முயல், ஆமை கதை இப்போது நிறுவனங்களில் நான்கு விதமாகச் சொல்லப்படுகிறது. முதலாவது நமக்கு ஏற்கெனவே தெரிந்த கதை. இதில் வேகமாக ஓடி வந்த முயல், ஆமை
மிகவும் பின்னாடி வருவதைக் கண்டு, ஒரு தூக்கம் போடவே, ஆமை மெதுவாக வந்தாலும், தொடர்ச்சியாக நடந்து வந்து வெற்றியடைந்து விட்டது. பொறுமையாகவும் நிதானமாகவும்
சென்று ஆமை இதில் வென்று விட்டது.
ஆனால் இந்த அவசர உலகத்தில், வேகமாகவும் வரவேண்டும்; பந்தயத்தையும் வெல்ல வேண்டும். எனவே இரண்டாவது கதையில் முயலும் ஆமையும் போட்டியில் கலந்து
கொள்கின்றன. ஆனால் இம்முறை முயல் விரைவாகயும், தொடர்ச்சியாகவும் ஓடி ஆமையை எளிதாக வெல்கிறது.
மூன்றாவது கதையில், வெற்றிக் களிப்பில் நீந்திய முயல், மறுபடியும் ஆமையை வெறுப்பேற்ற அதை ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள அழைக்கிறது. ஆமை சமயோசிதமாக
ஒரு நிபந்தனையுடன் போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறது. 'ஓட்டத்துக்கான பாதையை நானே தேர்வு செய்வேன்' என்கிறது ஆமை. 'எந்தப் பாதையாய் இருந்தாலென்ன?
கண்டிப்பாய் நாம் தான் வெல்வோம்' என்ற மமதையுடன் சிறிது கூட யோசிக்காமல் சரி என்று முயல் சம்மதம் தெரிவிக்கிறது. போட்டி துவங்கிய பிறகு, வழியில் ஆறு ஒன்று குறுக்கிட,
முயல் ஆற்றைக் கடக்க முடியாமல் தோல்வியைத் தழுவுகிறது.
நான்காவது கதையில் முயலும் ஆமையும் தம் பலம், பலவீனம் இரண்டையும் அலசிப்பார்த்து கூட்டாகச் செயல்படுகின்றன. நிலத்தில் முயல் ஆமையை தூக்கிக் கொண்டு வேகமாக
ஓட, நீரில் ஆமை முயலைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு பயணம் செய்ய, மிகவும் குறைந்த நேரத்தில் இரண்டுமே தம் இலக்கை எட்டுகின்றன.
ஒவ்வொருவரும் தம் பலம், பலவீனம் இரண்டையும் அலசி ஆராய்ந்து, குழுவில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் செயல்பட்டால், விரைவாகவும்
எளிதாகவும் தம் இலக்கை எட்ட முடியும் என்பதற்கு இந்த கதையைச் சொல்கிறார்கள். தற்போது நிறுவனங்கள் இந்தக்கதையையே தம் பணியாளர்களுக்குச் சிபாரிசு செய்கின்றன.
இந்தக்கதைகளை எங்கள் அலுவலகத்திற்கான இதழில் (in-house magazine) படித்தேன். எழுதியவர் யார் என்று தெரியாது.
Bookmarks