பன்றிக் காய்ச்சல் (swine flu)
இன்றைய உலக சந்தையில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்த ஓன்று இந்த பன்றிக் காய்ச்சல்.ஏன் உலக சந்தை என்று சொல்கிறேன் என்றால் பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் முதலிடும் இடங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டதால்.ஆராய்ச்சி,மருந்தாக்கம்,தடுப்பூசி தயாரிப்பு என்று பலவழிகளில் பொருளீட்டக் கூடிய துறைகளில் இதுவும் ஒன்று.
பலரின் கேள்வி,"அதென்ன பன்றிக் காய்ச்சல்?,பன்றிக்கு வருவதாலா? அல்லது பன்றியால் பரவுவதாலா? என்று. ஆம் இரண்டும் உண்மை.இது வைரஸ் எனும் நுண்ணுயிரியால் விளைவிக்கப்படும் நோய்.இந்த வைரஸ் சாதாரண இன்புளுவென்சா வைரஸ்,பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ,மற்றும் பன்றிகளிடையே பரவிவந்த பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஆகிய மூன்றுக்கும் பிறந்த குழந்தை.ஏனென்றால் இதில் பரம்பரைப் பொருளை காவும் எட்டு நிறமூர்த்தங்கள் (RNA)உள்ளன.அவற்றில் 5 சாதாரண இன்புளுவென்சா வைரசினதும் 2 பறவைக் காச்சலை உண்டுபண்ணும் வைரசினதும்,மற்றயது பன்றிக் காய்ச்சலை விளைவிக்கும் வைரசினதும் ஆகும்.எனவே இந்த வைரசில் இம்மூன்றுக்குமுரிய குணாதிசயங்கள் இருக்கும்.ஆக மொத்தத்தில் மனிதனை புதிய கோணத்தில் தாக்க வந்த விகாரி.
இவ்வாறு உருவெடுத்த புதிய நோய் காய்ச்சல் 38 பாகை செல்சியசிற்கு மேல்,மூக்கு சிந்தல்,தொண்டை,தலை,கழுத்து,தசை வலி,பெலயீனம் அல்லது உடல்சோர்வு,இருமல்,சிலருக்கு வாந்தி,வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளை காண்பிக்கிறது.இவ் அறிகுறிகளும் ஆளுக்காள் வேறுபடுகிறது.உதாரணமாக,சிலருக்கு மிக வீரியமாகவும் இன்னும் சிலருக்கு காய்ச்சல் கூட இல்லாமலும் இந்நோய் வருகிறது.
எனவே இக்கண்ணுக்கு தெரியாத சாத்தானிடமிருந்து தப்புவதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் சுலபம்.அவையாவன;ஆகக் குறைந்தது அடிப்படை சுகாதாரம் பேணல்,அதாவது,பொதுசன போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்திய பின்,வேலைக்கு, பாடசாலைக்கு, மற்றும் வெளி இடங்களுக்கு சென்று வந்த பின் கை,கால்,முகத்தை ஏதாவது சவர்க்காரம் கொண்டு கழுவுதல்.கைகளால் மூடியவண்ணம் தும்முதல் அல்லது இருமுதல்.சன நெருக்கடியான இடங்களை தவிர்த்தல்.என சொல்லிக்கொண்டே போகலாம்.மற்றும் இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டன.ஆகவே இவ்வகையான வருமுன் காக்கும் நடைமுறைகளை பின்பற்றலாம்.
நோய் வந்தபின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறுதல் சாலச்சிறந்தது.அத்துடன் ஒரு வாரமளவிற்கு (அண்ணளவாக) ஓய்வெடுத்தல் நோயாளிக்கும் நன்மை ,பரவாமல் தடுப்பதால் சமூகத்துக்கும் நன்மை.
இந்நோய் குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்களாக நீரிழிவு நோயாளிகள் ,ஆஸ்துமா நோயாளிகள்,இதய நோயாளிகள்,வயோதிபர்,குழந்தைகள்,கர்ப்பிணிப் பெண்கள்,மற்றும் புகை பிடிப்போர் கருதப்படுகிறார்கள்.ஏனெனில் இந்த வைரஸ் ஆரம்பநிலைகளில் மேல் சுவாசக் குழாயையும்,முற்றிய நிலைகளில் அல்லது நாள்போக்கில் கிழுள்ள சுவாச சிறு குழாய்களையும் தாக்கி,அதன் மேலணி இழயத்தை அழிக்கிறது.இதனால் சுவாச சிறு குழாய்கள் வீங்கி சீதப்படையால் நிரப்பப்படுவதால் சிறு குழாய் விட்டம் குறைந்து சுவாசம் தடைப்படுகிறது.இதனால் உயிர் வாயு பற்றாக்குறை ஏற்பட்டு உதடு,முகம்,உடல் நீலமாதலுடன் மூச்சு திணறல் ஏற்படலாம்.இதுவரை பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும்பாலும் மூச்சுத் திணறல் உடனேயே நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
"எனவே சுத்தம் சுகந்தரும்"என்ற கூற்றுக்கமைய நாமனைவரும் சுயநலவாதிகளாக சுய சுதாதாரம் பேணினால் மறைமுகமாக பொதுநலவாதிகள் ஆகின்றோம்.
Bookmarks