுக்கிட்டு வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுப் போனதுக்கப்புறம்...மாசக்கணக்குல புலம்பிக்கிட்டேயிருந்தார். இந்த நாலு வருஷமா எங்கம்மாக்கிட்ட பேசறதையே நிறுத்திட்டார் தெரியுமா உங்களுக்கு?"
செல்வம் சொன்னதைக் கேட்டதும்...அதிர்ந்து நின்றார் சிங்காரம். கோபத்துல யோசிக்கிற சக்தியையே தொலைச்சிருக்கோமே... எவ்வளவு மட்டமாய் நடந்திருக்கிறோம் நாம் என வெட்கினார். செல்வத்தை ஆதுரமாய் தோளைப் பிடித்து,
"அப்பா நல்லாருக்காரா...நான் நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்கறேன்னு சொல்லு....என் தம்பியையும், தம்பிப் புள்ளைங்களையும் பாத்து வருஷக் கணக்காச்சி."
தழுதழுத்தக் குரலில் சொன்ன சிங்காரம்...பொது இடம் என்றுக்கூட நினைத்துப் பார்க்காமல் கண்ணீர் சிந்தினார். செல்வம் போனதும், சிங்காரத்தைப் பார்த்து பசுபதி,
"உங்களுக்கு ஒரு தம்பியிருக்கறதா நீங்க சொல்லவேயில்லை..."
என்றதும்,
"ஆமாங்க என்னோட ஒரே தம்பி... ஒரு சின்ன மனஸ்தாபம்...தப்பா புரிஞ்சிக்கிட்டேன் தப்பு என்னோடதுதான்...மனசுலருந்த கோபமெல்லம் இப்ப ஆறிப்போச்சு....சந்தோஷமா இருக்கேன்"
மலர்ச்சியுடன் சொன்னார்.
Bookmarks