மன்னித்தருள்வாயா தேவி...?
செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!
செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!
மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?
திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!
வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!
இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!
கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?
விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?
தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!
தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!
Bookmarks