மெல்லிசையழிந்த காலம்
உனக்கும் எனக்குமென்றிருந்த
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்
கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
உன் பற்றி என்னிலும்
என் பற்றி உன்னிலுமாக
நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
ஆழுறக்கம் தழுவட்டுமென
ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# உயிர்மை
# திண்ணை
Bookmarks