ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்
என்னுடைய பால்ய நண்பன் ஒருவன் வந்து தனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தான், பத்திரிக்கையை பார்த்தவுடன் என்னுடைய கண்களில் பல்பு எரிந்தது, காரணம் திருமணம் நடக்கும் இடம். ஸ்ரீரங்கம் என்று போட்டு இருந்தது, இடத்தை வைத்து நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்னுடைய நண்பனின் ஜாதியை, ஆம் ஐயங்கார் தான். நான் அவனை பார்த்து கண்டிப்பாக வரேன்டா என்றேன். காரணம் இரண்டு. ஒன்று இதுவரை நான் அங்கு சென்றது இல்லை, இரண்டாவது ஸ்ரீரங்கத்து ரங்காக்களின் ஜாகைகளை பார்க்கலாமே. ஆமாம் சுஜாதாவின் இளமை பருவம் கழிந்த இடம் அது தான். அப்புறம் நம்ம ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் எனக்கு சாமிகளிலே சின்ன வயதில் இருந்து இவர் மீது ஒரு ஈர்ப்பு, என்னைப்போலவே எப்பொழுதும் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டு இருப்பதினாலா? அல்லது அவர் சிந்தனை செய்தவாரே உறங்கிக் கொண்டு இருக்கும் ஸ்டைலினாலா? அதுவும் கடலின் நடுவில் படுத்து இருப்பார், காற்றும் நன்றாக வரும் என்பதாலா? தெரியவில்லை. மற்ற சாமிகளை பார்த்தால் கையில் வேல் கம்பு, அல்லது சூலம், அல்லது சங்கு சக்கரம், அல்லது கிளி, தாமரை, உலகம்னு எதையாவது கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதில் பழனி முருகன் மட்டும் பரவாயில்லை சிங்கில் பீசில் கொஞ்சம் ஃப்ரியாக இருப்பார். அதனால் மற்ற சாமிகளை கம்பேர் செய்யும் பொழுது இந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் கொஞ்சம் நிறைவான போஸ் தான் கொடுத்து இருப்பார், இவரை பார்க்கும் பொழுது சாமி என்ற ஒரு பிரமை வருவதற்கு முன்பு, நாம் படுப்பது போல படுத்து இருக்காரே என்று சிந்தனை தான் மேலோங்கும் எனக்கு.
என் நண்பன் அடுத்த நாள் வந்து “டேய் எங்க குரூப்புல ஒருத்தர் வரவில்லை, நீ எங்ககூட ரயிலில் வரியா” என்றான். நானும் சரி என்று சொல்லி விட்டேன். காரணம் இதுவரை நான் ரயிலில் சென்ற தொலை தூரப்பயணமே செங்கல்பட்டில் இருந்து மாம்பலம் தான். நான் இதுவரை எந்த ஊருக்கு சென்றாலும் பஸ்ஸில் தான் போவேன். ரயிலில் செல்வது பிடிக்கும் என்றாலும், யாரு போய் டிக்கெட்டுக்கு நின்று அலைவது என்ற ஒரு சோம்பேறித்தனம், அதனால் நான் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். நாங்கள் ஊருக்கு புறப்படவேண்டிய நாள் அன்று காலையில் இருந்து மாலை வரை அவன் என்னுடைய வீட்டில் தான் இருந்தான், அவனும், அவனுடைய ஒரு அண்ணன் பொண்ணும், ஒரு அக்கா பொண்ணும். இரண்டு சின்ன குட்டிகளும் செம வாலுங்க. அந்த வாலுங்களை பற்றி அப்புறம் சொல்றேன். இவனுடைய வீட்டு என்னுடைய வீட்டுக்கு இரண்டு பிளாட் தள்ளி இருக்கிறது, காலையில் இருந்து அவன் என்னுடன் தான் பேசிக் கொண்டு இருந்தான் அதுவும் ஜாலியாக சிரித்துக் கொண்டு. எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது என்னடா “உனக்கு தானே கல்யாணம் நீ இப்படி ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாய், எதுவும் வீட்டில் வேலை இல்லையா? ஒரு வித டென்சனே இல்லாமல் இருக்கிறாயே? என்று மனதில் பட்டதை கேட்டேன். அவன் எதுவுமே சொல்லாமல் என்ன இப்ப கல்யாணம் தானே நடக்க போவுது.
