அனுபவம்
ஒரு பெரிய காலணி கம்பெனியின் முதலாளி தன்னுடைய மகனை அவருடைய பொறுப்பில் அமர்த்த அவனுக்கு பயிற்சிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
“ராகவ், இனிமேல் நீ தான் இந்த கம்பெனியை பார்த்துக்கனும், பல பேருடைய உழைப்பில் வளர்ந்த கம்பெனி இது, ரத்தத்தை வேர்வையாக சிந்தி வருட கணக்கில் உழைத்து இந்த சாம்ராஜ்யத்தை கட்டி இருக்கிறோம், இதை உடைக்க ஒரு உளி போதும். அதனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து எடுக்கனும், ஏன்னா?...............” என்று அவர் முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு.
“அப்பா சொல்றனேன்னு தப்பாக எடுத்துக்காதீங்க, 5 தாவது வரை படித்த நீங்களே, 200 கோடி ரூபாய் சொத்தை சம்பாதிக்கும் பொழுது, ஆக்ஸ்போர்டு யுனிவர்ஸ்சிட்டியில் எம்.பி.ஏ படித்த நான் எவ்வளவு சம்பாதிப்பேன், உங்களை விட பல மடங்கு எனக்கு உலக விஷயம் தெரியும் ப்பா, என்ன செய்யணும் மட்டும் சொல்லுங்க, அறிவுரைகள் வேண்டாம்” என்றான் சிரித்துக் கொண்டே. தந்தையும் சிரித்துக் கொண்டு
“சாரி ப்பா, ஒண்ணும் இல்லை நம்முடைய வியாபாரத்தை வெளிநாடுகளில் விரிவு படுத்தலாம் என்று இருக்கிறேன். முதலில் ஆப்ரிக்கா நாட்டில் போஜீ என்ற கிராமத்தில் நம்முடைய ஷூவின் வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், நீ போய் அங்கு ஒருமுறை ஷூவின் டிமாண்டை பற்றி தெரிந்துக் கொண்டு வா” என்றார்.
“என்னது கிராமமா என்னப்பா இது, லண்டன், அமெரிக்கா மாதிரி இடங்களில் முதலில் முயற்சி செய்தால் பரவாயில்லை, ஆப்ரிக்காவில் போய்.....”
“ராகவ் நீ சொன்ன இடங்களில் எல்லாம் 1000 கணக்கான கம்பெனிகள் இருக்குப்பா, நான் சொன்னதை செய் நீ” என்றார் சிரித்துக் கொண்டு.
இரண்டு வாரம் கழித்து ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய மகனை பார்த்து தந்தை
“என்னப்பா, எப்படி இருந்தது டிரிப், நம்ம ஷூவை ஏற்றுமதி செய்யலாமா?” என்றார், அதுக்கு மகன் கோபத்தோடு
“நான் தான் ஊருக்கு போறதுக்கு முன்னே சொன்னேன் இல்ல, அந்த கிராமத்தில் யாரும் செருப்பு கூட போட மாட்றாங்க, இதில் எங்க இருந்து நாம ஷூவை வியாபாரம் செய்வது. நான் சொன்னது போலவே தான் இருந்தது அங்கு. இன்னொறு விஷயம் தெரியுமா, அந்த ஊர்ல ஹூ, செருப்பு கடைக்கூட கிடையாது. போய்டு வந்த செலவு தான் நமக்கு மிச்சம். ஒழுங்கா நான் சொல்வது போல வேற பெரிய நாடுகளில் வியாபாரம் செய்யலாம், இந்த மாதிரி செருப்பு கூட போடாத நாட்டில் வியாபாரம் வேண்டாம்” என்றான் கடுப்பாக.
பெரியவர் சிரித்துக் கொண்டு “ராகவ், உனக்கு இன்னும் கொஞ்சம் உலக அறிவு வரணும், நீ அடுத்த வருடத்தில் இருந்து பொறுப்பை எடுத்துக் கொள்” என்று எழுந்து சென்றார் தந்தை. ராகவுக்கு கோபமாக இருந்தது.
அடுத்த நாள் அவன் கம்பெனிக்கு போகும் பொழுது, ப்ரோடக்*ஷன் டிப்பார்டுமெண்டில் செருப்புகள் தயாராகிக் கொண்டு இருந்தன. இவன் அங்கு உள்ள சூப்பரவைஸரிடம் காரணம் கேட்டதுக்கு, அவன் சொன்னான்.
“அப்பா தாங்க ஆப்ரிக்கா அனுப்ப குறைந்த விலையில் செருப்பு தயார் செய்யச் சொன்னாருங்க” என்றான். ராகவ் தன்னுடைய தந்தையின் அனுபவ அறிவை நினைத்து பிரமித்தான்.
Bookmarks