இன்று காலை கடற்கரை போனேன்.. காற்றுவாங்க அல்ல.. கவலைகளை கரைக்க.. அலைகளை ரசித்தவேளையில் தோணியதை பஸ் டிக்கெட்டில் குறிப்பெடுத்து.. இங்கே..
**
மீண்டும் மீண்டும்
புரட்டியும் கிட்டவில்லையா
காதலியின் விலாசம்?!
**
இது பட்டினஜாதி அலை..
அடப்பாவி இங்கேயுமா?!
***
என்னைச்சுற்றி
இருந்தவர்களைக்கண்டு
கோபம்கோபமாய்..
உன்னழகை
அவர்களும் ரசிப்பதால்!
***
எத்தனைமுறை
கழுத்தைப் பிடித்து
தள்ளினாலும்
கரைசேர மறுக்கிறாய்..
உப்பிட்டவனை உள்ளளவும்?!!..
**
அலையே..
சற்றுநேரம் ஒளிந்துகொள்..
அழகுப்பெண்கள்
சுற்றுலாக் கூட்டம்!!
**
ஆனாலும்
இத்தனை வெகுளியாய் இராதே..
இங்கே மனிதர்கள்(?) வசிக்கிறோம்!!..
**
கடவுள் வரமொன்று தருவாரானால்..
காவல்காப்பேன் காலமெல்லாம்...
எவர்காலும் உன்மேல் பட்டுவிடாமல்!
**
ஏன் திடீர் ஆவேசம்..
ஓ.. மந்திரி வாக்கிங் வருகிறாரா?!..
**
நிறையமுறை படையெடுத்தாய்..
தொடமுடியாத பாதம்..
வெற்(று)றி வெற்றி...
திரும்பிவருகையில்
தோல்வியை உணர்ந்தேன்..
**
இத்தனை நேரமாய்
பேசினோம்..
என்ன சொன்னாயென
புரியவில்லையே!!
**
கரைமுழுக்க காத்திருப்பு..
திரும்பி திரும்பிப் போகிறாய்..
உன் எண்ணக்காதலன்
எப்படித்தானிருப்பான்?!!
**
வாழ்வு...சாவு..
மணல்மேலெழுதி
ஒன்றுதொட உன்னையழைத்தேன்..
மொத்தமாய் அழித்துச்சென்றதின்
அர்த்தமென்னவோ?!..
**
உன்னால் மட்டுமெப்படி
நொடிகளில் மறுபிறப்பெடுக்க முடிகிறது..
நுரையே?!!
**
உன் கடல்கணவன்
அப்படியென்ன சொல்லிவிட்டான்..
இத்தனை ஆற்றாமை?!!..
**
அன்பே அழாதே..
அடுத்தமுறை வரும்போது
கடிகாரத்தை
கழட்டிவைத்து வருகிறேன்!!
********
Bookmarks