கோவையிலிருந்து மும்பை செல்லும் ரயிலுக்காக பிரயாணிகள் பலரும் காத்திருந்தார்கள். எட்டு வயது சிறுமி பூங்கோதை அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவள் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழண்டு தண்டவாளத்தில் விழ, அவளது தந்தை தாமோதரன் கோபத்தில் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அடிவாங்கியதும் மொத்த சந்தோஷமும் விலகி கண்களில் கண்ணீர் வந்திறங்க சத்தமில்லாமல் அழுதாள் பூங்கோதை.
தாமோதரன் தண்டவாளத்தில் இறங்கி ஒற்றை செருப்பை எடுத்துக்கொடுத்தார். பத்து நிமிடம் கழிந்து ரயில் வண்டி வர அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.
ரயில் புறப்பட்டதும் தாமோதரன் சட்டைபாக்கெட்டிலிருந்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகருக்கு காட்ட வெளியே எடுத்த போது. அது கை தவறி ஜென்னல் வழியாக வெளியே பறந்து போனது .சட்டென்று சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணச்சீட்டை தேடி எடுத்து வந்தார் தாமோதரன்.
" அப்பா நான் செருப்ப தவற விட்டதுக்கு நீங்க என் கன்னத்துல அறைஞ்சீங்க, நீங்க டிக்கெட்ட தவற விட்டதுக்கு உங்கள யார் வந்து கன்னத்துல அறைவாங்க? விரக்தியாய் அவள் கேட்டபோது தமோதரனுக்கு அது நன்றாகவே வலித்தது.
Bookmarks