[quote]
எங்கோ என்றோ படித்த/ கேட்ட கருத்துகளை வைத்து
சொற்சிலம்பம் ஆடும் என் ஆர்வக்கிறுக்கல்களை
முதல் வகுப்பு படிக்கும் மகன் எழுத்தாய் நினைத்து
உயர்த்திப்பேசும் உண்மை நண்பர்களே...
நீங்கள் படிக்க நான் படைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
இந்த தருணத்தில் உங்களையும் என்னையும் இணைத்த
தமிழ்த்தளம் தந்த தலைவனுக்கும்
இனிய நண்பன் கான்கிரீஷக்கு நான் எழுதிய பதில் இது..
இணைய நண்பர்கள் எல்லாருக்கும்தான்...
சொந்த சரக்கு என்னிடம் இல்லை.
சினிமாப் பாட்டு, அப்படி , இப்படி என ஒப்பேற்றி
உங்களிடம் கைதட்டல் வாங்க முயற்சிக்கும்
ஆர்வம் என் படைப்புகளைப் பார்த்தாலே புரியும்.
இப்போதும் எங்கோ , என்றோ படித்த ஒரு நிகழ்வைக் கதை வடிவில்
சமர்ப்பிக்கிறேன்.
அத்திக்காய் பாட்டு போல அடிக்கடி எழுது என்றார் ஆத்மநண்பர்.
அத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்தான்...
ஆசை யாரை விட்டது?
அடுத்த கட்டமாய் சிறுகதை! அதில் என் இரண்டாவது முயற்சி..
யாருக்காக அழுதேன்?
(என்றும் ஊக்கும் நண்பருக்கே அர்ப்பணம்.)
அப்போ நான் ஆறாம் வகுப்பு டீச்சர்.
விராலிமலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில்.
நடுத்தரவர்க்கம், அதற்கும் மேல் என்ற வகை குடும்பத்துப்
பிள்ளைகள்தான் அங்கே அதிகம் படித்தார்கள்.
என் கிளாசில் இருக்கும் 52 பேருமே எனக்குப் பிடிச்சவங்கதான்... அதிலும் இந்த
மகிழ்மாறன் இருக்கானே... வால் நட்சத்திரம்.. அவன் லட்சத்துல ஒருத்தன். அப்படி
நேர்த்தியா உடுத்திட்டு வருவான்... காலையில் பார்த்த மாதிரியே சாயங்காலமும்
அவன் முகமும் உடுப்பும் மெருகு குலையாம இருக்கும்.. இத்தனைக்கும் இண்ட்டர்வல்,
மதிய வேளைகளில் அங்குமிங்கும் ஓடி அலைந்து திரிவான்.. நானே பார்த்திருக்கேன்.
இவனுக்கு வேர்க்கவே வேர்க்காதோன்னுகூட ஆச்சரியப்படுவேன். ஆடி ஓடினாலும்
ஆடை கசங்காதது - சிலருக்கு வாய்ச்ச வரம்.. எத்தனைதான் வெளியில அலைஞ்சிட்டு
வந்தாலும் சிலருக்கு பாதம் அழுக்காகாம தாமரை இதழ் போல இருக்குமே அப்படி!
படிப்பிலும் கெட்டிக்காரன் மகிழ்மாறன். முதல் ரெண்டு ரேங்க்குக்குள்ள எப்படியும்
வந்துடுவான். ஆனா வாய்தான் காதுவரைக்கும் இருந்தது அவனுக்கு. பேச்சும்
சாதுர்யமா, சமயோசிதமா இருக்கறதால, அவன் செய்ற குறும்புகளையும் ரசிக்கும்படி
ஆக்கிடுவான் படவா ராஸ்கல்.
எப்பவும் புன்னகை... வெடுக் பதில்கள்... ஆட்டம்..பாட்டம்..கெட்டிக்காரத்தனம்...
தோற்றத்தில் நறுவிசு.. இதுதான் மகிழ்மாறன்.
"மானிடமே, வாழ்வைக் கொண்டாடுங்கள்" என்ற தேவசேதியைச் சுமந்துவந்த
இளந்தூதன் மகிழ்மாறன்.
