மௌனம் கலைக்க ஒரு வேண்டுகோள்..........(நண்பர் ராம்பாலுக்கு........)
மேகமற்ற வானம்
அச்சமூட்டுகிறது -
மயான அமைதியே
மௌனம் என்றால்
அந்த மௌனங்கள்
தொலைந்து போகட்டும்.
மேகமற்ற வானம்
குப்பைக் கூடையாய்
கிடக்கிறது -
குட்டி, குட்டி
நட்சத்திரங்களை
சிதறி விட்டுப் போய்விட்டனர்......
மேகமற்ற வானத்தை
சுத்தப்படுத்த
உன் மௌனம் களைந்து வா........
நீண்ட கரங்களால்
வெளிச்சத் துடைப்பத்தை
எடுத்து வந்து
சுத்தம் செய்து வை....
மேகமற்ற வானத்திற்கு
நீராவித் துளிகளை
அனுப்பி வை...
உன் வெம்மை கரங்களால்
கடல் நீரைக் கடைந்து
கண்ணுக்குத் தெரியாத
ஆவியை ஆகாயம்
அனுப்பி வை....
மேகமற்ற வானத்திற்கு
நீ வாராது போனதால்
நீராவி பிரியாது போனதால்
நீரின் அளவு கூடிய கடலில்
உப்பின் அளவு குறைந்து போனது -
சுவையும் குன்றிப் போனது...
நிலமெல்லாம் வீழ வேண்டிய நீர்
இன்னும் வானத்திற்குப் போகவில்லை.
மேகமற்ற வானத்தினால்
வரண்டு போனது
வானம் பார்த்த பூமி....
மேகம் உண்டாக்கி
நீ பொழிய வைப்பாய் மழையென்று
ஊரெல்லாம் உன் வருகைக்காக
சேமிப்புச் செய்ய செலவு செய்து
காத்திருக்கின்றது...
இயற்கை நியதியை
நீ சோதனை செய்கிறாய்...
விடிய மறுக்கிறாய்...
மயான அமைதியை
விரட்ட மறுக்கிறாய்......
தூங்கிச் சோம்பும் மனிதத்தை
சாடி எழுப்ப மறுக்கிறாய்...
வேண்டாம், இந்தச் சோதனை...
எழுந்து வா, பொழிந்து வா,
சூர்யக் குஞ்சே -
எழுந்து வா,
நண்பர் ராம்பால் அவர்களே
எழுந்து வருக!!!
Bookmarks