எங்கள் நாட்டில்........
வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
வல்லரசு வல்லூறுகள்
வட்டமிட்டிருக்குமா.....
மக்களைக் கொல்ல
திட்டமிட்டிருக்குமா...?
எரி எண்ணை இருப்பது
எங்கள் குற்றமா?
எண்ணைவள நாட்டில்
என்னைப் பிறக்க வைத்த இறைவா...
எண்ணையைக் கண்டவர்கள்
என்னையும் ஏன் கண்டார்கள்...அவர்களின் பணப்பசிக்கு
என்னை ஏன் உண்டார்கள்....?
எண்ணைக் குழாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்
ஏன் எங்கள் ரத்தக்குழாய்களை அறுத்துக் கொல்கிறீர்கள்?
வீம்பாய் உள்நுழைந்து
விளைநிலங்களையெல்லாம், பிணங்கள்
விழும் நிலங்களாய் ஏன் மாற்றினீர்கள்?
உருவாக்கிய துப்பாக்கிகள்
துருவேறாமல் இருக்கவா
உபயோகிக்கிறீர்கள். எங்கள்
உயிரைப் பறிக்க.....?
இன்று நீங்கள் கொன்று குவித்த
எங்கள் சடலங்களும்
மண்ணோடு மக்கி
எண்ணையாகும் எதிர்காலத்தில்
அன்றும் வருவீர்களா ஆக்ரமிக்க?
குண்டுவெடிப்பு நிகழ்கிறது நித்தம்
நிலமெல்லாம் எம் மக்களின் ரத்தம்....
ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
மக்கள் வாழ பயமிருக்காது!
Bookmarks