பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர். அந்த முறை வீட்டின் சில மின் வேலைகளுக்காக சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அதில் இளங்கோ என்ற பையனின் சுறுசுறுப்பையும், வேலையின் தரத்தையும் பார்த்து மிக மகிழ்ந்த பாஸ்கரன் அவனுக்குக் கூடுதலாக, தன்னுடைய பரிசாகப் பணம் தந்தார்.
ஏற்றுக்கொள்ளத் தயங்கியவன்,
"சம்பளத்துக்கு மேல வாங்கறது தப்பு சார். வேண்டாம் சார்"
என்றவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
"பரவாயில்லைப்பா...வெச்சுக்கோ...நான் சந்தோஷமா தர்றதுதானே...உன்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாங்கிக்க.."
"இல்ல வேண்டாம் சார். ஆனா எனக்கு ஒரு உதவி செய்வீங்களா..."
தயங்கிக்கொண்டே கேட்டவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தார்.
"சார் எங்க முதலாளி நல்லவர்தான். ஆனா சம்பளம் 1500 ரூபாதான் கிடைக்குது. அப்பாக்கு முடியாம இருக்குற இந்த நிலைமையில..இந்தப் பணம் பத்த மாட்டேங்குது. உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது துபாய்க் கம்பெனியில எனக்கு ஒரு விசா வாங்கிக் கொடுக்க முடியுமா சார். எங்களுக்கு அரை ஏக்கர் நிலம் இருக்கு, அதை அடமானம் வெச்சு, ஒரு லட்சரூபா குடுக்குறேன்"
என்ன சொல்லப் போகிறாரென்று ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்தவனை நோக்கி,
"இளங்கோ....உனக்கு விசா வாங்கித் தர்றதைப் பத்தி பிரச்சனை இல்லப்பா. எனக்குப் பணம் கூட வேண்டாம். வெறும் டிக்கெட் காசு மட்டும் செலவு பண்ணா போதும். ஆனா....ஏன் இருக்கிற நிலத்தை அடமானம் வெச்சு, இவ்ளோ பணத்தைக் கட்டி வெளிநாடு போகனுன்னு நினைக்கிற? அங்க நீ எதிர்பாக்குற மாதிரி நிறைய சம்பளம் கிடைக்காது. அதுமட்டுமில்ல...ஏன் எப்பவும் தொழிலாளியாவே இருக்க நினைக்கிறே? நீயும் முதலாளி ஆகலாமே"
"என்ன சார் சொல்றீங்க நான் எப்படி.......?"
"இப்ப உனக்கு முதலாளியா இருக்கிறவர், ஆரம்பத்துல என்னவா இருந்தார்?"
"அவரும் என்னை மாதிரியே இன்னொருத்தர் கிட்ட வேலைதான் செஞ்சிக்கிட்டிருந்தார் சார்."
"அவர் இப்ப முதலாளி ஆகலையா? அதே மாதிரி உன்னாலயும் முடியும். நீ விசாவுக்குத் தர்றதா சொன்ன பணத்தை வெச்சு இதே வேலையை நீ சொந்தமா எடுத்து செய். உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே, உன்னோட கடின உழைப்பும், வேலையில நீ காட்டுற அக்கறையும், வேலையோட தரமும்தான். அதுதான் உன்கிட்ட இருக்கிற பெரிய மூலதனம், இதை முதலாப் போட்டு தைரியமா தனியாத் தொழில் தொடங்கு....அப்புறம் நீயும் ஒரு முதலாளிதான்."
யோசனையோடு பாஸ்கரனைப் பார்த்த இளங்கோ....உள்ளுக்குள் ஒரு உந்துசக்தி கிடைத்ததைப் போல உற்சாகமாய்...
"ரொம்ப நன்றி சார். நான் முயற்சி பண்றேன்"
சொல்லிவிட்டுப் போய்விட்டான். பாஸ்கரனும்...சில நாட்களில் கிளம்பிவிட்டார். அடுத்த முறை ஊருக்கு வந்தவர், போர்வெல்லின் மோட்டார் இயங்கவில்லை என்று மீண்டும் இளங்கோவை அவனுடைய அலைபேசியில் அழைத்தார்.
சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஒரு பையனுடன் வந்தான். தோரணையே மாறி இருந்தது. வந்தவன் நேராக வந்து பாஸ்கரனின் கால்களில் விழுந்தான்.
"அடடா...எந்திரிப்பா. நல்லா இரு...என்னது இது"
"சார் நீங்க சொன்ன மாதிரியே அந்த நிலத்தை வெச்சு தனியா தொழில் தொடங்கினேன். இந்த ஒரு வருஷத்துல மோட்டார் ரீவைன்டிங் கடை ஒண்ணும், எலக்ட்ரிகல் சாமான் விக்குற கடை ஒண்ணும் இப்ப எனக்குச் சொந்தமா இருக்கு. ஏழெட்டுப் பேர் என் கிட்ட வேலை செய்யறாங்க. சம்பளம் வாங்கிக் கிட்டிருந்தவனை...சம்பளம் கொடுக்கிறவனா மாத்தினது நீங்கதான் சார். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.."
என மீண்டும் காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி, பெருமை பொங்க அவனைப் பார்த்துக்கொண்டே..
"நான் வெறும் திரியைத் தூண்டுற வேலையை மட்டும்தான் செஞ்சேன். ஆனா பிரகாசமா எரியக் காரணம் உன்னோட திறமையும், கடின உழைப்பும்தான். நான் என்னதான் லட்ச லட்சமா சம்பாதிச்சாலும்....இன்னும் ஒரு தொழிலாளிதான். ஆனா நீ இப்ப ஒரு முதலாளி. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு"
எனச் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்து சந்தோஷமாய் சல்யூட் அடித்தார்.
Bookmarks