என்று அன்று மாலை 5 மணிக்கு தான் என்னுடைய வீட்டை விட்டு சென்றான். இரவு 10 மணிக்கு ரயில் அதுவும் எக்மோரில் இருந்து, நான் இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டுக்கு சென்றேன். தடியாக ஒரு ஐயர் உக்கார்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தார், இவன் புது வேஷ்டியை கட்ட தெரியாமல் நெஞ்சுவரை கட்டிக் கொண்டு மலையாளப்பட போஸ்டர் போல உக்கார்ந்துக் கொண்டு இருந்தான். எதோ மந்திரங்கள் எல்லாம் சொன்னான், பல விதமாக ஆசிர்வாதங்கள் வாங்கினான், அவன் வீட்டில் இருந்தது மொத்தமே 6 பேர் தான் 4 பெரியவர்கள், 2 குழந்தைகள் எனக்கு இதுவே பெரிய ஆச்சர்யம், இதுவரை நடந்த எங்க வீடு கல்யாணத்திலும் சரி, எனக்கு தெரிந்தவர்கள் வீட்டு கல்யாணத்திலும் சரி. குறைந்தது 200 பேராவது இரண்டு நாளுக்கு முன்பே வந்து விடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை மிக மிக யதார்தமாக நடந்த கல்யாணம் இது, எந்த டென்சனும் இல்லாமல் இருந்தார்கள். அப்புறம் எனக்கு அதிசயமாக இருந்தது அந்த ஆசீர்வாதங்கள் அதுவும் மாப்பிள்ளை யானை காது மாதிரி கையை வைத்துக் கொண்டு பல முறை கீழே தண்டால் எடுப்பதை போல விழுந்து எழுந்தான். என்னை பொறுத்தவரை சகமனிதனின் காலில் விழுவதே தவறு, அம்மா அப்பாவை தவிர (என்னுடைய பிற்காலத்தையும் கருதி, மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம்). என் நண்பன் பெயர் பாலாஜீ அவன் அந்த ஐயர் காலில் மட்டும் 20 தடவை விழுந்தான், நான் பார்த்தது வரை, அதுவும் இரவு கிளம்புவதற்கு முன், கால் டாக்ஸி வந்தது, இவர்கள் மூட்டை முடிச்சை பார்த்து
டிரைவர் அலறிவிட்டான். 50 பெரிய பெரிய பைகள். டிரைவர் 50 ரூபாய் அதிகம் கேட்க, பாலாஜீ அரை மணி நேரம் சண்டை போட்டான், அப்புறம் 35 ரூபாய் கொடுத்தான். வண்டி கிளம்பியது, என்னுடைய மடியில் பாலாஜீயின் அக்கா பெண் ஐஸ்வர்யா (9) உக்கார்ந்துக் கொண்டாள். அவளை பற்றி சொல்லியாக வேண்டும், டாக்ஸி எக்மோரை அடைவதற்குள் சொல்லி முடித்துவிடுகிறேன்.
பெங்களூரில் படிக்கும் அவளும் அவளுடைய அண்ணனும் (13) என் நண்பன் பாலாஜியின் வீட்டுக்கு கல்யாணத்தை முன்னிட்டு ஒரு வாரம் முன்பே வந்து இருந்தார்கள். நாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் காலை எங்கள் வீட்டுக்கு பாலாஜி இந்த வாண்டுகளுடன் வந்து என்னிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். இவர்களை என் பொறுப்பில் விட்டு விட்டு இவன் வெளியே கடைக்கு போனான். அந்த ஐஸ்ஸூ பெயருக்கு ஏற்றார் போல நல்ல அழகு (ஆமா இந்த ஐஸ்வர்யா, மதுமிதா பெயர் கொண்ட 95% பெண்கள் மட்டும் எப்படி எல்லாரும் அழகாக இருக்கிறார்கள்). என்னை பார்த்தாள்
“உன் பெயர் என்ன டா செல்லம்” நான்.
“ஐஸ்வர்யா அங்கிள்” என்றாள் கொஞ்சும் குரலில்.
