எனக்குப் பிடிக்கும் என்று
கசங்காத
காட்டன் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.
இன்றும் எனக்கு
காட்டன் புடவைகளையே பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது எப்பொழுதும்...
மனைவியாகக் கடமை செய்கிறாய் -
டீயும், பேப்பரும் தலமாட்டில்,
இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
காதலியாக செய்யும் கடமைகள் மட்டும்
குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே...
நீ காலையில் உடுத்திப் போகும் ஆடை
மாலையில் வந்து பார்க்கும் முன்னே
அழகாக மடித்து அலமாரி உள்ளே போய்விடும்
நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...
காதலியாக இருந்த பொழுது -
ஒருநாள் மறந்தாலும் சினந்து
காதைத் திருகுவாய்
'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
சொல்லவில்லையென்று...
இன்று வருடத்திற்கு
ஒருமுறை சொல்ல முயலும் முன்னே
நெற்றிக்கண் திறக்காத குறையாய்
கடிந்து பேசுகிறாய்
'பொறுப்பில்லாத மனுஷன்' என்று.
மனைவியாக நீ இருந்தது போதும் -
காட்டன் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.
உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான இன்று மட்டுமாவாது.....
Bookmarks