ஆனா, ஆறாங்கிளாசில் வருடம் முழுதுமே அவனுக்கும் எனக்கும் தீராக்கணக்கு ஒண்ணு
தொடர்ந்து இருந்துக்கிட்டே இருந்தது. அவனால அஞ்சு நிமிஷம் முழுசா வாயை
மூடிக்கிட்டு இருக்க முடியாது. ஒண்ணு என்னை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு
என் பாடம் நடத்தும் வேகத்துக்கு பிரேக் போடுவான். நான் மும்முரமாய் பாடம் நடத்தும்,
கரும்பலகையில் எழுதும் நேரங்களில் பக்கத்து பையன், எதிர்த்த பெஞ்ச் பெண் என்று
பேச ஆரம்பித்துவிடுவான்.
எத்தனையோ முறை சாம, பேத வழிகளில் சொல்லியும் இந்த ஒரு விஷயத்தில் அவனை
மாத்த முடியல. ஆனா அப்படியும் அவன் மேல அசூயை எதுவும் வந்துடல.. அதுதான் எங்க
மகிழ்மாறன்!
ஏன்னா எப்ப நான் கண்டிச்சாலும், " என் தப்பை கண்டிச்சு, சரிசெய்ததுக்கு நன்றி சிஸ்டர்"னு
நறுக்கா பதில் சொல்லிட்டுதான் உட்காருவான். அவன் குரல்ல தெரியற சின்ஸியாரிடி
இனி அவன் அப்படி செய்யமாட்டான்னு நம்பவைக்கும். அடுத்த ஆறாவது நிமிஷம்....
மறுபடியும் நான் கண்டிக்க, அவன் நன்றி சிஸ்டர் சொல்ல.... ஒரு நாளைக்கு பலதடவை
கேட்டு கேட்டு பழகிப்போச்சு எனக்கு!
ஆனா எதுக்குமே ஒரு லிமிட் இருக்கில்லையா... என் பொறுமைக்கும் சோதனை ஒரு நாள்
வந்தது. அன்னைக்கு மகிழ்மாறனின் அக்கம்பக்க தொணதொணப்பு ரொம்பவே ஜாஸ்தி.
முந்தின இரவு வந்த ஒத்தைத் தலைவலியால் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு
ஏற்கனவே சோர்வா இருந்த நான், என் ஆசிரிய அனுபவத்துக்கு கொஞ்சமும்
பொருந்தாத காரியம் செய்தேன்...
" மகிழ்... இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்! இனி ஒரு வார்த்தை என் பெர்மிஷன் இல்லாம
உன் வாயில இருந்து வந்தாலும், பேசின வாயை டேப் போட்டு சீல் வச்சுடுவேன்...
இன்னைக்கு முழுக்க".
முதல் தடவையா என் கண்டிப்புக்கு நன்றி சொல்லாம உட்கார்ந்தான் மகிழ்.
நான் திரும்பி ஒரு நீண்ட வகுத்தல் கணக்கை போர்டில் எழுத ஆரம்பித்தேன்.
"சிஸ்டர்.. மகிழ் மறுபடியும் பேசறான் சிஸ்டர்" - சீனிவாசன் போட்டுக் கொடுத்தான்.
யாரையும் நான் கண்காணிப்புக்கு நியமிக்கவில்லை. ஆனால் ஒரு அதிகார சுபாவம்
தலையெடுக்கும்போது இது போன்ற காட்டிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கும்
வர்க்கம் தானாகவே உருவாகிவிடுகிறது.
நான் என் அதிகாரத்தை, என் மிரட்டலை நிலைநாட்டவேண்டிய கட்டாயத்தை
என்னைக் கேட்காமலேயே சீனிவாசன் உருவாக்கிவிட்டான்.
முகத்துக்கு நேராய் பேசிவிட்ட வார்த்தைக்காக மனசாட்சியை முறித்து
எத்தனை காரியங்களை.. வெறும் வீம்புக்காக எத்தனை மனிதர்கள் நித்தம்
நித்தம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம்!
என் அதிகார நாடகமும் அன்னைக்கு அங்கே அரங்கேறியது... இன்னைக்குத்தான்
நடந்தாற்போல இன்னும் என் மனசில் பளிச்சென்று இருக்கு அந்தக்காட்சி...
போர்டுக்கு எதிரில் இருந்த என் மேஜை டிராயரில் இருந்து முதல் -உதவி பிளாஸ்டரை
எடுத்தேன். மகிழின் பெஞ்ச் அருகே போனேன். இரண்டு துண்டுகள்.. சர்ரக்...
