நண்பர்களே!
இந்த சௌந்தர்யலஹரி எனும் தொடர்கதையில் என்ன புதுமையெனில் இக்கதை என் ஒருத்தியால மட்டும் எழுதப்படப்போவதில்லை!
நான் ஒருஅத்தியாயமும் அதைத்தொடர்ந்து என் மதிப்பிற்குரிய அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்கள் அடுத்த அத்தியாயமுமாய் மாறி மாறி எழுதப்படப்போகிறது!
உங்கள அனைவரின் ஆதரவுடன் நான் முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்!
சௌந்தர்யலஹரி அத்தியாயம் - ஒன்று
ரயில் நகரத் தொடங்கும்போது வயதான ஒரு பெரியவரும் ஒரு பாட்டியும் முடியாமல் வந்து ஏறினர். ஏறி வந்து இருக்கை தேடி அமர்ந்தனர். கையில் சிறிய துணிப்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. மூச்சு இரைத்தது இருவருக்குமே!
இருவரும் தமது கைகளை இறுக்கப் பற்றி இருந்தனர். எதிர் சீட்டில் அமர்ந்த குடும்பம் இந்த வயதான தம்பதிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தது. குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று அந்த குடும்ப பெரியவர் கேட்டார் வயதானவரிடம்.
அவர் அடுத்து இருந்த பாட்டியிடம்
''நீ குடிக்கிறியா சௌபர்ணிகா? ''என்று கேட்கிறார்.
''வேண்டாம் விஷ்வா! எனக்கு மயக்கமா இருக்குடா ''
''சரி என் தோள் மேலே சாய்ஞ்சுக்கோ பசிக்குதா? ''
'' இல்லடா ''
'' சரி சாய்ஞ்சுக்கோ ''
உடனே எதிர்சீட்டிலிருந்த பெரியவர் ராமனாதன்
''என்ன ஐயா அவங்களுக்கு படுக்கணும்னா சொல்லுங்க நீங்க இந்த பக்கம் வந்துருங்க அவங்க தாராளமா படுக்கட்டும்.'' என்று அக்கறையோடு சொன்னார்!
'' இல்ல இவளோட தலைக்கு அணையா என்னிக்கும் என் தோள் தான் வேணும் ''
அவர்களை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் அந்த பெட்டியில் இருந்த அனைவருமே!
பாட்டி மெல்ல தலை சாய்த்து கொள்கிறார் பெரியவரின் தோளில்!
பெரியவர் பின் தன் தலையை சாய்த்துக்கொண்டு கண் மூடுகிறார்.
ரயிலின் ஆட்டம் இருவரையும் சற்றே கண்ணயர வைக்கிறது!
ஸ்டேஷன் ஏதோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு பெரியவர் கண் விழிக்கிறார்.
'' சௌபர்ணிகா உனக்கு பசிக்குமே எதாவது சாப்பிட வாங்கி வரவா ?''
'' வேண்டாம் விஷ்வா நீ போகாதடா என்னோடவே இரு எனக்கு பசிக்கல! ''
'' ஆனா எனக்கு பசிக்கிறதேடி ''
இருவரது குரலிலும் அன்பைத்தவிர வேறெதுவுமே காணப்படவில்லை!
'' வெள்ளரி பிஞ்சு வாங்கிக்கோங்க சார் '' ஒரு சிறிய பெண் பரட்டை தலையோடு பரிதாபமாகப் பார்த்தாள்.
அவர் ஏறிட்டுப் *பார்த்தார்.
உடனே காசு கொடுத்து ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சுகள் வாங்கி வைத்துக்கொண்டார் !
'' தண்ணியாவது வாங்கிட்டு வரேண்டா '' பெரியவரின் குரல் கெஞ்சியது!
