பாகிஸ்தானில் தற்கால நிகழ்வுகள் அபாயகரமாக உள்ளது. கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது.
அது பற்றிய செய்தி - நன்றி தினகரன்
------------------------------------------------
இஸ்லாமாபாத், மார்ச் 16: லாகூரில் வீட்டுக்காவலை உடைத்து விட்டு, பாகிஸ்தானின் முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் இஸ்லாமாபாத்துக்கு நேற்று பேரணி புறப்பட்டார். அவருக்கு ஆதரவாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள், போலீசார் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு பேரணியில் செல்கின்றனர். இதையடுத்து பாகிஸ்தானில் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் (என்) தலைமையில் எதிர்க்கட்சிகளும், வக்கீல்களும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் திரண்டு தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு பேரணி புறப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளனர். தலைநகருக்குள் பேரணி நுழைய அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத் வரும் சாலைகள் அனைத்தும் முள்வேலி அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. பார்லிமென்டை சுற்றி சரக்கு பெட்டகங்களை வைத்து தடை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் அழைக்கப்பட்டு உள்ளது.
லாகூரில் ஷெரீப் நேற்று கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ராவல்பிண்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெகிரி-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் தப்பி விட்டார்.
ஷெரீப் திடீரென்று, வீட்டுக்காவலை உடைத்துக் கொண்டு இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி புறப்பட்டார். அவருடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் செல்கின்றனர். ஷெரீப்புக்கு ஆதரவாக பஞ்சாப் மாகாண போலீஸ் டி.ஜி.பி. உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு பேரணியில் செல்கின்றனர். இதனால், பேரணி செல்பவர்கள் உற்சாக மடைந்துள்ளனர். போலீஸ் கைதுக்கு பயந்து, மாறு வேடங்களில் இஸ்லாமாபாத்துக்கு வக்கீல்கள் செல்கிறன்றனர். நேற்று இரண்டு வக்கீல்கள் மணமக்கள் போல வேடமணிந்து சென்றனர். அவர்களுடன் 150 வக்கீல்கள் உறவினர் போல சென்றனர்.
பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் பஞ்சாப்தான் சக்தி மிக்கது. இந்த நிலத்தில் செல்வாக்கு பெற்றவர்தான் பாகிஸ்தானை ஆள முடியும். பஞ்சாபின் ஒட்டுமொத்த ஆதரவும் ஷெரீப்புக்கு கிடைத்துள்ளதால், பாகிஸ்தான் அரசின் நிலைமை மோசமடைந்துள்ளது. செய்வது அறியாமல் அரசு திகைக்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டத்துடன் பேரணி இன்று இஸ்லாமாபாத்தில் நுழைய இருப்பதால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து பெரும் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சர்தாரியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்படியரு நிலை உருவானால், ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
Bookmarks