அத்தியாயம்:1
அண்ணா சாலையின் பரபரப்பிலிருந்து லேசாய் ஒதுங்கி அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். அண்ணா சாலையின் பரபரப்பை குட்டித் தம்பியாக்கிவிடும் பெரியண்ணன் பரபரப்பை கட்டிடத்தின் மூன்றாம் தளம் மொத்தமாய்க் கொண்டிருந்தது. ஜனநாயகத்தின் நான்காவது தூண். தமிழ்நாட்டின் கரை வேட்டிகளையும்,காவி பார்ட்டிகளையும், காக்கிகளையும், கதர்களையும் கதற வைக்கும் புலனாய்வு நிருபர்கள்...தங்கள் அதிர வைக்கும் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். வாரமிருமுறை வெளிவரும் இந்த இதழை, அதன் ஆசிரியரைவிட ஆவலாய்....இன்னும் சொல்லப்போனால் அடிமடியில் பயத்தைத் தேக்கிக்கொண்டு அச்சத்துடனும் எதிர்பார்ப்பார்கள் மேலே சொன்ன க...காக்கள்.
பூவிழி தீவிர சிந்தனையுடனும், சற்றேக் கவலையுடனும் அந்த செய்தியைப் படித்துக்கொண்டிருந்தாள். நாளைய இதழுக்காக அச்சுக்குப் போகுமுன் அவளது பார்வைக்கு அனுப்பட்ட அந்த செய்தியை அனுப்பியவன் அதனைத் தயாரித்த பாரி. அந்தப் பத்திரிக்கையின் சிறப்புப் புலனாய்வு நிருபர். பூவிழியின் காதலன். அவளது சற்றேக் கவலைக்கானக் காரணம் அந்த செய்தின் உள்ளிருப்பு விஷயங்கள். சக்திவாய்ந்த பெரியக் குடும்பத்தின் திடீர் கவிதாயினியைப் பற்றிய அதிர வைக்கும் சில உண்மைகளை அதில் சொல்லியிருந்தான் பாரி.
பண்டைய அரசர்களின் வாரிசுகளுக்கு ஆளுக்கொருத் துறையை அரசர் ஒதுக்கியிருந்ததைப் போல இந்த வாரிசுக்கு ஒதுக்கப்பட்ட கலை இலக்கியத் துறையின் மூலமாய், ஆண்டுதோறும் நிகழ்த்தும் கும்மிப்பாட்டுத் திருவிழாவில்...இவரது பங்குக்கு எவ்வளவு கும்மியடிக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் சொல்லியிருந்தான். என்னதான் ஆதாரமிருந்தாலும் அந்த சக்திவாய்ந்தக் குடும்பத்தின் ரத்தப் பின்னனி அவளை பயமுறுத்தியது. எதற்கு இவனுக்கு இந்த ஆபத்தான வேலை...? காதலியின் மனது இப்படி சிந்தித்தாலும், அவனது துணிச்சலை வெகுவாய் மெச்சிக்கொண்டது ஒரு சக நிருபரின் மனது.
சிறுசிறு தடுப்புக்களாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்த பெரியக் கூடத்தில்...இவளுக்கு நேர் பின்னாலுள்ளத் தடுப்புதான் பாரியின் களம். நல்ல உயரம். சேட்டுப் பையன் என சொல்லவைக்கும் நிறம். சூர்யாவின் உடற்கட்டு, பழைய ரஜினிகாந்தின் தலைமுடி.துடிப்பான இளைஞன். பொறியியலில் பட்டம் பெற்றவன்,எந்திரங்களோடு எந்திரமாக விரும்பாமல் மனம் விரும்பி ஏற்றுக்கொண்ட துறையில் சாதித்துக்கொண்டிருப்பவன். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் பத்திரிக்கையாளனாக பணிபுரிந்து, சிறப்பு பரிசைப் பெற்றவன். வேலை வேண்டி வந்து நின்றபோது வாரியணைத்துக் கொண்டார் இந்தக் குழுமத்தின் தலைவர். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பாரியின் கட்டுரைகளின் சூட்டை...படிப்பவர்கள் அனைவரும் தங்கள் நெஞ்சில் உணர்ந்தார்கள். கட்டிப்போடும் எழுத்தாளுமை...கலந்து நிற்கும் எள்ளல் நகைச்சுவை, தெளிவான, உறுதியான வாக்கியங்கள் அவனது எழுத்தை, எண்ணத்தை அனைவரையும் விரும்ப வைத்தது.
படித்துக்கொண்டிருந்த செய்தியிலிருந்து பார்வையை அகற்றி..சிந்தித்துக்கொண்டிருந்ததிலிருந்து மனதை அகற்றி...உடலை அதிகம் வளைக்காமல், உட்கார்ந்த நிலையிலேயே தலையை மட்டும் சில டிகிரிகள் திருப்பி, பாரியை அழைத்தாள். தடுப்புக்குப் பின்னாலிருந்து நிமிர்ந்தால், பலருக்கு மூக்குவரை மட்டுமே தெரியும். பாரிக்கு கழுத்துவரைத் தெரிந்தது. முதல் பொத்தானை கழட்டிவிட்டு...பின்னோக்கி ஏற்றிவிட்டக் காலர் தெரிந்தது. அவனைப் பார்த்ததும் ‘கொல்றடா தடியா” மனசுக்குள் கிறங்கிவிட்டு...