X - போல அவன் வாய் மேல் அழுத்தி ஒட்டினேன். விறுவிறுவென போர்டுக்குப் போய்
விட்ட இடத்தில் இருந்து கணக்கைத் தொடர்ந்தேன்.
பின் கழுத்தில் குறுகுறுக்க, சடாரென திரும்பி மகிழைப் பார்த்தேன். அங்கிருந்தபடியே
இரு கண்ணிமைகளையும் பட்டுப்பூச்சி இறக்கைபோல் படபடவென சிமிட்டி
பூவாய் சிரிச்சபடி என்னைப் பார்த்தான் மகிழ்.
என் அதிகார அணை மடாரென உடைய, சட்டென நானும் சிரிச்சுட்டேன்.
மொத்த வகுப்பும் சிரித்தது.
ஒரு லயத்தோடு எல்லாரும் கிளாப் பண்ண, நான் மெல்ல நடந்து மகிழின் முன்னால் போய்
நின்றேன். "ஹேய்" என்ற ஒரு கோரஸ் சத்தம் எழும்பியது - நான் மகிழின் பிளாஸ்டரை
எடுத்த போது!
அதிகாரம் கவிழும்போதும் இப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் கூட்டம் உருவாகிறது .இல்லையா?
பிளாஸ்டர் எடுத்தவுடன், மகிழ் பேசிய முதல் வாக்கியம்:
" என் தப்பை திருத்தியதுக்கு நன்றி சிஸ்டர்".
**********************
அந்தக் கல்வியாண்டின் முடிவில்தான் நான் கரஸ்ஸில் எம்.எஸ்.சி. முடித்தேன்.
பிளஸ் 1, பிளஸ் 2 வுக்கு கணக்கு டீச்சராய் அடுத்த வருஷமே மாறினேன்.
வருஷங்கள்தான் எவ்வளவு வேகமாய் ஓடுகிறன... மாறும் வகுப்பு முகங்கள்..
இரண்டுங்கெட்டான் வயது பிள்ளைகள்... நம் வயது ஏறுவதை மறக்கடிக்கும்
வேலை டீச்சர் வேலைதான்.
நாலு வருஷம் நாலு கால் பாய்ச்சலில் ஓடியே போனது.. இப்போ மகிழ் பேட்சுக்கு
நான் மறுபடியும் கணக்கு டீச்சர்.
தாவணி அச்சங்கள்... அரும்பு மீசைக் கூச்சங்கள்... என் பழைய குழந்தைகளை
புது மோஸ்தரில் பார்த்து, எங்கிருந்தோ எனக்குள் லேசான கர்வம் எட்டிப்பார்த்தது.
மகிழ் மாறிப்போயிருந்தான். முன்னிலும் அழகாக, இன்னும் அமரிக்கையாக...
பிளஸ் 1 கணக்கின் கரடுமுரடுகள் அவன் வாயைக் கட்டிப்போட்டு, கண் - காதுகளை
திறந்து என் பாடங்களை கவனிக்கச் செய்தன.
தீபாவளிக்கு முந்தின வெள்ளிக்கிழமை அது. புதுசாய் மேட்ரிக்ஸ், இண்டீசஸ் என்று
நான் ஆரம்பிக்க, பண்டிகை, பட்டாசு, புது டிரஸ், பலகாரம், ரஜினி படம் என்று
பல வித கலர்க்கனவுகளில் கிளாஸே மூழ்கி இருக்க... ஊஹம்... ஒண்ணும் அன்னைக்கு
சரியா வரல. பாதி பீரியடிலேயே பாடத்துக்கு லீவு விட்டுட்டேன்.
இன்னும் அரை மணி நேரம்.. எப்படி ஓட்டுவது? பிரியா விட்டால் பிரின்ஸிக்குத்
தெரிந்து எக்ஸ்ட்ரா கிளாஸ் தண்டனை வரும்.
கணக்கு நோட்டில் இருந்து நாலு தாளைப் பிய்க்கச் சொன்னேன். ஒவ்வொருத்தரும்
கிளாஸில் இருந்த மற்ற எல்லார் பெயரையும் இடைவெளி விட்டு எழுதச் சொன்னேன்.
" ஒவ்வொருத்தரைப் பத்தியும் ரொம்ப்ப்ப்ப நல்லதா உங்க மனசுல என்ன தோணுதோ,
அதை ஒரு வரியில எழுதுங்க.."
