அநேகமாக அது 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாக இருக்கக்கூடும். பெங்களூரில் வெப்பம் லேசாக ஆரம்பித்து, குல்மோஹர் பூக்கள் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் வளாகத்தில் பூக்க ஆரம்பித்திருந்தன. என்னுடைய பட்டயப்படிப்பு பிரிவில் நான் ஒருத்தி மட்டுமே அந்த பெண்கள் விடுதியில் தங்கி இருந்தேன். மற்றவர்கள் பல்வேறு அறிவியல் துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன். அதற்காக அமெரிக்காவில் இருக்கும் சில பல்கலைக்கழகங்கள் படிப்பதற்கு உதவித்தொகையும் அளிப்பதாக தெரிவித்திருந்தன. அந்த நேரத்தில் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வந்தது இல்லை.
ஒரு நாள் எனது அறையில் இருந்து விரிவுரை அரங்க கட்டடத்திற்கு சென்ற போது, அறிவிப்புப்பலகையில் ஒரு விளம்பரத்தைப்பார்த்தேன். வேலைக்கு ஆட்கள் தேவை போன்றதொரு வழக்கமான விளம்பரத்தை பிரபல நிறுவனமான டெல்கோ (இப்போது டாட்டா மோட்டார்ஸ்) வெளியிட்டு இருந்தது. அந்நிறுவனத்திற்கு நல்ல கல்வி அறிவுடன் கூடிய புதிய, திறமையான, நன்கு வேலைபார்க்கக்கூடியவர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் இருந்தது.
விளம்பரத்தின் அடியில் சிறியதாக ஒரு வரி : "பெண்கள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை".
அதைப்படித்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக, பெண் என்பதற்காக பாலின் அடிப்படையில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்.
எனக்கு அந்த வேலையில் சேர வேன்டும் என்ற ஆர்வம் இல்லை என்றாலும் கூட அதை ஒரு சவாலாக கருதினேன். படிப்பில் என்னுடன் படித்த பல ஆண்களைக்காட்டிலும் நான் மிகவும் சிறப்பாக தேர்ச்சி அடைந்திருந்தேன். உண்மை வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி அறிவு மட்டும் போதுமானதல்ல என்பதைக்குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாதிருந்தது.
அந்த விளம்பரத்தைப்படித்து விட்டு அறைக்கு திரும்பிய நான் குமுறிக்கொண்டிருந்தேன். அவ்விளம்பரத்தால் ஏற்படும் அநீதியைக் குறித்து டெல்கோவின் தலைமை நிர்வாகத்திற்கு தெரிவிப்பதென முடிவெடுத்தேன். ஒரு அஞ்சலட்டையை எடுத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஒரு சிறு தடங்கல் : டெல்கோ நிர்வாகத்தை கையில் வைத்திருப்பவர் யார் என்று எனக்கு தெரியாது. டாட்டாக்களில் யாராவது ஒருவராக இருப்பர் என்று நினைத்தேன். ஜே.ஆர்.டி. டாடா அவர்கள் டாடா குழுமத்தின் தலைவர் என்பதை நான் அறிந்திருந்தேன்; அவரது புகைப்படங்களையும் செய்தித்தாள்களில் நான் பார்த்திருக்கிறேன் (உண்மையில் அந்த நேரத்தில் சுமந்த் மூல்ககர் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார்). அஞ்சலட்டையின் முகவரியில் டாடாவின் பெயரைக்குறிப்பிட்டு விட்டு கடிதத்தை எழுதத்துவங்கினேன். அந்த அஞ்சலட்டையில் என்ன எழுதினேன் என்பது இப்போதும் தெளிவாக நினைவில் இருக்கிறது.
...... தொடரும்.
Bookmarks