“ஏ தடிமாடே...நீ திருந்தவே மாட்டியா?”
“ஏ...வெள்ள வெண்டக்கா....இப்படிக் கேக்கறத நிறுத்தவே மாட்டியா?”
அவள் என்னக் கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, லேசான புன்முறுவலுடன் அவன் அளித்த பதிலைக் கேட்டதும்...
“ஏற்கனவே சவுத் பார்ட்டிகிட்ட முட்டிக்கிட்ட...பாஸ்தான் சமாதானம் செஞ்சு வெச்சாரு. இப்ப இன்னொரு பெரிய இடமா...? பயமா இருக்குப்பா”
“ஒரு பச்சத் தமிழச்சி...அச்சப்படலாமா....கூல்யா...நாம பாக்காத மிரட்டலா...ஆதாரம் இருக்குன்னு தெரிஞ்சா பம்முவாங்க....சமாதானத்துக்கு ஆள் அனுப்புவாங்க...ஆனா அவங்கப் பத்திரிக்கையில மட்டும்...காராசாரமா ஒரு கடிதம் எழுதி, எல்லாத்தையும் மறுப்பாங்க. நாம சொல்றது சேர வேண்டியவங்களுக்கு மட்டும் சேர்ந்தாப் போதும் பூ...ஸோ...எடிட்டருக்கு அனுப்பிட்டேன்...”
‘படவா...அனுப்பிட்டியா...அப்ப எதுக்குடா என்னோட ஒப்பீனியனைக் கேட்டு அனுப்புன...எனக்கு வர்ற கோவத்துக்கு....பேப்பர்ல இருந்திருந்தா அப்படியேக் கிழிச்சிக் கசக்கித் தூக்கிப் போட்டிருப்பேன்...”
இதை சொல்லி முடிப்பதற்குள் எழுந்து நின்றுவிட்டாள்...
“ஆத்தா...ஆத்தா....மலையெறங்கு....என்னோட எல்லா எழுத்தையும் நீதான் மொதல்லப் படிக்கனும்...அதுக்குத்தான் உனக்கு அனுப்பினேன்...நீ படிச்சி முடிச்சி..என்னைத் திரும்பிப் பாத்த ரெண்டு செகண்டுக்கு அப்புறமாத்தான்...அனுப்புனேன்...ஓக்கேவா...அப்பா...வெள்ளை வெண்டைக்காய்க்கு...சிவப்பு கொண்டை மாதிரி மூஞ்செல்லாம் எப்படி செவந்திருச்சி..”
“எங்கருந்துப்பா இந்தமாதிரி டெக்னிக்கெல்லாம் புடிக்கறீங்க....சரி...சரி...எனக்கென்ன..அடிபட்டு ஆஸ்பத்திரியிலக் கெடந்தா...அரைக்கிலோ ஆப்பிள் வாங்கிட்டு வந்துப் பாக்கறேன்...எப்படியோப் போய்த் தொலை...”
பாரியின் மேசைமேலிருந்த தொலைபேசி சிணுங்கியது. திரையில் தோன்றிய எண்ணைப் பார்த்ததும்...பூவிழியைப் பார்த்து....
“பெரியவர்கிட்டருந்துதான்...”
சொல்லிக்கொண்டே ஒலிப்பானை எடுத்துக் காதில் ஒற்றினான்...
“இதோ வரேன் சார்.....பூ...கூப்ட்றாரு...வந்துர்றேன்....”
போகும் வழியில்...
“மாலினி..நீ நாலரையா...பதினெட்டரையா...”
என்று அக்கவுண்டென்ண்டைக் கலாய்த்தான்.
“என்ன சொல்ற நீ...?”
“ஆரோக்யாவா...ஆவினான்னுக் கேட்டேன்....இவ்ளோ போஷாக்கா இருக்கியே...எந்தப் பாலைக் குடிக்கிறே...?”
“கண்ணு வெக்காத பாரி....சம்பத்துக்கு...இப்படி இருந்தாத்தான் புடிக்குமாம். இன்ஃபேக்ட்...என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டதே.....நான் குஷ்பூ மாதிரியே இருக்கேன்னுதானாம்...”
கஷ்டம்டா...தலையில் அடித்துக்கொண்டே சென்று ஆசிரியரின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“சார் அந்தக் கட்டுரை...”
“அது இருக்கட்டும்....ஒரு முக்கியமான ஸ்கூப் கெடைச்சிருக்கு, போட்டோகிராபர் வேல்முருகனைக் கூப்ட்டுக்கோ..நாளைக்கே திருப்பத்தூர் கிளம்பு. இந்தா இந்த ஃபைல்ல எல்லா விஷயமும் இருக்கு.”
தொடரும்....
Bookmarks