கடைசி வகுப்பு அது.. பெல் அடித்தும் என் குழந்தைகள் தீபாவளியையும் மறந்துவிட்டு
பேனா கடித்து, முன் தலை சொறிந்து, அப்படி ஒரு பொறுப்பா எழுதினாங்க.
அமைதியா ஒவ்வொருத்தரா எழுந்து வந்து என் மேசையில் பேப்பர்களை வைத்துவிட்டு
போனாங்க.
சீனிவாசன் மந்தகாச புன்னகையோடு போனான். மகிழ் " நன்றி சிஸ்டர். ஹேப்பி ஹாலிடேஸ்"
என்று ஆறாங்கிளாஸில் எனக்குப் பரிச்சயமான அதே தொனியில் ( கொஞ்சம் முத்தின குரலில்)
சொல்லிவிட்டுப் போனான்.
அந்த ஐப்பசி மாத மழை இரவு முழுக்க என் ஹாஸ்டல் அறையில் நான் பிஸி.
ஒவ்வொருத்தருக்கும் தனி ஷீட் எடுத்து, அவங்களப் பத்தி மத்த எல்லாரும் சொன்ன நல்லதை
தொகுத்து எழுதினேன்.
தீபாவளி முடிஞ்சு ஆரம்பிச்ச முதல் கிளாஸிலேயே ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தேன்.
சில நிமிஷங்கள்.... மௌனத்தில் கரைய.... பளீரென மொத்த கிளாஸையும் மகிழ்ச்சி
மின்னல் தாக்கியது.
" அட, நான் அது செஞ்சப்ப யாருமே கவனிக்கலன்னு நெனச்சேன்"
" ஓ! என்னை நம்ம கிளாஸக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரியாதுப்பா"
" டேய், அந்த ஸ்கூல் டேல நான் பண்ணதைக் கூட ஒருத்தரு பாராட்டி இருக்காங்கடா"
கோடை மழை மாதிரி அந்த உற்சாக வெள்ளம்...
வந்த வேகத்திலேயே வடிஞ்சும் போச்சு...
பழையபடி கஷ்டமான கணக்குப் பாடம்..
கம்ப்யூட்டர் எஞ்சினீயர் கனவுகளில் என் குழந்தைகள் ரொம்ப கவனமாகவே படிச்சாங்க..
அவங்க எதிர்காலத்தையே நிர்ணயிக்கிற பிளஸ் 2 நெருங்குதே!
ஏனோ அந்த "மதிப்பீடு" நிகழ்ச்சி அதுக்கப்புறம் வெளிப்படையா பேசப்படவே இல்லை!
*****************************
அந்த பேட்ச் போனது.. அதுக்கப்புறம் பல பேட்சுகள்...
நான் இப்போ வைஸ் பிரின்ஸி!
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே...
நரை நிறைய வந்துடுச்சு.. நடை கூட தளந்துடுச்சு..
அந்த ஞாயிறு சர்வீஸ் முடிஞ்சு, ஹாஸ்டல் தோட்டத்தில் உலாத்திக்கிட்டிருந்தேன்.
என் பழைய குழந்தை சீனிவாசன் வந்திருக்கிறதா வாட்ச்மேன் சொன்னார்.
ஆமாம், சீனிவாசன் தான்... ஆனா அவன் முகம் ஏன் இப்படி இருண்டு..?
என் அடிவயிறை ஏன் பிசைகிறது?
சில தயக்கங்கள், கேவல்களுக்கிடையில் அவன் சொன்ன சேதி இதுதான்:
கார்கில் பார்டரில் மகிழ்மாறன் வீரமரணம் அடைஞ்சுட்டான்.
அந்த போர்டிகோவில் அந்தக் கணம் தொட்டிச்செடிகள் எந்தப் பக்கம்
அசைஞ்சுது என்பது வரைக்கும் அந்த நிகழ்ச்சி இப்பவும் என் மனசில்
உறைஞ்சு போய் இருக்கு.
" இன்னைக்கு விமானத்தில் திருச்சிக்கு வருவான் சிஸ்டர். நாளைக்கு...
நாளைக்கு.............,,,..........,,,.........; வருவீங்கல்ல சிஸ்டர்.."
ராணுவ உடையில் அந்த நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை யாரையும்.
