முகமூடிப் பட்டங்கள்...............
ஆடி, ஓடி விளையாடி
விழுந்து, அடிபட்ட காயங்களில்
வீட்டின் நினைவுகள்
பச்சை குத்தபட்டிருக்கிறது.
கூடி நின்று கும்மாளமிட்ட
கூடத்தில்
இன்று வியாபாரக் கூடத்தின்
அலுவலகம்.
வீடு, மனை விற்று
விலைக்கு வாங்கிய கல்வியை
விருப்பம் போல விற்றுப் பிழைக்க
வழியில்லை.
அலைந்து, திரிந்து, ஓய்ந்து
படித்த பிள்ளை முகமூடியை
அலமாரியினுள் மூடி வைத்துவிட்டு
நானும் தொழிலில் இறங்கினேன்.
வீடு, மனை விற்றுப் பிழைக்கும்
இன்றைய தொழிலுக்கு
கல்வி தேவையில்லை.
பொய்கள் பலபேசி
கூட்டிக் குறைத்து
வியாபாரம் பேசி
முடிக்கும் பொழுது
ஒரு அப்பாவி தகப்பனிடம்
சொல்லமுடிவதில்லை
'வீடுமனை விற்று
முகமூடி வாங்கி மாட்டாதே
உன் மகனின் மூஞ்சியில்'.
தரகுக் கூலியில்
நூறுரூபாயை அதிகம் திணித்த
அப்பாவி அப்பன் சொன்னான் -
வச்சுக்க, படித்த பிள்ளை ஆயிற்றே!
நான் விட்டாலும்
முகமூடிகள் என்னை விடுவதில்லை....
Bookmarks