அவள் அப்படித்தான்!!! புதிய தொடர்கதை!!!
1. புது மானேஜரின் வரவு!!!!
அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது, இன்னிக்கு புது மானேஜர் ஒருத்தர் பாம்பே பிராஞ்ச்லேயிருந்து டிரான்ஃபராகி சென்னைக்கு வருகிறார். அவரை எப்படியாவது தாஜா பண்ணிக்கொள்ள வேண்டும் என்று சில பெரிசுகளும், சில சிறுசுகளும் பிளான் பண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், பாம்பே பிராஞ்சில் வேலை செய்யும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஃபோன் போட்டு பேசி அவர் எப்படிப் பட்டவர், அவருக்கு என்ன பிடிக்கும், வேலை வாங்குவதில் எப்படி, கீழே வேலை செய்பவர்களை எப்படி நடத்துவார் என்று பல விஷயங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு புது மானேஜரை எப்படி கவுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆஃபீஸ் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் பாதி ஸ்டாஃப்க்குமேல் கால் மணியிலிருந்து அரைமணி நேரம் வரை லேட்டாக வரக்கூடியவர்கள், ஆனால் அன்று அனைவருமே ஒன்பது மணிக்குள் ஆஃபீஸில் ஆஜராகிவிட்டார்கள் எங்கே புது மானேஜர் இவர்களுக்கு முன்பாகவே வந்து முதல் நாளே பிரச்சனையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பில். பியூன் சேகருக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என்னங்க சார் இன்னிக்கு எல்லோருமே ஆஃபீஸ் டயத்துக்கு முன்னாடியே வந்துட்டாங்க என்று பக்கத்தில் இருந்த ஷேஷாத்திரையைக் கேட்டான். அது ஒன்னுமில்லையப்பா, இந்த புது மானேஜர் வர்றாரு இல்லே இன்னிக்கு, அதனாலேதான் இன்னிக்கு மட்டும் எல்லோரும் டயத்துக்கு வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றார்.
ஷேஷாத்திரி இந்த ஆஃபீஸின் அக்கெளண்டண்ட், மிகவும் நாணயமானவர், ஆஃபீஸுக்கு தினமும் முதலில் வருபவரும் அவரே. அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வார், யாரையும் ஒரு வார்த்தை கடிந்து பேசமாட்டார். தவறு செய்தவர்களிடமும் மிகவும் மரியாதையோடு பேசி எடுத்துச் சொல்வார். அதனாலே, தவறு செய்பவர்கள் இனிமேல் தவறே செய்யக்கூடாது என்று நினைக்கும்படி இருக்கும் அவருடைய பேச்சு. ஆஃபீஸில் அவருக்கென்று ஒரு தனி மரியாதை என்றைக்கும் இருக்கும்.
ஸ்ரீநிவாசன் இந்த ஆஃபீஸின் சேல்ஸ் மானேஜர், சரியான உதார் பேர்வழி, சேல்ஸ் ஆட்களுக்கே இருக்கும் உதார் இவரிடமும் இருந்ததால் இவருடைய பேச்சை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்காமல் இருப்பதா என்று இங்கேயிருந்த அனைத்து மானேஜர்களுக்கும் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது இதுவரை. ஆனால் சில சமயங்களில் சொன்னதைவிட அதிகமாக செய்துவிடுவார், பல சமயங்களில் சொன்னதில் ஒரு பகுதிகூட சேல்ஸ் கொண்டுவராமல் சொதப்பி விடுவார். மானேஜர்கள் என்ன சேல்ஸ் என்று ஹெட் ஆஃபீஸுக்குச் முன்னறே சொல்லமுடியாமல் தடவுவார்கள். அதனாலேயே ஸ்ரீநிவாசனுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது இந்த ஆஃபீஸில். ஆனால் அவருக்கு ஹெட் ஆஃபீஸுல் பயங்கர செல்வாக்கு இருக்கிறது, அது தவிற தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கஸ்டமர்களும் இவருக்கு மிகவும் பரிச்சியம். எங்கே நாம் ஏதாவது சொல்லி இவர் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு கம்பெனியில் சேர்ந்து நமக்கு இருக்கும் கஸ்டமர்களையும் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று பயம் வேறு இருந்தது.