கண்ணாடி ஊடாய், என் மகிழ் முன்னெப்போதையும் விட இன்னும் அழகானாய்த்
தெரிந்தான். ஆனால் " நன்றி சிஸ்டர்" என்ற பணிவான பேச்சு மட்டும் இல்லை.
" மகிழ், நான்தான் பிளாஸ்டர் போடலியேப்பா.... பேசேம்பா" மனசுக்குள்
இறைஞ்சினேன்.
அஞ்சலி செலுத்த மகிழ் காத்திருந்த மண்டபம் நிரம்பி வழிந்தது.
மகிழின் நாலு வயது மகள் " வந்தே மாதரம்" பாடினாள்....
பாடி முடித்ததும் அம்மாவின் மடியில் முகம் புதைத்தவள்தான்...
என் கண்களை நான் வெறுத்தேன்...
இந்தக் காட்சிகளை இன்னும் பார்க்க முடிவதற்காக...
கண்டும் காய்ந்து கிடப்பதற்காக...
மழை... வானமும் அழுதே.. நான் மட்டும்..?
சடங்குகள்... சம்பிரதாயங்கள்...
உற்றவர், மற்றவர் மகிழை சுற்றி வந்தனர்.
என்னைக் கவனித்த சீனிவாசன் கூட்டம் ஓய்ந்து கடைசி ஆளாக அழைத்து போனான்.
ராணுவம் மகிழுக்குத் துணையாக அனுப்பி வைத்த ஒரு வீரர்
என்னருகே வந்து, " சிஸ்டர், நீங்கள் மகிழுக்கு கணக்கு டீச்சரா" என்றார்.
நான் ஆமோதிக்க, " உங்களைப் பத்தி அடிக்கடி சொல்வார் சிஸ்டர்".
அஞ்சலிகள் முடிந்து மகிழை அழைத்துப்போக ஏற்பாடு.
நான் மெல்ல ஹாஸ்டலுக்கு கிளம்பி விட்டேன்.
**********************************
அன்று ஏழாம் நாள். மகிழின் பேட்ச் மொத்தமும் சேர்ந்து
அவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டில் கூடினாங்க.
என்னையும் கூப்பிடவே அங்கே போனேன்.
எனக்காகவே காத்திருந்தது போல் மகிழின் மனைவி என்னைப்பார்த்ததும்
எழுந்து, மகிழின் போட்டோ அடியில் இருந்த பர்ஸில் இருந்து
ஒரு பழைய பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
மகிழின் அப்பா சொன்னதில் இருந்து மகிழ் இறக்கும்போது அவனிடம் இருந்த
பொருட்களில் அவன் பர்ஸில் இருந்த பேப்பர் என்பது புரிந்தது. நான் புரியாம
பார்க்கவே, " பிரிச்சுப்பாருங்க சிஸ்டர்... தெரியும்".
ஒரு ஷீட் பேப்பர்... பல மடிப்பாய் மடிக்கப்பட்டு, நைந்து, கிழிந்து, செல்லோபோன் டேப் ஒட்டி...
ஐப்பசி மழை இரவு.... நான் விழித்திருந்து எழுதிய பேப்பர்.
" அவர் இருதயம் பக்கம் எப்பவும்
இருந்த இதைக் கொடுத்ததுக்கு நன்றி சிஸ்டர்"
அருள்மணி சொன்னான்: " என் கல்யாண ஆல்பத்தில் முதல் பக்கமே உங்க
பேப்பர்தான் சிஸ்டர்"
விலாசினி சொன்னாள் : " பிரேம் பண்ணி கண்ணாடிக்கு மேலே மாட்டி
தினம் பார்க்கிறேன் சிஸ்டர்"
ஷ்யாம் சொன்னான்: "வருஷா வருஷம் புது டைரி வாங்கியதும் அதன் முதல்
பக்கத்தில் வச்சிடுவேன் சிஸ்டர்"
சீனிவாசன் பாக்கெட்டில் இருந்த பர்ஸைப் பிரித்தான்...
ஒரு ஷீட் பேப்பர்... பல மடிப்பாய் மடிக்கப்பட்டு, நைந்து, கிழிந்து, செல்லோபோன் டேப் ஒட்டி...
ஹால் சுவரோரம் சரிந்த நான் அப்போது அழ ஆரம்பித்தேன்.
என் மகிழுக்காகவும்.. இனி அவனை எப்போதும் பார்க்க முடியாத
சுற்றம் நட்புக்காகவும்....
Bookmarks