'' வேண்டாம் விஷ்வா விட்டுப் போகாதடா ''
எதிரில் இருந்த குடும்பம் சிநேகமாய் சிரித்து '' எங்களோட ஷேர் பண்ணிக்கோங்க *நீங்க என் அப்பா அம்மா மாதிரி இருக்கீங்க. உங்க ரெண்டு பேர் மனசுல என்னவோ கவலை. எங்க அப்பாவோட அஸ்தியை கரைக்க தான் காசிக்கு போயிட்டு இருக்கேன். ராமனாதனின் குரலில் வாத்சல்யம் தெரிந்தது!
பெரியவர் அமைதியாக சொன்னார்
'' இல்லப்பா ஒன்னும் சாப்பிடற நிலைமையில நாங்க ரெண்டு பேருமே இல்ல!
ஆனா காசிக்கு போனா தங்க ஒரு நல்ல வீடு மட்டும் முடிஞ்சா பார்த்துக்கொடுங்க '' என்று சொன்னார்.
'' கண்டிப்பாக ஐயா '' ராமனாதன் வாஞ்சையாய் கூறினார்!
இருவரும் வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டனர்!
இரவானது.
எல்லாரும் படுக்க தயாராயினர்.
'' பாட்டிக்கு வேணும்னா கீழ்பர்த் தர்றோம் நீங்களும் கீழ் பர்த் எடுத்துக்கோங்க''
சொன்னார் ராமனாதனின் மனைவி!
குழந்தைகள் இருவரும் பேரக்குழந்தைகள் என்று சொன்னார் ராமனாதன்!
'' எங்களுக்கு ஒரு பர்த் போறும்பா அவள் மடியில் நான் கொஞ்சநேரம் தலை சாச்சுப்பேன் அப்புறம் என் மடியில அவ கொஞ்ச நேரம் தல சாச்சுப்பா நான் தனியா படுத்தா இவளோட இதயத் துடிப்பை கேட்க முடியாதுப்பா ''
அவர்கள் அதிசயமாக பார்த்தார்கள்
இருவர் அமரும் சீட்டில் மாறி பெரியவரும் பாட்டியும் அமர எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர் பெரியவரும் கண்ணசந்து பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்க முயற்சி செய்தார்.
உறக்கம் வரவில்லை.
கண்ணில் நீர் வழிந்து பாட்டியின் தொடை நனைந்தது!
'' என்னடா விஷ்வா அழறியா?
பாட்டியின் கையைப்பிடித்துக்கொண்டு சிறு பிள்ளையாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
'' முடியலடா என்னால ....என்னால நம் பிள்ளைகளை மறக்க முடியலடா ''
'' நீ அழக்கூடாதுடா ''
பாட்டி பெரியவரின் கண்களை தன் முந்தானையில் துடைத்தார்
'' விஷ்வா அழாதேடா உன் தைரியம் தானே என்னை உன்னுடன் வரச் செய்தது இந்தத் தள்ளாத வயதிலும்! நீ இப்படி குழந்தையா அழுதா நான் என்னடா பண்ணுவேன்? நீ தூங்க நான் பாடவா ? '' என்றார்.
பெரியவர் சொன்னார் '' பாடு ''
'' சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே.....''
அவர் மெல்ல கண் மூடி உறங்க ஆரம்பித்தார்.
இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது பாட்டிக்கு!
மெல்ல அழுகையோடு '' உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி '' என்ற பாட்டை பாடினார் பாட்டி!
'' இறைவா இந்த குழந்தையை நான் உயிருள்ளவரை பத்திரமா பார்த்துக்க எனக்கு சக்தி கொடுப்பா ! நான் இறந்து இந்த குழந்தை அனாதையாகக் கூடாது இறைவா! மனம் நிறைந்து இவன் வாழனும்! சந்தோஷம் என்னால கொடுக்க முடியுமோ இல்லையோ ஆனால் நிம்மதி தரணும் இவனுக்கு! இவன் உயிர் என் மடியில் போகும்போதே நானும் இவன் கையைப் பிடித்து இவனோட போகனும் இறைவா '' என்று பாட்டி அழுதார்!
அப்படியே விடிந்தது.
இனி கலைவேந்தன் தொடர்வார்...!
Bookmarks