1.
கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
-கார்த்திகா
2.
வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.
3.
அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.
4.
குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச சொல்லி
கண்ணாடியை தட்டுகிறான்
சிறுவன்.
- முகுந்த நாகராஜன்(2,3,4)
மேல் உள்ள கவிதைகளுக்கும் விளக்கம் தேவையில்லை..படித்த இடங்கள்
http://www.veenaapponavan.blogspot.com/
http://www.uyirmmai.com
Bookmarks