ஆஆஆஆஆஆஆ அங்கிள் அங்கிள் அந்த வார்த்தை என்னமோ செய்தது, வயசு ஆயிடுச்சா எனக்கு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட cartoon channel பார்த்தனே என்னை போய் இவ அங்கிள்னு கூப்பிடுறாளே, இவ தான் என்னை இரண்டாவது முறையாக கூப்பிட்டது, (முதல் முறை கூப்பிட்டது யார் தெரியுமா நம்ம சிவா அண்ணாவின் பொண்ணு, அங்கிள் என்றால் தயங்கியபடி, நல்ல வேளையாக சிவா அண்ணா காப்பாற்றி விட்டார், நீ அண்ணானே கூப்பிடுமா என்றார் புண்ணியவான்). இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது
“உங்கிட்ட ஐ பாட் இருக்கா” என்றான் அந்த பையன் பெயர் அனிருத். நான் எடுத்து கொடுத்தேன். அவன் பெரிசாக சிரித்து
“இது ஒரிஜனல் செட் இல்லை டூபாகூர் செட்” என்றான்.
“தெரியும்” என்று நான் சொல்வதை கூட கேட்காமல் என்னுடைய அறையில் என்னுடைய பொருள்களை நோண்ட சென்று விட்டான் அனு.
“why did you buy these kind of duplicate products uncle" என்றாள் ஐஸ்ஸூ, அவள் இப்படி ஆங்கிலத்தில் ஆரம்பிப்பாள் என்று நான் நினைக்கவில்லை.
“actually this i pod என்னுடைய friend பரிசா கொடுத்தான்” ஆச்சர்யத்தில் தங்ழிஷில் உளறினேன். நான் 5 வது படிக்கும் பொழுது என்னுடைய ஆங்கில ஆசிரியரை பார்த்து ஒரு பயம் வரும், அது இப்ப வந்து.
“let it be uncle, we should not encourge these kind of products, and the peoples who are selling these things uncle" என்றாள் புருவத்தை தேய்த்தபடி.
“ok darling, i swear on you that i wont do this mistake again" என்றேன். பரவாயில்லை பயம் ஒர் அளவு விலகிவிட்டது.
அவள் அழகாக சிரித்துக் கொண்டு “i already started liking u uncle"
”உங்கிட்ட வீடியோ கேம்ஸ் சீடி இருக்கா” என்றான் கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு.
“இல்லடா நான் என்ன சின்ன பையனா அதெல்லாம் விளையாட”
“அப்ப இது என்ன” என்று தன்னுடைய கைகளை பின்னாடியில் இருந்து எடுத்தான். கை நிறைய சீடிகள், வீடியோ சீடிகள். கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன், ஐஸ்ஸூ வேற என்னை நாயை பார்ப்பது போல பார்த்தாள். எப்படி சமாளிப்பது
“வெரி குட் டா, எப்படி கண்டுபிடிச்ச எங்க இருந்தது, இதை தான் நான் ஒரு வருஷமா தேடினு இருந்தேன் டா, எங்க அம்மாவும் அப்பாவும் எடுத்து ஒளிச்சி வச்சிட்டாங்க, கழுகு கண்ணு டா உனக்கு” சமாளித்தேன். அனுவுக்கு ஒரே பெருமிதம் அவனை புகழ்ந்து விட்டேன் திரும்பவும் எதையோ நோண்ட சென்று விட்டான், என்னுடைய அறையில்.
“uncle can i get some water" என்றாள் ஐஸ்ஸூ.
“தரேன், ஆனா அங்கிள்னு கூப்பிடாதே, அண்ணானு கூப்பிடு” என்றேன். தண்ணீயை கொடுத்தேன், குடித்து வாயை துடைத்துக் கொண்டு.
“ஏன், கூப்பிட்டா என்ன” என்றாள்.
“ஒண்ணும் இல்ல, நீ கூப்பிடும் போது, நான் பென்ஷன் வாங்கினு கட்டிலில் படுத்துக் கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுது” என்றேன்.
“ஓஹோ, சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பதில் சரியா சொன்னால் நான் உங்களை நீங்கள் சொல்ற மாதிரி கூப்பிடுகிறேன்” என்றாள்.
