தமிழே வாழி!
அன்னை மொழியே! அறமுணர்த்தும்
..........அறிவே, உணர்வே அரும்பண்பே!
முன்னைப் பழமைப் பெருமையுறை
..........முதல்தாய் மொழியே, செந்தமிழே!
பின்னைத் தமிழர் பேதைமையால்
..........பெருமை குலைந்த பேரழகே!
உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
..........உரைத்தார் நீசெம் மொழியென்றே!
ஒப்பில் கழக இலக்கியமும்
..........உலகிற் சிறந்த முப்பாலும்
துப்பில் திகட்டா பாவியங்கள்
..........சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!
தப்புத் திருத்தித் தருங்கம்பன்
..........தகைசால் பாவும் பெருங்கதையும்
செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்
..........திருவாந் தமிழே வாழியவே!
Bookmarks