(முன்குறிப்பு: நீண்ட நாட்கள் கழித்து எழுதப்பழகுகிறேன். வழக்கமான பாணியில் மொக்கையாக இருக்கும் என நம்புகிறேன். ஆயினும் இந்தக் கதைத் தொடரை முடிப்பேன் என்று நம்பிக்கை இல்லை.)
பரபரப்பான பெங்களூர் நகரம். வாரநாட்களில் ஒரு நாள். காலையில் வழக்கம் போல் ஏகத்துக்கும் போக்குவரத்து நெரிசல். எரிச்சலுடன் ஊரிலுள்ள கெட்டவார்த்தையை எல்லாம் ஞாபகப்படுத்தி போற வழிக்கு இடைஞ்சலா இருக்கறவனைத் திட்டுகிற லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள். பெட்ரோலியப் புகையை மட்டுமே பிராணவாயுவாய் சுவாசிக்கும் மக்கள், வீட்டிலிருந்து குளித்து புத்துணர்ச்சியோடு கிளம்பினால் அலுவலகம் செல்வதற்குள் மூன்று அல்லது நான்கு முறை முகத்திற்கு மேக்கப் போட்டுவிடும் புழுதியை கிளப்பிவிடும் சாலைகள். இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு மாதந்தோறும் பேங்க் அக்கவுண்டில் போடப்படும் பணத்திற்காக காலை முதல் மாலை வரை பலியாடு மாதிரி வேலைப்பார்க்கும் ஐ.டி கம்பெனியினர்.
அந்தச் சாலை முழுதும் ஏகப்பட்ட ஐ.டி. கம்பெனிகளை பதுக்கியபடி விண்ணுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சுவர்கள் உஷ்ணத்தை வெளியே பரப்பிக்கொண்டிருந்தது. அதில் மூன்றாவது கட்டிடத்துள் நுழைகையில் வரவேற்பறையில் ஒட்ட வைத்த சிரிப்போடு பெண். பக்கத்தில் செக்யூரிட்ட்ய் ஆபிஸர். சம்பிரதாய சடங்குகள் முடிந்து இதோ நம்மை உள்ளே விட்டுவிட்டனர். வளைந்து சென்ற பாதை முடிவில் இதோ லிப்ட். நிறைய மக்கள் காத்திருப்பதனால் நாமும் கொஞ்சம் பொறுப்போம்.
ஒருவழியா லிப்டுள் நுழைந்தாகிவிட்டது. என்ன இது? டைட்டானிக் பாட்டு மெல்லிய இசையாய் வழிந்தது. மூச்சு திணறுவதற்குள் சேர வேண்டிய ஆறாம் மாடி வந்துவிட்டது. இங்கு நமக்கு வேலையில்லை. நாம் போக வேண்டியது ஏழாம் மாடி. ஏழாம் மாடிக்கு லிஃப்ட் இல்லை. படியில் ஏறி தான் செல்ல வேண்டும். ஏறியாகிவிட்டது. இடப்புறமா வலப்புறமா. அதையும் நான் தான் சொல்லியாக வேண்டுமோ? இடப்பக்கம் விஸ்தாரணமான உணவகம். சாப்பிடலாம். சாட்டலாம். வலப்புறம் சென்றால் ஆங்காங்கே தடுக்கப்பட்டு பொறியாளர்கள் உட்கார க்யூபிக்கல். அதில் மூன்றாவது ஆளாய் உட்கார்ந்திருக்கிறானே அவனைப் பார்க்கத் தான் வந்தோம். அவன் தான் அருண். (அடடா.. எம்மாம் பெரிய பில்டப்பு)….