இதற்கு முன்பு இருந்த மானேஜர் பார்த்திபனுக்கும் இதே பிரச்சனை இருந்தது. அவர் இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் இருந்த போது, அடுத்த வாரம் ரிட்டையர் ஆகப்போகும் வெங்கடாசலம் தயங்கியபடியே இவரோட ரூமிற்கு வந்து, தான் அடுத்த வாரம் ரிடையர் ஆவதால் குடும்பத்தின் பாரத்தைக் குறைக்க தன் மகள் நித்யாவிற்கு ஒரு வேலை போட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நித்யா இந்த வருடம் எம்பிஏ மார்கடிங்க் முடித்துவிட்டு ஒரு சிறிய கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவாக இருப்பதாகவும், ஆனால் நம்ம கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ளவும், இதுதான் சான்ஸ் என்று நினைத்து பார்த்திபனும் இங்கேயே சேல்ஸில் ஸ்ரீநிவாசனுக்கு அஸிஸ்டெண்டாக போட்டுவிட்டார்.
மேலும் ஸ்ரீநிவாசனைக் கூப்பிட்டு, நித்யாவிற்கு வேலைக் கொடுத்தது வெங்கடாசலம் இதுவரை நம் கம்பெனிக்கு உழைத்ததற்கான ஒரு நன்றிக்கடனே, ஆகையால் நீங்கதான் நித்யாவிற்கு எல்லா உதவிகளும் செய்யவேண்டும் என்றார். வெங்கடாசலம் தமக்கு பல விதங்களில் உதவி இருப்பதால் ஸ்ரீநிவாசனும் நித்யாவிற்கு உதவுவதாக சொல்லி அதன்படியே நிறைய உதவிகளும் நித்யாவிற்கு செய்தார்.
நித்யா இப்போது ஒரு சில டிஸ்டிரிக்ட்களை தானாகவே கவனிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள். அவள் கவனிக்கும் டிஸ்டிரிக்ட்களில் வியாபாரம் மாதா மாதம் அதிகமாவதைக் கண்டு பார்த்திபனுக்கும் சந்தோஷமாக இருந்தது. இன்னும் அதிக டிஸ்டிரிக்ட்களை நித்யாவின் மேற்பார்வையில் கொண்டு வந்து ஸ்ரீநிவாசனுக்கு ப்ரோமஷன் மாதிரி கொடுத்து அவரை ஆஃபீஸிலிருந்தே சேல்ஸ்களை கவனிக்கும் படி செய்துவிட்டார் பார்த்திபன். இதனால் நித்யாவுக்கு அதிக வேலை இருந்தாலும் அவள் செவ்வனே செய்வதால் பார்த்திபனுக்கு ரொம்பவும் சந்தோஷம். சம்பளமும் அவளுக்கு இப்பொழுது அதிகமாக கொடுத்தார் பார்த்திபன்.
இப்போது இருக்கும் நிலையில் ஸ்ரீநிவாசன் வேலையைவிட்டுப் போனாலும் நித்யாவும் மற்ற சேல்ஸ் ஆளுங்களும் தாமாகவே சேல்ஸை கவனித்துக்கொள்ளமுடியும் என்ற நிலமைக்குக் கொண்டுவந்துவிட்டார் பார்த்திபன்.
இதனால் கம்பெனிக்கு சேல்ஸும் லாபமும் அதிகமானதால் பார்த்திபனை இன்னொரு பிராஞ்சுக்கு ப்ரோமஷன் கொடுத்து டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்.
இப்பொழுது அந்த இடத்திற்குத்தான் புது மானேஜர் வருகிறார். புதிதாக வரும் மானேஜரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் பாம்பேயின் மானேஜராக கம்பெனிக்கு வந்தார். அதற்கு முன் இவர் காம்பிடிஷன் கம்பெனியில் சேல்ஸ் மானேஜராக இருந்தவர். பல சாதனைகளைப் புரிந்தவர் என்ற பேச்சு பரவலாக இருந்தது ஆஃபீஸில். இவர் இங்கே வந்தால் நம் பிராஞ்சில் பிஸினஸ் இன்னும் அதிகமாகும் என்று நினைத்தார் ஷேஷாத்திரி.