மனதுக்குள் கீழிந்தது போ என்று நினைத்துக் கொண்டேன் “சரி ரெடி என்றேன்”. அவள் யோசித்து விட்டு “சரி நீங்க எந்த topic ல் கிளவர்”
“புரியவில்லையே”
“சயின்ஸா, ஜீகே வா, கரண்டு ஈவண்ட்ஸா, பாலிட்டிக்ஸா என்று அவள் அடிக்கிக் கொண்டு போக” நான் அவசரமாக குறுக்கிட்டு
“சினிமா” என்றேன், அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள் பின்பு மூக்கை ஸ்டைலாக ஒரு முறை தடவிக் கொண்டு,
“ஓகே here is your question, அரவிந்த்சாமியின் opposite என்ன?” என்றாள். நான் சிரித்துக் கொண்டு
“அடுப்புல வெந்தசாமி” என்றேன். அவள்
“ம்ஹூம், நான் உங்களை இனிமேல் அங்கிள்னு தான் கூப்பிடுவேன், அதுக்கு answer அரவிந்த் didnt see me” என்றாள். எனக்கு என்ன பதில் சொல்வதுனு தெரியவில்லை,
“ஐஸ்ஸூ குட்டி இன்னொரு சான்ஸ் கொடுடா” என்றேன்.
“சரி what will a cow give after an earthquake" என்றாள்.
“பால்”
“இல்லை”
“தயிர்”
“இல்லை”
“கன்னுகுட்டி”
“ஆஆ அப்படினா”
“ஒண்ணும் இல்லை நீயே சொல்லு, எனக்கு தெரியலை”
“MILK SHAKE" என்று சிரித்தாள். “உங்களை இனிமேல் நான் அங்கிள்னு தான் கூப்பிடுவேன் ஆஹா ஆஹா”.
உள்ளே இருந்து வந்த அனு “அங்கிள் உங்ககிட்ட ஹோம் தியெட்டர் இருக்கா?” என்றான்.
“என்கிட்ட ஹோமே இல்லை”
“வாங்க வேண்டியது தானே அங்கிள்”
“என்னடா டீ சாப்பிடற மாதிரி சொல்ற, என்னை அங்கிள்னு கூப்பிடாதே”
“ சரி டா தக்ஸ்னா” என்றான் யோசிக்காமல், ஐஸ்ஸூ அதுக்கு சிரித்தாளே ஒரு சிரிப்பு, ஐய்யோ ஆண்டவன் படைத்ததிலே மிக அழகான படைப்பு பெண் குழந்தைகள் தான்.
டிராப்பிக் அதிகமாக இருந்ததால் டாக்ஸி பொறுமையாக egmore வந்து சேர்ந்தது, எல்லா பைகளையும் இறக்கி வைத்து விட்டு பாலாஜீ சொன்னான்
“மச்சி ஒரு குட் நியூஸ், ஒரு மாமா வரமாட்டேன்னு சொன்னாரு இல்ல”
“ஆமா”
“அவரு டிக்கெட்டை தானே உனக்கு தரதா சொன்னேன்”
“ஆமா”
“அவரு திடீர்னு வந்துட்டாரு”
“அடப்பாவி, அப்போ எனக்கு”
“புஸ்ஸுக்கு” என்று கையை கக்கத்தில் வைத்தபடி சிரித்துக் கொண்டே சொன்னான்.
“மவனே மாப்பிள்ளைனு கூட பார்க்க மாட்டேன், செருப்ப கைட்டி வாயிலே அடிச்சிடுவேன்”
“நீ ஷூ தானே போட்டுனு இருக்க”
“நீ செருப்பு போட்டுனு இருக்கீயே”
“நான் தர மாட்டனே”
“டேய் என்ன டா விளையாடினு இருக்க, இப்போ டிக்கெட் இருக்கா இல்லையா சொல்லித் தொலடா தயிர் சாதம், உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கனும்”
“இப்ப தருவேனே” என்று செருப்பை கழற்றினான்.
நான் எப்படி ஸ்ரீரங்கம் போனேன்?, ஐஸ்ஸூவிடம் ஜெயித்தேனா?, பயங்கர பசியில் இருக்கும் பொழுது டீ ஸ்பூனில் சாதம் பரிமாறியவனை பார்த்து முறைத்தேனா? எல்லாம் விரைவில்.
(தொடரும்..............)
Bookmarks