“ஆண்பிள்ளைகள் எல்லாம் மரத்தின் மேலிருக்கும் ஆப்பிள் பழம் மாதிரி. சிறந்த பழங்கள் எல்லாம் மரத்தின் உச்சியில் இருக்கும். பெண்கள் அதிக உயரத்திற்கு ஏற மாட்டார்கள். ஏனென்றால் விழுந்தால் அடி பலமாக இருக்கும் என்ற பயம். அதனால் வீணாய் போன தரையில் கிடக்கும் அழுகியஆப்பிள் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். இதைப் பார்த்து மர உச்சியில் இருக்கும் ஆப்பிள்கள் தன்மேல் தான் ஏதோ தவறிருப்பதாய் எண்ணிக் கொள்ளும். ஆனால் உண்மையில் அவர்கள் சிறந்தவர்கள். சிறந்த ஆண்களைத் தேடும் பெண் மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று நல்ல ஆப்பிளை பறிப்பாள். அதற்கான நேரம் வரும். வெகு சீக்கிரத்திலேயே…”
கம்ப்யூட்டர் திரையில் தனக்கு வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை படித்து பெருமிதம் கொண்டது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. முகத்தில் சின்ன புன்முறுவல். இந்நேரம் தெரிந்திருக்குமே அவனும் மர உச்சியில் உள்ள ஆப்பிள் தான் என்று. அநேகமாய் அவன் தான் அதிக உயரத்தில் இருக்கிறான் போலும். எந்தப் பெண்ணும் அவ்வளவு தூரம் ஏறுவேனா என்கிறாள். இதோ பாருங்க, இதை இன்னும் நாலு பேருக்கு ஃபார்வேர்ட் செய்யப்போகிறான். கேர்ள் ப்ரண்ட் இல்லாத நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பப்போகிறான். அதற்குள் அவனைப்பற்றி பார்த்திடுவோமா?
அருண். நல்ல பெயர். அதிகம் வைக்கப்படும் பெயர். அதனாலேயே அவன் தனித்துத் தெரியவில்லையோ என்னவோ. அடச்சே. எப்ப பார்த்தாலும் அவன் மேல் பாவப்படுவதும் பச்சாதாபப்படுவதும். கிட்டத்தட்ட ஆறடி உயரம். உயரத்திற்கேற்ற உடம்பு. அழகாக நறுக்கப்பட்ட மீசை. கன்னத்தில் சின்னதாய் பரவியிருக்கும் கிருதா. படியவாரிய தலை. லேசாய் சதைப் போட்ட கன்னங்கள். இதே கம்பெனியில் நீண்ட நாளாய் தூர் வாரிக்கொண்டிருக்கிறான். இன்னும் புதையலை எடுத்த பாடில்லை. சாஃப்ட்வேருமில்லாமல் ஹார்ட்வேருமில்லாமல் யாருக்குமே புரியாத மாதிரி வேலை பார்க்கிறான். அதனால் அவனுக்கு உண்மையிலேயே வேலை இருக்கா இல்லையா என்று நிறைய பேருக்கு நீண்ட நாட்களாய் சந்தேகம்.
வயசாயிட்டே போகுதுன்னு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் காதல் பண்ணியே தீரணும்னு ஏனோ ஒரு வைராக்கியம்.
நேரம் காலை ஒன்பது மணியாகப் போகிறது. மனசுக்குள் சின்ன குதூகலம். இனம் புரியாத ஒரு சந்தோஷம்.இதுவரை இப்படி ஆனதில்லை. இன்று மட்டும் இப்படி. இருக்கு காரணம் இருக்கு. இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனதை தொலைத்து விட்டான். அவளைப் பார்க்கப் போகிறான். அதான் இப்படி.
‘இந்த கணேஷும் ஹரீஷும் வந்து சேரமாட்டாங்களா? வெட்டிப்பயலுக. காலாகாலத்துக்கு கம்பெனிக்கு வர வேண்டியது தானே. தூங்குமூஞ்சிப் பயலுவ.’ இப்படி திட்டிக் கொண்டே இந்தக் கதைக்கு முக்கியமான அந்த இரு நபர்களை எதிர்நோக்கியிருந்தான். நேரம் ஆக ஆக அவன் படபடப்பு கூடிக்கொண்டே போனது.
கணேஷும் ஹரீஷூம் அந்த நேரத்தில்….
Bookmarks