ஐதராபாத் சிறுவன் நிஸ்சல் ஒரு நிமிடத்தில் 132 எண்களை மனப்பாடம் செய்து சாதனை
கின்னஸ் சாதனை முறியடிப்பு
ஐதராபாத், செப்.15: ஆந்திராவை சேர்ந்த சிறுவன் நிஸ்சல் நாராயணம், ஒரே நிமிடத்தில் 132 எண்களை மனப்பாடம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் நிஸ்சல் நாராயணம். கணிதத்திலும், நினைவுத் திறனிலும் புலி. இதற்கு முன்பு, ஒரே நிமிடங்களில் 225 பொருட்களை நினைவில் வைத்தது உட்பட பல்வேறு உலக சாதனைகள் படைத்துள்ளான்.
மனிதனின் மூளை மற்றும் அறிவுத் திறன் பற்றி Ôநேஷனல் ஜியாகிராபிக் சேனல்Õ நடத்திய Ôமை பிர்லியன்ட் பிரைன்Õ என்ற நிகழ்ச்சிக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பேரில் நிஸ்சலும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒரு நிமிடத்தில் அதிக எண்களை நினைவில் வைக்கும் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நிஸ்சல் நடத்தினான். ஆந்திர முதல்வர் ரோசய்யா, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுப்பா ராவ், காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. கான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆந்திர உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமகிருஷ்ணன், நிகழ்ச்சிக்கு நீதிபதியாக செயல்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரே நிமிடத்தில் 132 எண்களை மனப்பாடம் செய்து நிஸ்சல் அசத்தினான். இதற்கு முன்பு இந்தோனேஷியாவை சேர்ந்த டொமினிக் பி என்பவர் ஒரு நிமிடத்தில் 76 எண்களை மனப்பாடம் செய்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. நிஸ்சலின் சாதனையை கின்னஸ் சாதனை அமைப்புக்கு அனுப்பி, அங்கீகாரம் பெற உள்ளதாக நிஸ்சலின் சகோதரர் நிகில் கூறினார். நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிஸ்சல், இந்த சாதனையை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு அர்ப்பணிப்பதாக கூறினான்.
நன்றி-தினகரன்
Bookmarks