ஒன்பதரை மணிக்கு காரை டிரைவர் பார்க் செய்ய அதிலிருந்து இறங்கி வேகமாக உள்ளே வந்தார் கிருஷ்ணமூர்த்தி. பார்க்க மிகவும் இளமையாக இருந்தார், டிப் டாப்பாக கோட் சூட் போட்டுக்கொண்டு ஒரு ஹீரோ மாதிரியே இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. மானேஜருக்கு உரிய அந்த மிடுக்கு அவரிடம் அப்படியே இருந்ததை பலர் கவனித்தார்கள். எதிரே பார்த்த அனைவரையும் ஹலோ சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார். பின்னாலேயே பியூன் உள்ளே போனான். பியூனிடம் ஒரு காப்பி சொல்லிவிட்டு செக்ரெட்டரி ஆஷாவை உள்ளே கூப்பிடச்சொன்னார். பியூனும் சரி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராகச் சென்று ஆஷாவை உள்ளே போகுமாறு சொல்லிவிட்டு காப்பி ரெடிசெய்யப் போனான்.
ஆஷாவும் ஒரு நோட் பேடையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு அவருடைய ரூமுக்குள் போய், குட்மார்னிங் சொன்னாள்.
வாங்க ஆஷா என்று சொல்லிவிட்டு என்னென்ன இன்னிக்கு செய்யனும், தனக்கு ரிப்போர்ட் எப்படி வேண்டும் போன்ற விஷயங்களை அவளிடம் சொல்லி அவளை வெளியே அனுப்பும்போது, ஷேஷாத்திரியை உள்ளே வரும்படி சொல்லச் சொன்னார். ஆஷாவும் வெளியே போய் ஷேஷாத்திரியை உள்ளே போகச் சொன்னாள்.
ஷேஷாத்திரியிடம் என்னென்ன விஷயம் எப்படி இருக்கிறது, பணம் கையிருப்பு எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களைக் கேட்டுவிட்டு அவரிடம் ஸ்ரீநிவாசனை உள்ளே அனுப்புபடி சொன்னார்.
ஸ்ரீநிவாசனும் ஒரு குட்மார்னிங் சொல்லிவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தார். ஸ்ரீநிவாசனிடம் மார்கெட் நிலவரம் எப்படி இருக்கிறது, காம்பெடிஷன் எப்படி இருக்கிறது, யார் யார் பெரிய கஸ்டமர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன, எப்படி சேல்ஸை அதிகரிப்பது போன்ற விஷயங்களைப் பேசிவிட்டு அவரையும் அனுப்பினார்.
பின்னர் தனக்கு முடிக்க வேண்டிய வேலைகளை முதலில் கவனித்தார். அதற்குள் லஞ்ச் வந்துவிட்டது. லஞ்சுக்கு கொண்டு வந்திருந்த ஆப்பிளையும், ஆரஞ்சையும் சாப்பிட்டார். பின்னர் மறுபடியும் பியூனைக் கூப்பிட்டு ஒரு காப்பி கொண்டு வரும்படி சொல்லி அதைக் குடித்துவிட்டு தன் வேலைகளில் மீண்டும் கவனம் செலுத்தினார்.
ஷேஷாத்ரி கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார். சார் மத்த ஸ்டாஃபையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவா என்றார். அதுவும் நல்ல ஐடியாதான் என்றார். சரி சார், நான் ஒவ்வொருத்தரையா உள்ளே அனுப்பவா என்றார். இல்லே, அதெல்லாம் வேண்டாம், நானே வருகிறேன், அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே அவர்களைப் பார்த்துவிடலாம் என்றார் கிருஷ்ணமூர்த்தி. இந்த விஷயம் புதிதாக இருந்தாலும் ஷேஷாத்ரி, சரி சார், அப்படியே செய்யலாம் என்று சொல்லி கதவைத் திறந்து அவர் வெளியே சென்றவுடன் அவர் பின்னால் தானும் வெளியே வந்தார்.
ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கேயிருந்த ஸ்டாஃபை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
அப்படியே சேல்ஸ் செக்ஷனுக்கும் வந்துவிட்டார்கள், அங்கேயிருந்த நித்யாவைக் காட்டி திஸ் ஈஸ் நித்யா, அஸிஸ்டெண்ட் சேல்ஸ் மானேஜர் என்று சொன்னவுடன், அவளும் எழுந்து ஹலோ என்று சொல்லி கையை நீட்டி மானேஜரின் முகத்தைப் பார்த்தாள், அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது, நித்யாவைப் பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கும் தூக்கிவாரிப் போட்டது.
இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டார்கள்.
தொடரும்……
Bookmarks