தினம் தினம் தீபாவளி!!!
காலையில் எழுந்தவுடன் ரகு வெடிச்சோடி இருக்கும் தெருவைப் பார்த்தான். ஒரு ஈ காக்கைகூட அங்கே இருக்கவில்லை.
பாரிமுனை, சென்னையின் டவுண்டன், மிகவும் பரபரப்பு மிக்க பகுதி, கோடி கோடியாக வர்த்தகம் நடக்கும் இடம். ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் நடமாடும் இடம். காலையிலும் மாலையிலும் நடக்கக்கூட முடியாமல் மக்கள் கூட்டம் அலைமோதும் இடம். அன்று மிகவும் வெறிச்சோடிக்கிடந்தது.
ஒரு டீ குடிக்கவேண்டும் என்று தோன்றியது, பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தான், வெறும் 60 காசுகளே பையில் இருந்தது. இந்த பணத்தில் ஒரு டீ கூட வாங்கமுடியாது, என்ன செய்வது என்று யோசிக்கலானான். அப்பொழுதுதான் தான் வைத்திருந்த 25 ரூபாயை நேற்று பக்கிரியின் அம்மாவிற்கு சாப்பிடக் கொடித்தான். பக்கிரி இவனுடைய மிகவும் நெருங்கிய நண்பன், போன வருடம் தெருவை கிராஸ் செய்யும்பொழுது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தான், அவனுடைய தூரதிர்ஷ்டம் எதிரில் வந்த பஸ் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு அந்த இடத்திலேயே இறந்தான். அன்றிலிருந்து பக்கியின் வயதான அம்மா இவனுடைய அம்மாவானாள். அவளுடைய சாப்பாடு செலவிற்கு கையில் எவ்வளவு இருக்கிறதோ அத்தனையையும் கொடுத்துவிடுவான். நேற்றும் தன் கையில் இருந்ததை கொடுத்துவிட்டான்.
இன்று கையில் பணமில்லாமலிருந்தால் என்ன நாளை நிச்சயம் தனக்கு கிடைக்கும் என்று நினைப்பவன்.
மறுபடியும் கை தானாகவே பையில் நுழைந்தது, ஒரு ஐம்பது பைசாவும் ஒரு பத்து பைசாவும் மறுபடியும் கையில் தட்டியது. இதை வைத்து எப்படி டீ சாப்பிடுவது என்று யோசிக்கலானான்.
நேற்று பெய்த மழையில் அங்கங்கே கொஞ்சம் தண்ணீர் தேங்கி சிறிய குட்டை போலிலிருந்தது. தன் கையில் இருக்கும் ஒரு துணியை எடுத்து அங்கே இருக்கும் அந்த குட்டையில் தண்ணீரை நனைத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டான். இன்னும் இரண்டு நாட்களுக்கு இதுதான் ரகுவிற்கு உறவு.
ஆம் இன்று தீபாவளி. ரகு பாரிமுனையில் பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவும் ஒரு பிச்சைக்காரன். பக்கிரி இவனுடன் போன வருடம்வரை பிச்சை எடுத்தவன்.
தூரத்தில் லவுட்ஸ்பிக்கரில் “தினம் தினம் தீபாவளி” என்ற பாடல் வந்துகொண்டிருந்தது.
மனதிற்குள் சிரித்துக்கொண்டு தினம் தினம் ஒரு போராட்டம் என்று அவனும் முனுமுனுத்தான்.
Bookmarks